அதானி மீதான குற்றச்சாட்டு! நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை தேவை! மீண்டும் வலியுறுத்தும் எஸ்டிபிஐ!
அதானியின் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்யச் சொல்லும் எஸ்.டி.பி.ஐ. கட்சி.
சென்னை: அதானி மீதான குற்றச்சாட்டு குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என மீண்டும் எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது.
அதேபோல் அதானியின் பாஸ்போர்ட்டை உடனடியாக பறிமுதல் செய்ய வேண்டும் எனவும் அக்கட்சி வலியுறுத்துகிறது.
இது தொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக்கும், தேசியத் தலைவர் பைஸியும் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது;

வேலை வாய்ப்பு
''வளர்ந்து வரும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவோம் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படாததால், நாட்டில் மிகப்பெரிய வேலைவாய்ப்பின்மை ஏற்பட்டுள்ளது. புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம், என பிரதமர் வாக்குறுதி அளிக்க போதிலும், 65 லட்சத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களில் நியமனம் செய்யப்படாததால், பொதுப்பணித்துறையின் செயல்பாடு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ''

அதானி பாஸ்போர்ட்
''அதானி குழும ஊழல் முறைகேடு குறித்து உயர்மட்ட விசாரணை மேற்கொள்ள வேண்டும்.பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கும் உத்தரவிட வேண்டும். மேலும், கவுதம் அதானியின் பாஸ்போர்ட்டை உடனடியாக பறிமுதல் செய்து அவர் வெளிநாடு செல்லவில்லை என்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும். ஏனெனில், கடந்த காலங்களில் பல உயர்மட்ட மோசடி வழக்குகளில் தொடர்புடையவர்கள் பலர் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளதால் அரசு உடனடியாக இத்தகைய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.''

ஆளுநர் மீது விமர்சனம்
''மேலும், அதானியின் அனைத்து வணிகக் கணக்குகளையும், நிதி பரிவர்த்தனைகளையும் கண்காணித்து, அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை நடவடிக்கைகளுக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம். ஆளுநர் என்கிற பதவியின் தகுதிக்கு பொருந்தாத வகையிலேயே தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன. ஆளுநர் பதவிக்குரிய பணிகளை செய்யாமல், சனாதனத்தை பரப்பும், இந்துத்துவ சிந்தனைகளை பரப்பும் நடவடிக்கைகளிலேயே அவர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றார்.''

கிடப்பில் மசோதா
''மாநில அரசின் நீட் விலக்கு, ஆன்லைன் ரம்மி தடை உள்ளிட்ட 21 மசோதாக்கள் மீது எவ்வித நடவடிக்கை எடுக்காமல் இழுத்தடித்து வரும் தமிழக ஆளுநர், தமிழக சட்டப்பேரவையில் சட்டமன்ற ஜனநாயகத்திற்கு கேடுவிளைவிக்கும் வகையில் உரை நிகழ்த்தினார். அரசியல் கட்சிகளுக்கு இணையாக பாஜகவின் துணை அணியாகவும், ஆளுநர் பதவிக்கும் அதன் செயல்பாடுகளுக்கும் ஒரு தவறான முன்மாதிரியை உருவாக்கும் வகையில் அவர் செயல்பட்டு வருகின்றார்.''

தமிழக அரசு
''ஆளுநரின் செயல்பாட்டை வன்மையாக கண்டிப்பதோடு, ஆளுநரை தமிழகத்தை விட்டு வெளியேற்றும் நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறோம்.'' இவ்வாறு அவர்கள் இருவரும் கூறியுள்ளனர்.











Click it and Unblock the Notifications