அதிமுகவில் சலசலப்பு.. நேரம்பார்த்து திமுக சம்பவம்.. மாஜி அதிமுகவினருக்கு பொறுப்பு.. காரணமே இதுதான்!
சென்னை: சில நாட்களுக்கு முன்பாக கோவையில் எடப்பாடி பழனிசாமிக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் அதிமுக மூத்த நிர்வாகியான செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. இதற்கு அவர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெறாததால், அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்று விளக்கம் அளித்தார்.
ஆனால் அதன்பின் நடந்த அதிமுக பொதுக்கூட்டங்களில் எடப்பாடி பழனிசாமியின் பெயரை செங்கோட்டையன் ஒருமுறை கூட சொல்லவில்லை. இதனைத் தொடர்ந்து அதிமுகவின் கேபி முனுசாமி தரப்பில், செங்கோட்டையன் விஸ்வாசமானவர். எவ்வளவு சோதனைகள் வந்தாலும், அவர் அதிமுகவுக்கு உறுதுணையாக இருப்பார் என்று தெரிவித்தார்.

இதன் மூலமாக அதிமுக மூத்த நிர்வாகிகள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது வெளிப்படையாகவே தெரிய வந்தது. அதுமட்டுமல்லாமல் ஓபிஎஸ் தரப்பில் எந்த நிபந்தனையும் இன்றி அதிமுகவில் இணையத் தயார் என்று அறிவித்தார். இதனால் அதிமுகவில் மீண்டும் சலசலப்பு அதிகரித்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு மட்டுமே இருக்கும் சூழலில், அதிமுகவில் உட்கட்சி பிரச்சனை ஏற்பட்டுள்ளது பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
அதிமுகவில் உட்கட்சி பிரச்சனை தொடங்கியுள்ள நிலையில், திமுக தரப்பில் சரியான நேரம் பார்த்து மாவட்டச் செயலாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர். அதிலும் அதிமுகவில் இருந்து விலகி வந்து திமுகவில் இணைந்த இரண்டு பேருக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
பெருந்துறை தொகுதியை உள்ளடக்கிய ஈரோடு மத்திய மாவட்டத்திற்கு தோப்பு வெங்கடாச்சலம் பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் விழுப்புரம் மத்திய மாவட்ட பொறுப்பாளராக ஆர்.லட்சுமணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இருவருமே அதிமுகவில் இருந்து பிரிந்து திமுகவில் இணைந்தவர்கள்.
இந்த இருவருக்கும் முக்கிய பொறுப்பு அளிக்கப்பட்டிருப்பதன் மூலமாக திமுக தரப்பில் மறைமுக செய்தி ஒன்றும் அதிமுக நிர்வாகிகளுக்கு சொல்லப்பட்டிருப்பதாக பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு மட்டுமே இருக்கும் நிலையில், அதிமுகவில் இருந்து விலகி திமுகவுக்கு வந்தவர்களுக்கு முக்கியத்துவம் அளித்து பொறுப்புகள் அளிக்கப்படுகின்றன.
இதனால் அதிமுகவின் நிர்வாகிகளுக்கு மறைமுக அழைப்பு விடுப்பதோடு, அதிமுகவின் வாக்கு வங்கியையும் குறி வைத்து திமுக காய்களை நகர்த்த தொடங்கி இருப்பதாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுகவினர் பலரும் திமுகவுக்கு வாக்கு அளித்ததாக அமைச்சர் ரகுபதி கூறி வருகிறார். இதனால் அதனை 2026லும் அறுவடை செய்யவே திமுக செயல்படுவதாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications