புதிய இயல்பு வாழ்க்கைக்கு தயாராக வேண்டும்... படிப்படியாக ஊரடங்கை தளர்த்துவதே சரி -டிடிவி தினகரன்
சென்னை: கொரோனாவின் தாக்கம் குறைந்த பின்னரும் உலக சுகாதார நிறுவன அறிவுறுத்தலை மனதில் தாங்கி புதிய இயல்பு வாழ்க்கை முறைக்கு மக்கள் தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
மேலும், சென்னையில் நாள்தோறும் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரிப்பதைப் பார்த்தால் ஊரடங்கை படிப்படியாக தளர்த்துவதே சரி என்று தோன்றுவதாக கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

படிப்படியாக ஊரடங்கு
ஊரடங்கு மே 3 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் 'அதனை முழுமையாக முடிவுக்கு கொண்டுவருவது நல்லதல்ல; படிப்படியாகவே தளர்த்த வேண்டும்' என்று மருத்துவ வல்லுனர் குழு அரசுக்கு அறிக்கை அளித்திருக்கிறது. சென்னையில் நாள்தோறும் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரிப்பதைப் பார்த்தால் அது சரி என்றே படுகிறது. அப்படி ஊரடங்கை நீட்டிக்கும் முடிவை அரசு எடுக்கும்போது, மக்களுக்கு குழப்பம் ஏற்படாதபடி முன்கூட்டியே தெளிவான நடைமுறைகளோடு அறிவித்திட வேண்டும்.

உறுதி செய்க
மேலும், ஏழை எளிய அடித்தட்டு மக்களை தொடர் ஊரடங்கு மொத்தமாக புரட்டிப்போட்டிருக்கிறது. அவர்களுக்கு மூன்று வேளை உணவு கிடைப்பது பெரும் சவாலாகவே இருக்கிறது. எனவே ஊரடங்கு நீட்டிக்கப்படும் பட்சத்தில், ஏழை எளிய, நடுத்தர மக்கள் உள்ளிட்ட தமிழக மக்கள் அனைவருக்கும் மூன்று வேளை உணவு கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

ரூ.2,000 வழங்குக
ஊரடங்கை நீட்டித்தால் கூடுதல் உதவியாக குறைந்த பட்சம் மேலும் ரூ.2000/ ஒவ்வொரு குடும்பத்திற்கும் உடனடியாக வழங்கப்படவேண்டும். இதற்காக மத்திய அரசிடம் இருந்து தமிழக அரசு கூடுதல் நிதியைக் கேட்டுப் பெறவேண்டும். பிரதமருக்கு கடிதம் எழுதியதோடு கடமை முடிந்தது என முதலமைச்சர் பழனிசாமி விட்டுவிடக்கூடாது.

நடமாடும் கடைகள்
'அனைவரும் வீட்டிலேயே இருங்கள்; அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் உங்கள் வீட்டு வாசலுக்கே வரும்' என்ற நிலையை உருவாக்கிட தெளிவாக திட்டமிட்டு உரிய அறிவிப்புகளை அரசு வெளியிட வேண்டும். அரசின் அமுதம் அங்காடிகள், பண்ணைப்பசுமை காய்கறி கடைகள் ஆகியவற்றை அரசு சிற்றுந்துகள் (Small Buses), பேருந்துகளைப் பயன்படுத்தி நடமாடும் கடைகளாக மாற்றுவதோடு, இப்பணியில் அந்தந்த பகுதியில் உள்ள வணிகர்களையும் இணைத்து இத்திட்டத்தை செயல்படுத்தவேண்டும். இதன்மூலம் ஒரே இடத்தில் ஆயிரக்கணக்கானோர் கூடுவதை ஓரளவுக்கு கட்டுப்படுத்த முடியும்.

மக்கள் நெருக்கம்
இதையெல்லாம் விட முக்கியமாக 'சோதனைகளை அதிகப்படுத்தியதால் தான் பாதிக்கப்பட்டவர்களை அதிக எண்ணிக்கையில் கண்டு பிடிக்க முடிகிறது' என்ற உண்மையை மருத்துவக் குழுவினர் இப்போது சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். இதைத்தான் ஆரம்பத்தில் இருந்தே கூறிவருகிறோம். அபாய கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் இந்த நேரத்திலாவது மக்கள் நெருக்கம் மிகுந்த சென்னை உள்ளிட்ட பெருநகரங்களிலும், அனைத்து மாவட்டத் தலைநகரங்கள் மற்றும் பெரிய நகரப் பகுதிகளிலும் பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும்.

மக்களுக்கு அட்வைஸ்
அரசின் கட்டுப்பாடுகள் மற்றும் உத்தரவுகள் ஒருபுறம் இருக்க... மக்களும் தங்களின் பொறுப்பை உணர்ந்து, ஊரடங்கு கால கட்டுப்பாடுகளை முறையாக கடைபிடிக்க வேண்டும்.வெளியில் செல்லும்போதெல்லாம் மாஸ்க் அணிவது, தனி மனித விலகலை தொடர்ந்து கடைபிடிப்பது, கூட்டமாக ஓரிடத்தில் கூடுவதைத் தவிர்ப்பது, உள்ளிட்டவற்றை பின்பற்ற வேண்டும்.












Click it and Unblock the Notifications