காவல் மரணங்கள், வரதட்சணை கொடுமை.. முதலமைச்சருக்கு மார்க் என்ன? சத்தியம் டிவி சர்வே
சென்னை: காவல் மரணங்கள் மற்றும் வரதட்சனை கொடுமை பிரச்சனைகள் குறித்து தமிழக அரசு மீது சரமாரியாக குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. இந்நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் செயல்பாடு எப்படி உள்ளது? என்பது குறித்து சத்தியம் டிவி கணிப்பை வெளியிட்டிருக்கிறது.
எதிர்வரும் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 8 மாத காலங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், மாநில அரசு மிக கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தல்கள் முன் வந்திருக்கின்றன. சட்டம் ஒழுங்கை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அதே நேரத்தில், மிகவும் இறுக்கி பிடித்து குரல் வலையை நெறித்துவிட வேண்டாம் என்றும் அட்வைஸ்கள் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு பறந்திருக்கிறது.

ஆனால் இதையும் மீறித்தான் திருப்புவனம் அஜித்குமாரின் மரணம் நடந்திருக்கிறது. இந்த வழக்கில் நகை தொலைந்ததாக சொல்லப்பட்டாலும் அது இப்போது வரை கண்டுபிடிக்கப்படவே இல்லை. காவல் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது சிபிஐ விசாரணையை மாநில அரசே பரிந்துரைத்திருக்கிறது. அதேபோல, குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் நாங்கள் நிற்போம் என்றும் முதல்வர் கூறியிருக்கிறார்.
இந்த பிரச்சனை ஓரளவுக்கு முடிவுக்கு வந்திருந்தாலும், வரதட்சணை பிரச்சனை இப்போதைக்கு முடியாது போல தெரிகிறது. திருப்பூர் ரிதன்யாவில் தொடங்கிய சர்ச்சை தற்போது மதுரை காதக்கிணறு தங்கப் பிரியாவை வந்து நிற்கிறது. இத்தனை சவரன் கொடு, அத்தனை சவரன் கொடு என்று டார்ச்சர் செய்ததில் ரிதன்யா தற்கொலை செய்துக்கொண்டார். எதிர்த்து கேள்வி எழுப்பியதால் தங்கப்பிரியா கடுமையாக தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
இதில் கவலைப்படக்கூடிய இரண்டு விஷயங்கள் இருக்கிறது. ஒன்று, தங்கப் பிரியா வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருப்பவரில் அவரது கணவரும் மாமனாரும் காவலர்கள். கணவன் பூபாலன் காவலராகவும், மாமனார் செந்தில்குமரன் காவல் ஆய்வாளராகவம் உள்ளார். சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டியவர்களே குற்றத்தில் ஈடுபட்டிருப்பது தமிழக காவல்துறைக்கு மற்றொரு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டாவது விஷயம், கணவர் பூபாலன் தனது மனைவி தங்கப்பிரியாவை கடுமையாக தாக்கியது குறித்து சிலாகித்து சிரித்து பேசி தனது தங்கையுடன் விஷயத்தை பகிர்ந்துக்கொண்டிருக்கிறார். இது தொடர்பான ஆடியோ சோஷியல் மீடியாவில் தற்போது லீக் ஆகியிருக்கிறது. தான் செய்தது குற்றம் என்கிற உணர்வு துளி கூட இல்லாமல் இப்படி வெளிப்படையாகவே பேசி ரசிப்பதை எப்படி ஏற்க முடியும்? என்று கேள்விகள் எழுந்திருக்கின்றன.
இதற்கிடையில்தான் சத்தியம் டிவி நடத்தி கணிப்பு வெளியாகியுள்ளது. அதில் முதலமைச்சரின் செயல்பாடுகளுக்கு 13% பேர் மிகச்சிறப்பு என்றும், 31% பேர் சிறப்பு என்றும் 42% சுமார் என்றும், 11% பேர் மோசம் என்றும் கருத்துகளை தெரிவித்திருக்கின்றன. எப்படி பார்த்தாலும் 44% பேர் முதல்வரின் செயல்பாடுகளை சிறப்பு என்று பாராட்டியுள்ளனர். 3% பேர் செயல்பாடுகள் குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.
காவல் நிலைய மரணங்கள், வரதட்சணை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வை நோக்கி இந்த அரசு நகரும் பட்சத்தில் சுமார் என்று சொல்லும் 42% மக்களும் சூப்பர் என்று சொல்வார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.












Click it and Unblock the Notifications