அண்ணாமலைக்கு மிஷன் இம்பாசிபிள்! ஓபிஎஸ் உங்களுக்கு..எடப்பாடி அவருக்கு! ஏரியா பிரித்து கொடுத்த அமித்ஷா
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக பாஜக கூட்டணியை வலுப்படுத்த வேண்டும் என விரும்புகிறார் அமித்ஷா. ஆனால் ஓபிஎஸ், டிடிவி தினகரனை கூட்டணியில் சேர்க்க முடியாது என பிடிவாதமாக இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. இந்த நிலையில் அதிமுகவை சரி செய்ய நயினார் நாகேந்திரனையும், ஓபிஎஸ் டிடிவி தினகரன் சரி செய்ய அண்ணாமலையையும் பயன்படுத்தி வருகிறார் அமித்ஷா.
2026 இல் எப்படியும் திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதற்காக பல்வேறு யூகங்களை அமித் ஷா கையில் வைத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம் என சுளூரைத்து வருகிறார் திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின்.
ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலை இருந்தாலும் அதிமுக வலுவான கூட்டணியை உருவாக்காததால் இன்னும் திமுகவுக்கு சாதகமான சூழலே அரசியல் களத்தில் நிலவுகிறத. இந்த நிலையில் கூட்டணியை பலப்படுத்தி திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என தீவிரமாக செயல்பட்டு வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி.

2026 தேர்தல்
மக்களவைத் தேர்தலில் அதிமுகவும் பாஜகவும் தனித்துப் போட்டியிட்டதால் தான் படுதோல்வியை சந்திக்க நேரிட்டது. இனி அந்த தவறை செய்யாமல் இரு கட்சிகளும் இணைந்தால் 41% வாக்குகள் கிடைக்கும் என திட்டமிட்டு இருக்கிறார் எடப்பாடி. அதனால்தான் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தார். கடந்த காலங்களில் கூட்டணியில் இருந்த பாமக தேமுதிக உடனும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில் அதிமுகவின் அடிப்படை வாக்கு வங்கியான முக்குலத்தோர் வாக்குகள் எடப்பாடி பழனிச்சாமியால் பிளவு படுவதை அமித்ஷா விரும்பவில்லை.
ஓபிஎஸ் டிடிவி
அதாவது சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் கட்சியில் இருந்து விலக்கப்பட்ட நிலையில் கூட்டணியில் இருந்தும் விலகினர். இதனால் அதிமுகவின் வாக்கு வங்கி கடுமையாக சரிவடையும் என்பதுதான் அமித்ஷாவின் கணக்கு. இந்த நிலையில் ஓபிஎஸ், டிடிவி தினகரனை கூட்டணியில் அனுமதிக்க முடியாது என சொல்லி வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி. அதே நேரத்தில் டெல்லி பயணம் மேற்கொண்ட அண்ணாமலை அடுத்தடுத்து ஓபிஎஸ், டிடிவி தினகரன் சந்தித்து மீண்டும் டெல்லி சென்று இருக்கிறார்.
அமித்ஷா திட்டம்
மேலும், இப்போதும் அமித்ஷாவுடன் சந்திப்பை மேற்கொண்டு இருக்கும் நிலையில் அவரது அறிவுறுத்தலின் பெயரில்தான் ஓபிஎஸ் டிடியை சந்தித்தாரா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி தரப்புடன் நயினார் நாகேந்திரன் நெருக்கமாக இருக்கும் நிலையில், அண்ணாமலையின் செயல்பாடுகளால் எடப்பாடி பழனிச்சாமி கடும் அதிருப்தியை அடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இது எல்லாமே அமித்ஷாவின் ஏற்பாடு தான் என்கின்றனர் பாஜகவினர்.
நயினார் நாகேந்திரன்
அதாவது அதிமுகவிலிருந்து விலகிய நயினார் நாகேந்திரன் பாஜகவில் சேர்ந்த போது அவருக்கு துணை தலைவர் பதவி வழங்கப்பட்டது. இதற்கிடையே அண்ணாமலையின் செயல்பாடுகளால் அதிமுக பாஜக கூட்டணி உடைந்த நிலையில் மீண்டும் சேரும்போது அவரை தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என எடப்பாடி தரப்பு கூறியது. அதை பாஜகவும் செய்தது. இதனால் கடந்த சில மாதங்களாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தாலும் மறைமுகமாக பாஜக தலைமை கொடுத்த வேலைகளை கச்சிதமாக முடித்து வந்தார் அண்ணாமலை.
அண்ணாமலை
அப்படித்தான் தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் ஓபிஎஸ் டிடிவி தினகரன் சேர்க்கும் முயற்சியை அண்ணாமலை மேற்கொண்டு வருகிறார். அதிமுகவுடன் பேசுவதற்கு நயினார் நாகேந்திரனையும், ஓ பன்னீர்செல்வம், டிடிவி தினகரனுடன் பேசுவதற்கு அண்ணாமலையையும் நியமித்ததே அமித்ஷா தான் எனவும், ஓபிஎஸ், டிடிவி தினகரன் அதிமுக கூட்டணியில் சேர்க்க வேண்டாம் பாஜக கூட்டணியில் இணைத்துக் கொள்கிறோம் என அமித்ஷா சொன்னதாகவும், பாஜகவுக்கு ஒதுக்கும் சீட்டுகளில் பன்னீர் செல்வத்துக்கும் டிடிவி தினகரன் தரப்புக்கும் சீட்டுகளை நாங்கள் ஒதுக்கி கொள்கிறோம் என அமித்ஷா சொன்னதாக சொல்லப்படுகிறது.
இது மட்டும் அல்ல மேலும் பல திட்டங்களை அனுப்பி இருப்பதாகவும் வரும் காலங்களில் ஒவ்வொன்றாக அண்ணாமலை, மூலம் அதனை செயல்படுத்துவார் என்கின்றனர் விவரம் அறிந்த பாஜகவினர்.












Click it and Unblock the Notifications