"மெட்ரோ + கனமழை.." சென்னைக்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து? என்ன செய்தால் தப்பிக்க முடியும்!
சென்னை: இந்தாண்டு பருவமழை தொடங்க சில மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தலைநகர் சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளில் சிக்கல் ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக மெட்ரோ கட்டுமான பணிகளால் சென்னையில் பல்வேறு இடங்களிலும் மழைநீர் வடிகால் பணிகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் விரைவில் பருவமழை தொடங்க உள்ள நிலையில், தண்ணீர் தேங்காமல் இருக்க மழைநீர் வடிகால் பணிகளை அமைக்கும் பணிகளில் சென்னை மாநகராட்சி தீவிரம் காட்டி வருகிறது.

சென்னையில் மொத்தம் 15 மண்டலங்கள் உள்ள நிலையில், அனைத்து மண்டலங்களிலும் மழைநீர் வடிகால் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதில் ஏழு மண்டலங்களில் மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக மழைநீர் வடிகால்கள் பணிகள் தாமதமாகியுள்ளன.
பாதிப்பு: முன்னதாக கடந்த ஜூன் மாதம் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் மெட்ரோ அதிகாரிகள் இடையே கட்டுமானம் தொடர்பாக ஆலோசனை நடந்தது. அதில் மாதவரம், திரு.வி.க.நகர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், சோழிங்கநல்லூர் ஆகிய மண்டலங்களின் சில பகுதிகளில் மெட்ரோ கட்டுமானம் காரணமாக மழைநீர் வடிகால் பணியை மேற்கொள்வதில் தாமதம் ஏற்படுவதாக மாநகராட்சி அதிகாரிகள் கவலை தெரிவித்தனர்.
சிக்கல்: உதாரணமாக மாதவரம் பால் காலனியில் விடுபட்ட மழைநீர் வடிகால் சுமார் 200 மீட்டர் இருந்துள்ளது. இருப்பினும், அதை மேற்கொள்ள சிஎம்ஆர்எல் அனுமதி வழங்காத நிலையில், அந்த 200 மீட்டர் மழைநீர் வடிகால் பணிகள் நிலுவையில் இருக்கிறது. மெட்ரோ கட்டுமானம் காரணமாக ஜவஹர்லால் நேரு சாலையில் 200 அடிக்கு நெடுஞ்சாலை வடிகால் இடிக்கப்பட்டுள்ளது. அதுவும் மழைக் காலம் தொடங்கும் முன்பு இந்த பாதையைப் புனரமைக்க வேண்டும். ஆற்காடு ரோடு எஸ்டபிள்யூடி பகுதியிலும் சேதமடைந்துள்ளாக கூறப்படுகிறது.
அதேபோல கீழ்ப்பாக்கத்தில் உள்ள மில்லர்ஸ் சாலை, புரசைவாக்கம் ஹைரோடு, பர்னபி ரோடு போன்ற பகுதிகளிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.. இதனால் சமீபத்தில் இந்த பகுதிகளில் மழை பெய்த போது தண்ணீரை அகற்ற மோட்டர்கள் பயன்படுத்தப்பட்டன. இருப்பினும், அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்கு பருவமழையின் போது எதிர்பார்க்காத அளவுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் தற்போது இருக்கும் மோட்டர்கள் தண்ணீரை அகற்ற போதுமானதாக இருக்காது. மோட்டர் திறனை அப்கிரேட் செய்தாக வேண்டும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதிகாரிகள் விளக்கம்: இது குறித்து மூத்த மெட்ரோ ரயில் அதிகாரி கூறுகையில், "மழைநீர் வடிகால் பணிகள் பாதிக்கப்பட்ட இடங்களில் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.. சிஎம்ஆர்எல் பணிகளால் நகரில் வெள்ளம் ஏற்படாமல் இருக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மெட்ரோ நிர்வாகம் எடுக்கும்" என்றார். பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்ற மற்றொரு கூட்டம் நடந்துள்ளதாகவும் அதில் பெரும்பாலான பிரச்சினைகளில் தீர்வு எட்டப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நடவடிக்கை: இந்த முறை சென்னையில் பருவமழை சமயத்தில் தண்ணீர் தேங்கக்கூடாது என்பதில் மாநகராட்சி உறுதியாக இருக்கிறது. இதனால் மழைநீர் வடிகால் பாதைகளில் தூர்வாரும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.. மொத்தம் 2,624 கிமீ மழைநீர் வடிகால்களில் 1,242 கிமீ தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டு, 755 கிமீ பணிகள் நிறைவடைந்துள்ளன.












Click it and Unblock the Notifications