"மத நல்லிணக்கத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் கட்சிகளை அமமுக ஏற்காது”.. அமமுக பொதுக்குழுவில் தீர்மானம்
சென்னை: தமிழ்நாட்டில் மதத்தின் பெயரிலோ, ஜாதியின் பெயரிலோ, கடவுளின் பெயரிலோ பொது அமைதி, மத நல்லிணக்கத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் எந்த ஒரு அமைப்பையோ, கட்சியையோ அமமுக ஏற்காது என தஞ்சாவூரில் இன்று நடைபெற்ற அமமுக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
விரைவில் நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அமமுகவின் அரசியல் நிலைப்பாடு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அமமுக ஆதரவின்றி எந்த கூட்டணியும் ஆட்சி அமைக்க முடியாது என டி.டி.வி. தினகரன் கூறி வருகிறார். வரும் தேர்தலில் எங்கள் இயக்கத்துக்கு எது நல்லதோ, அந்த முடிவை எடுப்போம். எந்தக் கூட்டணிக்கு செல்ல வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டியது அமமுகதான் எனக் கூறி வருகிறார் தினகரன்.

தை பிறந்ததும் ஜெயலலிதா பிறந்த நாளில் கூட்டணி முடிவுகளை அறிவிப்போம். வரும் தேர்தலில் அமமுக வெற்றி பெற்று சட்டமன்றம் செல்வது உறுதி. எங்களுக்கு புனித பூமியாக திகழ்வது ஆண்டிபட்டிதான். ஆகவே, நாங்கள் எந்தக் கூட்டணியில் இருந்தாலும் ஆண்டிபட்டியில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம் என அண்மையில் கூறினார் டிடிவி தினகரன்.
அதிமுக - பாஜக கூட்டணியில் அமமுக இணையக்கூடும் என்ற பேச்சுகள் உலவின. ஆனால், அமமுகவை கூட்டணியில் சேர்க்க அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தயாராக இல்லை எனக் கூறப்படுகிறது. தவெக உடனும் அமமுக பேசி வருவதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோர் தவெக உடன் பேசி வருவதாக செங்கோட்டையன் கூறி இருந்தார்.
இந்நிலையில், தஞ்சையில் அமமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பங்கேற்ற இந்தப் பொதுக்குழுவில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அமமுக பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கூட்டணி குறித்து முடிவெடுக்க டிடிவி தினகரனுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அமமுக பொதுக்குழுவில் முக்கியமாக, "திருப்பரங்குன்றத்தில் ஒருவருக்கொருவர் உறவினர்களாக சகோதரர்களாக ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறார்கள். ஒருவருக்கொருவர் உறவினர்களாகவும், சகோதரர்களாகவும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வரும் தமிழ்நாட்டில் மதத்தின் பெயரிலோ, ஜாதியின் பெயரிலோ, கடவுளின் பெயரிலோ பிரிவினை ஏற்படுத்தும் அரசியல் தமிழ்நாட்டில் எக்காலத்திலும் எடுபடாது" எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும் '100 நாள் வேலை திட்டத்தை மகாத்மா காந்தி பெயரிலேயே செயல்படுத்த வேண்டும். தமிழ்நாடு அரசுக்கு நிதிச்சுமை ஏற்படுத்தக் கூடாது. மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை ஒன்றிய அரசு செயல்படுத்த வேண்டும்' எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தீர்மானங்கள் விவரம்
> 2026-ஆம் ஆண்டு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் கூட்டணி தொடர்பான அனைத்து முடிவுகளையும் எடுக்க கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுக்கு முழு அதிகாரம் வழங்கப்படுகிறது.
> முல்லைப் பெரியாறு, காவிரியில் புதிய அணையை கட்ட முயற்சிக்கும் கர்நாடகம் மற்றும் கேரளா அரசுகளின் முயற்சியை தடுத்து நிறுத்திட திமுக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் .
> வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் மூலம் 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நியாயமானதாகவும், நேர்மையானதாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
> தமிழகத்துக்கென தனியாக சாதி வாரி கணக்கெடுப்பினை நடத்திட தமிழக அரசின் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
> திமுக ஆட்சியில் ஈர்க்கப்பட்ட முதலீடுகள் மற்றும் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகள் குறித்து விரிவான அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும்.
> பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனையை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
> தமிழகத்தில் தொடரும் குற்றச் சம்பவங்களையும் போதைப் பொருட்களின் நடமாட்டத்தையும் இரும்பு கரம் கொண்டு ஒடுக்க தமிழக அரசின் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
> மத்திய அரசின் 100 நாள் வேலை திட்டத்தை மறு பரிசீலனை செய்து திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
> கோவை மற்றும் மதுரை மாநகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்திட மத்திய மாநில அரசுகள் முன் வர வேண்டும்.
> இலங்கைக்கு தாரைவாக்கப்பட்ட கச்சத்தீவை மீட்டு தமிழக மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
> வடகிழக்கு பருவமழை மற்றும் டிட்வா புயலால் பாதிப்புக்கு உள்ளான விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்ட இழப்பீட்டை அதிகரித்து வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.












Click it and Unblock the Notifications