சின்ன திருத்தம் மேடம்.. 15 எய்ம்ஸ் + ஒரு செங்கல்: நிர்மலா சீதாராமன் பேச்சுக்கு சு.வெங்கடேசன் ரிப்ளை!
சென்னை: 10 ஆண்டுகளில் 15 எய்ம்ஸ் ஏற்படுத்தப்பட்டுள்தாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் தெரிவித்த நிலையில், "ஒரு சிறு திருத்தம். 15 எய்ம்ஸ்களும் ஒரு செங்கல்லும்." எனத் தெரிவித்துள்ளார் மதுரை எம்.பி சு.வெங்கடேசன்.
17ஆவது மக்களவையின் கடைசி பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கி நடந்து வருகிறது. தேர்தலுக்குப் பிறகு புதிய அரசு இன்னும் சில மாதங்களில் பதவியேற்க உள்ள நிலையில், இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 58 நிமிடங்களில் தனது பட்ஜெட் உரையை நிறைவு செய்தார்.

பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கல்வித்துறையில் சீர்திருத்தங்களை புதிய தேசிய கல்விக் கொள்கை மூலம் செயல்படுத்தி வருகிறோம் என்றும், 10 ஆண்டுகளில் 7 ஐஐடிகள், 7 ஐஐஎம்கள், 15 எய்ம்ஸ், 390 பல்கலைக்கழகங்கள் நாடு முழுவதும் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டு 5 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இன்னும் கட்டுமான பணிகளே தொடங்கவில்லை. இந்நிலையில், நாடு முழுவதும் 15 எய்ம்ஸ்கள் அமைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தது விமர்சனங்களைக் கிளப்பியுள்ளது.
நிர்மலா சீதாராமனின் உரை குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள மதுரை எம்.பி சு.வெங்கடேசன், "கடந்த பத்து ஆண்டுகளில் நாடு முழுவதும் 15 எய்ம்ஸ்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் தெரிவித்தார். ஒரு சிறு திருத்தம். 15 எய்ம்ஸ்களும் ஒரு செங்கல்லும்." எனத் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் 'எய்ம்ஸ்' மருத்துவமனை அமைக்கப்படும் என 2015 பிப்ரவரி 28ஆம் தேதி மத்திய பாஜக அரசு அறிவித்தது. ஆனால், இடம் தேர்வு செய்தது முதல் நிதி ஒதுக்குவது வரை இந்தத் திட்டம் கடந்த 9 ஆண்டுகளாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. இதுவரை சுற்றுச்சுவர் தவிர கட்டுமான பணிகளே தொடங்கவில்லை.
கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அடிக்கல் நாட்டினார். பிரதமர் நரேந்திர மோடி மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அடிக்கல் நாட்டி 5 வருடங்கள் ஆகியும் இன்னும் எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தொடங்காத நிலையில் அதனை விமர்சிக்கும் வகையில் அண்மையில் பதிவிட்டிருந்தார் மதுரை எம்.பி சு.வெங்கடேசன்.
இந்நிலையில், இன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் உரையில் எய்ம்ஸ் பற்றி பேசியதை விமர்சித்து பதிவிட்டுள்ளார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மதுரை எம்.பி சு.வெங்கடேசன்.












Click it and Unblock the Notifications