கோபிசெட்டிப்பாளையத்தில் அதிமுக பொதுக் கூட்டத்தில் தொண்டர் பலி! எடப்பாடி பழனிசாமி இரங்கல்
சென்னை: கோபிசெட்டிப்பாளையத்தில் நேற்று நடந்த அதிமுகவின் எழுச்சி பயண பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகி ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவத்திற்கு பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் சொந்த ஊரான கோபிச்செட்டிபாளையத்தில் நேற்று அதிமுக பொதுக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். இதையொட்டி வழிநெடுகிலும் அதிமுக தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

பொதுக் கூட்டம் நடந்த இடத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்தனர். இந்த கூட்டத்தில் பிரச்சாரத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கோபிசெட்டிப்பாளையத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டுச் சென்றனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்துவிட்டார்.
இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட இரங்கல் செய்தியில் கோபிசெட்டிப்பாளையத்தில் நடைபெற்ற எழுச்சிப்பயணப் பொதுக்கூட்டத்திற்கு வந்த கொண்டையமபாளையம் பகுதியைச் சேர்ந்த
திரு. அர்ஜுனன் அவர்கள், திடீர் மாரடைப்பால் உயிரிழந்ததாக வரும் செய்தி அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன்.
திரு. அர்ஜுனன் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் தவெக சார்பில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் விஜய்யை பார்க்க வந்தவர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகிவிட்டனர். இது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அதிமுக கூட்டத்தில் ஒரு தொண்டர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோபிசெட்டிபாளையத்தில் தனக்கு கொடுக்கப்பட்ட வரவேற்பு குறித்து எடப்பாடி பழனிசாமி நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: #கோபிசெட்டிப்பாளையம் சட்டமன்றத் தொகுதியே குலுங்கும் அளவிற்கு, எழுச்சிப் பயணக் கூட்டத்திற்கு செல்லும் வழியெங்கும் மக்கள் எழுச்சியுற பெருந்திரளாக வந்து வாஞ்சையோடு வரவேற்றனர்.
இந்த எடப்பாடி பழனிசாமி, தனிப்பட்ட ஒருவன் அல்ல. நான் எப்போதும் 2 கோடி அஇஅதிமுக தொண்டரில் ஒருவனாகவே இருக்கிறேன்.
எத்தனையோ சோதனைக் கற்களை வெற்றிப் படிகளாக மாற்றிய இயக்கமான அஇஅதிமுக, அதே வெற்றி வரலாற்றை மீண்டும் 2026-ல் படைக்கும்!
2026-ல் பெருவாரியான தொகுதிகளில் வெற்றிபெற்று, @AIADMKOfficial ஆட்சி அமைந்ததும், முதல் வெற்றித் திருவிழா கோபிச்செட்டிபாளையத்தில் நடைபெறும்! என மற்றொரு ட்வீட்டில் தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications