திமுக இரட்டைவேடம்? களத்தில் இறங்கும் டிடிவி.. காவிரி விவகாரத்தில் அரசை கண்டித்து அமமுக ஆர்ப்பாட்டம்!
சென்னை: தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீரை வழங்க மறுக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசையும், காவிரி விவகாரத்தில் இரட்டை வேடம் போடும் திமுக அரசையும் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக அமமுக அறிவித்துள்ளது.
காவிரியில் தண்ணீர் திறப்பது தொடர்பாக தமிழ்நாடு - கர்நாடகா இடையே தொடர்ந்து பிரச்சனை நீடித்து வருகிறது. இதனிடையே டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நடைபெற்றது. தமிழகத்திற்கு வினாடிக்கு 24,000 கன அடி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தியது. ஆனால், தங்கள் அணைகளில் போதிய தண்ணீர் வரத்து இல்லாத காரணத்தால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது என கர்நாடகா எதிர்ப்பு தெரிவித்தது.

இதனையடுத்து, தமிழகத்திற்கு வினாடிக்கு 5000 கன அடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என ஆணையம் உத்தரவு பிறப்பித்தது. இதனிடையே காவிரி விவகாரத்தில் மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் முறையிட தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், அமமுக சார்பில் காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு திமுக அரசையும், கர்நாடகா காங்கிரஸ் அரசையும் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் காவிரி நீரை நம்பி டெல்டா விவசாயிகள் குறுவை சாகுபடியை செய்து வருகின்றனர். தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் சரிந்து வரும் நிலையில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட மாட்டோம் என்று கர்நாடக காங்கிரஸ் அரசு சொல்லிவருவதால் குறுவைப் பயிர்கள் வாடும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனைப் பற்றி அக்கறை இல்லாமல் தேர்தல் கூட்டணி மட்டுமே முக்கியம் என்று சுயநல போக்குடன் விடியா திமுக அரசு செயல்பட்டு வருகிறது.

காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவை மீறி தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீரை வழங்க மறுக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசையும்; டெல்டா விவசாயிகளின் ஜீவாதார பிரச்சனையாக உள்ள காவிரி விவகாரத்தில் இரட்டை வேடம் போடும் மக்கள் விரோத தி.மு.க அரசையும் கண்டித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில், திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி பெரியார் சிலை அருகில் வருகிற 05.09.2023 செவ்வாய்க்கிழமை அன்று மாலை 4 மணியளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவிதினகரன் அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றுகிறார். கர்நாடக காங்கிரஸ் அரசையும் மக்கள் விரோத தி.மு.க. அரசையும் கண்டித்து நடைபெறும் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழக செயலாளர்கள், மாவட்டக் கழக நிர்வாகிகள், அனைத்து சார்பு அணிகளின் செயலாளர்கள், நிர்வாகிகள், பகுதி, ஒன்றியம், நகரம், பேரூராட்சி, ஊராட்சி, வார்டு / வட்டக் கழகம் மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள், கழக உடன்பிறப்புக்கள் என அனைவரும் பெருந்திரளாக கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.













Click it and Unblock the Notifications