களை கட்டும் லோக்சபா தேர்தல்: தமிழகம், புதுவையில் போட்டியிட அதிமுக விருப்பமனு தொடக்கம்
சென்னை: தமிழகம், புதுவை உள்பட 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் போட்டியிட விருப்ப மனுக்களை வழங்கும் பணிகளை அதிமுக இன்று தொடங்கியுள்ளது.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இது குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, தமிழ் நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில், அதிமுக சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புகின்ற கழக உடன்பிறப்புகள், தலைமைக் கழகத்தில் வருகின்ற 21.2.2024 புதன் கிழமை முதல் 1.3.2024 - வெள்ளிக் கிழமை வரை, தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை, உரிய கட்டணத் தொகையைச் செலுத்தி அதற்கான விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் தெளிவாகப் பூர்த்தி செய்து மீண்டும் தலைமைக் கழகத்தில் வழங்கலாம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். பொதுத் தொகுதிக்கு ரூ.20,000 மற்றும் தனி தொகுதிக்கு ரூ.15,000 கட்டணம் செலுத்தி விண்ணப்ப படிவங்களை பெற்றுக் கொள்ளலாம்" எனவும் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் தேதி அடுத்த மாதம் அறிவிக்கப்படவுள்ள நிலையில் தமிழகத்தில் கூட்டணி பேச்சுவார்த்தைகள், தொகுதி பங்கீடு உள்ளிட்டவை ஆலோசிக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து விருப்ப மனுவை பெறலாம் என திமுக முதல் கட்சியாக அறிவித்திருந்தது. அதைத் தொடர்ந்து தற்போது 2ஆவது கட்சியாக அதிமுக அறிவித்துள்ளது. இந்த விருப்பமனு வாங்கும் நிகழ்வில் லோக்சபா தேர்தலில் போட்டியிட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்த்தன் வந்திருந்தார். அப்போது வாரிசு அரசியல் குறித்து ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேட்ட போது என் மகன் விருப்பமனுவை வாங்குவது எப்படி வாரிசு அரசியல் ஆகும் என கேள்வி எழுப்பினார்.












Click it and Unblock the Notifications