ஆசை யாரை விட்டுச்சு.. ரிதன்யா கண்ணீர் ஈரம் காயும் முன்.. சுதர்சன் மீது பாய்ந்த புகார்.. என்னாச்சு?
சென்னை: வரதட்சணை கொடுமையால் ரிதன்யா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. இந்த மரணம் தமிழ்நாடு முழுக்க வரதட்சணைக்கு எதிரான அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இப்படிப்பட்ட நிலையில் சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருக்கும் சுதர்சன் வரதட்சணை வழக்கில் சிக்கி இருக்கிறார். இவர் மீது கடந்த வாரம் புகார் வைக்கப்பட்ட நிலையில் சுதர்சன் செய்த மோசமான செயல்கள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
யூடியூபில் "டெக் சூப்பர் ஸ்டார்" என அறியப்படும் சுதர்சன், மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்தவர். இவர், வெள்ளாளன் செட்டியார் சங்கத் தலைவர் சுந்தரராஜனின் மகனாவார். தனியார் மருத்துவமனையில் பணியாற்றிய டாக்டர் விமலாதேவியை சுதர்சன் இவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

வரதட்சணை புகார் தொடர்பான விசாரணைகள்
திருமணத்திற்குப் பிறகு, சுதர்சன் தனது புதிய யூடியூப் சேனலைத் தொடங்கினார். ஏற்கனவே இருந்த சேனலை விட்டு வெளியேறிய இவர் "டெக் சூப்பர் ஸ்டார்" என்ற சேனலை தொடங்கினார். பழைய சேனலிலேயே இவர் மீது திருட்டு புகார்கள் வைக்கப்பட்டன. இந்த நிலையில் வீடு கட்ட பணம் தேவை என்று கூறி, மனைவியிடம் நகைகளை கேட்டதாக கூறப்படுகிறது. விமலாதேவி, நகைகளை கொடுத்தும், மேலும் பணம் கொண்டு வருமாறு மாமியார் அழுத்தம் கொடுத்ததாக சொல்லப்படுகிறது.
அதோடு கெட்ட கெட்ட வார்த்தைகளில் சுதர்சன் பேசியதாக தெரிகிறது. டாக்டர் விமலாதேவி அளித்த புகாரின் பேரில், கணவர் சுதர்சன், மாமியார் மாலா, மாமனார் சுந்தரராஜன், நாத்தனார் சக்திப்பிரியா மற்றும் விக்னேஸ்வரன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வரதட்சணை தடுப்புச் சட்டம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழ் பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன.
கொத்து கொத்தாக வரதட்சணை
2024 மார்ச் 1 அன்று, தேனியில் உள்ள திருமண மண்டபத்தில் இந்த ஜோடி திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தின்போது, டாக்டர் விமலாதேவி 30 சவரன் நகை, ₹5 லட்சம் ரொக்கம் மற்றும் பிற பொருட்களை வரதட்சணையாக கொடுத்ததாக தகவல் வெளியானது. திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனைகளால், விமலாதேவியை அவரது பெற்றோர் வீட்டிற்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. குழந்தை பிறந்த பிறகும், அவரை பார்க்கவோ அல்லது வீட்டிற்கு அழைக்கவோ எந்த முயற்சியும் எடுக்கவில்லை என தெரிகிறது.
சமீபத்தில், இரு குடும்பத்தினர் இடையே வீரபாண்டி கோயிலில் கிராம பெரியவர்கள் முன்னிலையில் பஞ்சாயத்து கூட்டம் நடைபெற்றது. டாக்டர் விமலாதேவியின் குடும்பத்தினர் ₹5 லட்சம் வழங்க முன்வந்தனர். ஆனால், சுதர்சனின் குடும்பத்தினர் அதை ஏற்க மறுத்துவிட்டதாக தெரிகிறது. மேலும், தேவைகளை நிறைவேற்றாவிட்டால் வன்முறையில் ஈடுபடுவோம் என்று மிரட்டியதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுதர்சன் தொடர்ந்து விமலாதேவியை போனில் துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்தே போலீசில் புகார் தரப்பட்டது. சுதர்சனும் அவரது குடும்பத்தினரும் தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது. போலீசார் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இருவரும் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், இரு குடும்பத்தினரும் திருமணத்திற்கு சம்மதித்தனர். டாக்டர் விமலாதேவி கர்ப்பமாக இருந்தபோதுதான், சுதர்சன் மனைவியிடம் நகைகளை கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் தலைமறைவாகிவிட்ட நிலையில், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து மேலும் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications