கோடை லீவு ஓவர்! மதுரை, திருச்சியிலிருந்து சென்னை வர பலமடங்கு உயர்ந்த விமான கட்டணம்
சென்னை: கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படுவதால் மதுரை, கோவை, திருச்சி, தூத்துக்குடி ஆகிய இடங்களில் இருந்து சென்னைக்கு வருவதற்கான விமான கட்டணம் என்பது பன்மடங்கு உயர்ந்துள்ளதால் விமான பயணிகள் அவதியடைந்துள்ளனர்.
கோடை விடுமுறை முடிந்து இன்று மாநில அரசு பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகள், அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. முதல் நாளான இன்று மாணவர்கள் உற்சாகமாக பள்ளிக்கு சென்றுள்ளனர்.

இதற்காக நேற்றைய தினம் ஷூ, பள்ளி பை, பாக்ஸ், டிபன் பாக்ஸ், சாக்ஸ் உள்ளிட்டவைகளை வாங்க கடைகளில் கூட்டம் அலைமோதியது. இந்த நிலையில் பள்ளிகள் திறப்பால் மதுரை, கோவை, தூத்துக்குடி, திருச்சி ஆகிய பகுதிகளிலும் அவற்றை சுற்றியுள்ள பகுதிகளிலும் சொந்த ஊருக்கோ சுற்றுலா சென்றுள்ளவர்களோ சென்னை திரும்பும் நிலை உள்ளது.
இவர்களுக்கு ஆம்னி பேருந்துகள், ரயில்களில் சீட் கிடைக்காததால் விமான பயணத்தை மேற்கொள்ள முயன்றனர். இதனால் விமான கட்டணத்தை புக் செய்ய விரும்பிய நிலையில் அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
விமான கட்டணம் பன்மடங்கு உயர்த்தி காட்டியது. அதாவது மதுரையில் இருந்து சென்னைக்கு சாதாரண நாட்களில் ரூ 4,542 கட்டணம் என்றால் இன்று ரூ 18,127 கட்டணம் என காட்டியது. அது போல் தூத்துக்குடியில் இருந்து சென்னை வர ரூ 4214 கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.17401 கட்டணமாக காட்டியது.
அது போல் திருச்சியிலிருந்து சென்னையில் சாதாரண நாட்களில் ரூ 2334 கட்டணம் என்றால் தற்போது ரூ 9164 என கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதே நிலைதான் கோவையிலிருந்து சென்னைக்கும்.
பொதுவாக பண்டிகை நாட்கள், கோடை விடுமுறை தொடங்கும் போதுதான் கட்டணம் அதிகமாக இருக்கும். ஆனால் தற்போது விமான கட்டணமும் உயர்ந்துள்ளதால் பயணிகள் செய்வதறியாது திகைத்துள்ளனர். சிலர் இரு நாட்கள் கழித்து பேருந்துகளில் அல்லது ரயில்களில் டிக்கெட் புக் செய்து கொண்டு வரலாம் என திட்டமிட்டுள்ளனர். இன்னும் சிலர் கட்டணம் எவ்வளவு இருந்தாலும் சரி இன்றே ஊர் திரும்ப வேண்டும் என நினைத்து விமானத்தில் பயணிக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications