“சத்தியமா சொல்றேன்.. என் ரசிகர்களை நிச்சயம் ஒருநாள் பெருமைப்படுத்துவேன்”- வாக்கு கொடுத்த அஜித்குமார்
சென்னை: "எனக்கு ஆதரவு கொடுக்க திரண்டு வந்த ரசிகர்கள், நான் ரேஸ் ஓட்டுவதை, எங்கள் அணி பரிசு வெல்வதை பார்க்க முடியாதது வருத்தமாக இருக்கிறது. என் ரசிகர்களுக்கு சத்தியம் செய்கிறேன். நல்ல காலம் காத்திருக்கிறது.. எங்கள் அணி நிச்சயம் ஒருநாள் அவர்களை பெருமைப் படுத்தும்" என நடிகரும் கார் ரேஸருமான அஜித்குமார் தெரிவித்துள்ளார். துபாய் 24 hrs சீரிஸ் ரேஸிங்கில் அஜித்குமார் ரேஸிங் அணியின் கார் என்ஜின் கோளாறு காரணமாக ஓடுதளத்தில் தீப்பிடித்த நிலையில், அஜித்குமார் இவ்வாறு கூறியுள்ளார்.
நடிகரும் கார் ரேஸருமான அஜித்குமார் சமீப காலமாக கார் ரேஸில் தீவிரம் காட்டி வருகிறார். இளம் வயது முதலே கார் ரேசில் அஜித் ஆர்வம் கொண்டிருந்த நிலையில் இப்போது கார் ரேஸிங் அணி தொடங்கி தீவிரமாகப் பயணித்து வருகிறார். பல்வேறு நாடுகளில் நடைபெறும் பந்தயத்தில் அஜித் குமார் ரேசிங் அணி தொடர்ந்து பங்கேற்று வருகிறது.

துபாயில் உலகத்தரம் வாய்ந்த 'துபாய் 24 ஹவர்ஸ்' (Dubai 24 Hours) கார் பந்தயம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் நடிகர் அஜித்குமார் நடத்தி வரும் 'அஜித்குமார் ரேசிங்' (Ajith Kumar Racing) அணி பங்கேற்றுள்ளது. இந்நிலையில், கார் பந்தயத்தின் போது எதிர்பாராத விதமாக அஜித்தின் அணி கார் தீப்பிடித்து எரிந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அஜித்குமார் ரேசிங் அணியின் கார் பந்தய களத்தில் சீறிப்பாய்ந்து கொண்டிருந்தபோது, திடீரென காரின் என்ஜின் பகுதியில் இருந்து புகை கிளம்பியது. சில நொடிகளிலேயே கார் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. அப்போது காரை ஓட்டிச் சென்ற வீரர் அயர்டன் ரெடான்ட் நிலைமையை உணர்ந்து உடனடியாகச் செயல்பட்டு காரை நிறுத்தினார்.
கார் தீப்பிடித்த உடனேயே பாதுகாப்பு உபகரணங்களின் உதவியுடன் அயர்டன் ரெடான்ட் காரில் இருந்து வெளியே குதித்தார். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதுடன், அவர் எந்தவித காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். உடனடியாக அங்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இருப்பினும் கார் கடுமையாக சேதமடைந்தது.
இந்த விபத்து குறித்து முதற்கட்ட விசாரணையில், காரின் என்ஜின் கோளாறு காரணமாகவே தீ விபத்து ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிவேகமாக கார் இயங்கிக் கொண்டிருந்தபோது என்ஜினில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு கசிவை ஏற்படுத்தி தீ விபத்திற்கு காரணமானதாக கூறப்படுகிறது.
இந்த விபத்து அஜித் ரேசிங் அணிக்கு மட்டுமல்லாமல் அஜித்குமாரை ஆதரிக்கும் ஏராளமான ரசிகர்களுக்கும் ஒரு பெரும் ஏமாற்றமாக அமைந்துள்ளது. அஜித்துக்காக ஏராளமான ரசிகர்கள் இந்த கார் ரேஸை நேரில் பார்க்க குவிந்திருந்த நிலையில் அவர்கள் அப்செட் ஆகியுள்ளனர். இந்நிலையில், அஜித் குமார், தனது ரசிகர்களுக்கு உறுதி அளித்துள்ளார்.
"எனக்கு ஆதரவு கொடுக்க திரண்டு வந்த ரசிகர்கள், நான் ரேஸ் ஓட்டுவதை, எங்கள் அணி பரிசு வெல்வதை பார்க்க முடியாதது வருத்தமாக இருக்கிறது. என் ரசிகர்களுக்கு சத்தியம் செய்கிறேன்..
நல்ல காலம் காத்திருக்கிறது.. எங்கள் அணி நிச்சயம் ஒருநாள் அவர்களை பெருமைப் படுத்தும்" என அஜித்குமார் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications