திமுகவின் பொய் விளம்பரம்... எல்லாம் அதிமுகவின் திட்டங்கள் - லிஸ்டு போட்ட எடப்பாடி பழனிசாமி
சென்னை: திமுக ஆட்சிக்கு வந்த ஓராண்டு காலத்தில் அதிமுக கொண்டு வந்த திட்டங்களையே திறந்து வைப்பதாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
Recommended Video
திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவுபெற்றதை அடுத்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
இதனை அதிமுகவினர் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். அப்போது முன்னாள் முதலமைச்சரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.

எல்லாம் அதிமுக அரசின் திட்டங்கள்
அப்போது பேசிய அவர், "திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. திமுக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியதாக ஒரு பொய்யான விளம்பரத்தை முதலமைச்சர் செய்தியின் வாயிலாக வெளியிட்டு உள்ளார். சட்டமன்றத்திலும் உரையாற்றி இருக்கிறார். திமுக ஆட்சிக்கு வந்த ஓராண்டில் சட்டம் ஒழுங்கு முழுமையாக கெட்டுவிட்டது.
அதிமுக அரசு கொண்டு வந்து முடிவுற்ற திட்டங்களை தான் திமுக ஆட்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து வருகிறார்.

புதிய திட்டங்கள் இல்லை
அம்மா அரசு கொண்டு வந்த திட்டத்துக்கு இன்று அடிக்கல் நாட்டிக்கொண்டிருக்கிறார். இந்த ஓராண்டு கால திமுக ஆட்சியில் எந்தவொரு புதிய திட்டமும் அறிவிக்கப்படவில்லை. நடைமுறைப்படுத்தவில்லை. ஆனால், ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோதும் அவரது மறைவுக்கு பிறகு அதிமுக அரசு எண்ணற்ற திட்டங்களை தமிழகத்தில் நிறைவேற்றி அதனால் மக்கள் அதிகளவில் பயனடைந்து இருக்கிறார்கள்." எனக் கூறிய எடப்பாடி பழனிசாமி அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டார்.

காவிரி நதிநீர் பிரச்சனை
"50 ஆண்டுகாலமாக தீர்க்கமுடியாத காவிரி நதிநீர் பிரச்சனைக்கு தீர்வுகண்டது அதிமுக அரசு. காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகள் மாசுபடுவதை தடுக்க அதிமுக அரசு திட்டம் தீட்டி அதை நான் பிரதமரிடம் வழங்கினேன். உடனே அதை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது. குடிமராமத்து திட்டத்தை அதிமுக அரசு நிறைவேற்றியதால் சுமார் 5,586 நீர் நிலைகள் தூர்வாரப்பட்டது. ரூ.1,082 கோடி இதற்காக செலவிடப்பட்டது. விவசாயிகளுக்கு பயிர்காப்பீட்டு திட்டத்தின் மூலமாக இந்தியாவிலேயே அதிகளவில் இழப்பீட்டை பெற்றுக்கொடுத்தோம். சுமார் ரூ.9,300 கோடி இழப்பீடு பெற்றுத்தரப்பட்டது.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்
விவசாயிகளின் பயிர்கடன் ரூ.5,318 கோடி தள்ளுபடி செய்யப்பட்டதால் 12 லட்சம் விவசாயிகள் பயனடைந்தனர். நான் முதலமைச்சராக இருந்தபோது இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.12,110 கோடி பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் சுமார் 14 லட்சம் விவசாயிகள் பயனடைந்தனர். முதன்முதலாக வறட்சிக்கு நிவாரணமாக ரூ.2,247 கோடி வழங்கியது அதிமுக அரசு. காவிரி - வைகை - குண்டாறு இணைப்பு திட்டத்தை அதிமுக அரசு தொடங்கி வைத்தது. மேட்டூர் அணையிலிருந்து வெளியேறும் உபரி நீரை வறண்ட ஏரிகளுக்கு திருப்பிவிடும் பணி தொடங்கி வைக்கப்பட்டது. டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றினோம்.

புதிய மாவட்டங்கள்
தடையில்லா மின்சாரத்தை விவசாயிகளுக்கு வழங்கினோம். 6 புதிய மாவட்டங்கள், 7 கோட்டங்கள், 27 வட்டங்கள் புதிதாக உருவாக்கப்பட்டது அதிமுக அரசு செய்த சாதனைகள். முதலமைச்சர் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தை அறிவித்து மக்களின் குறைகளை பெற்று தீர்வு கண்டோம். இதன் மூலமாக 9 லட்சத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. உயர்கல்வி படிக்கும் பெண்களுக்கு தாலிக்கு தங்கம் திட்டம், அம்மா இருசக்கர வாகனங்கள் போன்ற பல திட்டங்களை அதிமுக அரசு நிறைவேற்றியதாக அவர் விளக்கமளித்தார்.












Click it and Unblock the Notifications