இந்தியாவிலேயே முதல்முறை.. பிளஸ் 2 மாணவர்களுக்காக.. ஸ்டாலின் அரசு செய்த சூப்பர் சம்பவம்!
சென்னை: தமிழக பாடத்திட்டத்தில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகி உள்ளது. இந்தியாவிலேயே முதல்முறையாக பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்த ஐயங்களை தீர்க்க நான் முதல்வன் திட்டத்தின் தனியாக உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் 13-ம் தேதி முதல் ஏப். 3-ம் தேதி வரை நடந்தது. தமிழகம் முழுவதும் 3,324 மையங்களில் இந்த தேர்வு நடந்தது. சுமார் 8 லட்சத்து 36,593 பள்ளி மாணவர்கள், 23,747 தனித் தேர்வர்கள், 5,206 மாற்றுத் திறனாளிகள், 6 மூன்றாம் பாலினத்தவர், 90 சிறை கைதிகள் என மொத்தம் 8.65 லட்சம் பேர் பிளஸ் 2 தேர்வை எழுத பதிவு செய்திருந்தனர்.

இதில் 8.17 லட்சம் பேர் மட்டுமே தேர்வில் கலந்து கொண்டனர். சுமார் 48 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்வினை எழுதவில்லை. பிளஸ் 2 பொதுத்துதேர்வு முடிந்த நிலையில விடைத்தாள் திருத்தும் பணி 79 மையங்களில் ஏப்ரல் 10-ல் தொடங்கி 21-ம் தேதி வரை நடந்தது. இணையதளத்தில் மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட இதர பணிகளும் முடிந்துவிட்டன.
இந்நிலையில்,பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டார். இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் 94.3 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாணவர்கள் தேர்வு முடிவுகளை இணையதளங்கள் மூலம் அறியலாம். www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்து அறியலாம் என்று அரசு அறிவித்துள்ளது. மேலு தாங்கள் படித்த பள்ளிகள் மூலமாகவும் முடிவுகளை அறியலாம். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்கள் (NIC)மற்றும் அனைத்து மைய, கிளைநூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை பார்த்துக் கொள்ளலாம்.
இதுதவிர பள்ளிமாணவர்கள், தனித்தேர்வர்களுக்கான தேர்வு முடிவுகள் அவர்கள் பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வழியாகவும் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் அனுப்பப்படும். அதேபோல, பள்ளி மாணவர்களுக்கான அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை தலைமை ஆசிரியர்கள் www.dge.tn.gov.in எனும் வலைதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

இந்நிலையில் இந்தியாவிலேயே முதல்முறையாக பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்த ஐயங்களை தீர்க்க உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. நான் முதல்வன் திட்டத்தின் இந்த அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், "மே 8ம் தேதி (இன்று) 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின்றன. மாணவர்களே உங்கள் சந்தேகங்கள் அனைத்திற்கும் 14417 என்ற உதவி மையத்தை அணுகுங்கள். காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்கப்படும். மதிப்பெண்களை நினைத்து அச்சம் வேண்டாம். உங்கள் குறிக்கோள்களை நிறைவேற்ற உயர்கல்வி வழிகாட்டிக் குழு உங்களுக்கு உதவும்" இவ்வாறு அரசு அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications