யார் அந்த சென்னை ஐஏஎஸ் அதிகாரி.. அஜித்குமார்- நிகிதா இடையே என்ன பிரச்சனை.. ஐகோர்ட் வக்கீல் பேட்டி
சென்னை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் கோவிலில் தற்காலிக பணியில் இருந்த காவலாளி அஜித்குமாருக்கும், நிகிதாவுக்கும் சம்பவம் நடந்த அன்று பிரச்சனை ஏற்பட்டது என்றும், தொடர்ந்து நகை திருட்டு என அஜித்குமார் மீது போலீசில் நிகிதா, தனக்கு தெரிந்த ஐஏஎஸ் அதிகாரி மூலம் அழுத்தம் கொடுத்தார் என்றும் ஐகோர்ட் வழக்கறிஞர் ஒருவர் பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் கோவிலின் காவலாளி அஜித்குமாரை (தற்காலிக ஊழியர்) போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்த போதே, காவலாளி அஜித்குமார் உயிரிழந்தார். காவல் நிலையத்தில் இருந்து தப்ப முயன்ற போது, வலிப்பு ஏற்பட்டு அவர் இறந்ததால் முதலில் போலீசார் கூறினார்கள்.ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கையில் போலீசார் தாக்கியதில் தான் உடலில் 18 இடங்களில் காயங்கள் இருந்தாக தகவல்கள் வெளியானது.

இந்த விவகாரத்தை கையில் எடுத்த எதிர்க்கட்சிகள், காவல்துறைக்கு அமைச்சராக பொறுப்பில் உள்ள முதல்வர் ஸ்டாலினை கடுமையாக விமர்சித்தன. அதிமுக, பாஜக உள்ளிட்டட அரசியல் கட்சிகள் போராட்டத்தில் இறங்கின. சமூக வலைதளம் முழுக்க அஜித்குமார் பற்றி பரபரப்பாக விவாதம் நடந்து வருகிறது. இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் அஜித்குமார் வழக்கை கொலை வழக்காக மாற்ற சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது.
காவல்துறை விளக்கம்
இது தொடர்பாக போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் வெளியிட்ட அறிக்கையில், " சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் என்பவரின் இறப்புத் தொடர்பாக, 6 போலீசார் உடனடியாக அன்றே பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். காவல் நிலைய மரணம் தொடர்பான வழக்குகளில் பின்பற்ற வேண்டிய சட்ட நடைமுறைகள் அனைத்தும் முறையாக பின்பற்றப்பட்டு உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நடைமுறைகளின் கீழ் மேற்கொள்ளப்பட்ட, பிரேத பரிசோதனை மற்றும் நீதி விசாரணை அறிக்கைகளின் முடிவுகள் இன்று (அதாவது நேற்று) இரவு கிடைத்தவுடன் எந்த காலதாமதமும் இன்றி, உடனடியாக இவ்வழக்கு சம்பந்தப்பட்ட சட்டப்பிரிவுகளில உரிய மாற்றங்கள் செய்யப்பட்டு, சம்பவத்தில் தொடர்புடைய 5 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் காவல்துறை நியாயமான, வெளிப்படையான மற்றும் பாரபட்சமற்ற முறையில் செயல்பட்டுள்ளது" என்று கூறினார்.
மாரீஸ்குமார் குற்றச்சாட்டு
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணைக்கு வந்த போது, அதிமுக வழக்கறிஞர் அணி மாநில இணைச் செயலாளரான வழக்கறிஞர் மாரீஸ்குமார் வாதிடுகையில், "இந்த வழக்கில் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் காவல்துறைக்கு அழுத்தம் கொடுத்துள்ளார்" என்று குற்றம்சாட்டினார். இதையடுத்து நீதிமன்றமும், அஜித்குமாரை விசாரணைக்காக வெவ்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்ல யார் காவல்துறையினருக்கு அதிகாரம் கொடுத்தது? சிவகங்கை மாவட்ட எஸ்பி ஆஷிஷ் ராவத் உடனடியாக காத்திருப்போர் பட்டியலுக்கு அனுப்பப்பட்டதற்கு என்ன காரணம் என்று கேள்வி எழுப்பி இருந்தது.
500 கேட்டார் அஜித் குமார்
இதனிடையே மடப்புரத்தில் நிகதா மற்றும் காவலாளி அஜித்குமார் இடையே என்ன நடந்தது என்று சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவர் அளித்த பேட்டியும் வலைத்தளங்களில் பரவி வருகிறது. அவர் கூறுகையில், சம்பவம் நடந்த அன்று சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் கோவிலில் சக்கர நாற்காலியை எடுத்து வந்து, கோவில் வளாகம் முழுவதும் சிவகாமி அம்மாளை அழைத்துச்செல்ல தனக்கு ரூ.500 தர வேண்டும் என அஜித்குமார் கேட்டாராம். அதற்கு நிகிதா ரூ.100 தருவதாக கூறினாராம். பின்னர் பேரம் பேசியதில் ரூ.200 தருவேன் எனக்கூறினாராம். ஆனால், ரூ.500 தர வேண்டும் என அஜித்குமார் கேட்டதால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதாம்.
நகை திருட்டு புகார்
அதனாலேயே நகை திருட்டு என அஜித்குமார் மீது போலீசில் நிகிதா கூறியதுடன், தனக்கு தெரிந்த சென்னையில் உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரை தொடர்பு கொண்டு நகை திருட்டு போனதாக தெரிவித்த தகவலால் போலீசாருக்கு மேலிடத்தில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டதாம். அதனால் மானாமதுரையில் இருந்து வந்த தனிப்படை போலீசார் அஜித்குமாரை நகையை கேட்டு அடித்துக்கொன்றார்கள் " என்று அந்த வக்கீல் பேட்டியில் கூறி இருக்கிறார். இது சமூக ஊடகங்களில் பரவி விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது.அதேபோல் நிகிதா மீது பண மோசடி வழக்குகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளதால், அதுவும் தற்போது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications