"மெகா கூட்டணி" எடப்பாடி பழனிசாமி தேர்தலில் நிற்கமாட்டாரா? பாஜக சொன்னதை கேட்டீங்களா? டிடிவி தினகரன்
சென்னை: அவரெல்லாம் ஒரு கட்சித் தலைவராக எந்த காலத்திலும் நான் கருதியதில்லை, பதவிக்காக காலில் விழுவது எங்கள் வம்சத்தில் இல்லை என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.
அதிமுக கூட்டணியில் அமமுகவுக்கு 1 சதவீதம் கூட வாய்ப்பு இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில் அதிமுக தலைமையில்லா முண்டமாக இருக்கிறது. நடந்து முடிந்த உள்ளாட்சி இடைத் தேர்தலில் கூட அந்த கட்சியால் ஏ பார்ம், பி பார்ம் கொடுக்க முடியவில்லை. இதுதான் எடப்பாடியின் நிலைமை. அவரால் எதையும் செய்ய முடியாது.

மெகா கூட்டணி
அவர் மெகா கூட்டணி அமைப்பேன் என்றெல்லாம் சொல்கிறார். அது அவருக்கு வேண்டுமானால் எளிதாக இருக்கலாம். ஆனால் உண்மையில் அதெல்லாம் நடக்காது. அதிமுகவில் இருப்பவர்களை கூட அவரால் தொடர்ந்து கட்சியில் வைத்துக் கொள்ள முடியவில்லை. இவர் எப்படி மெகா கூட்டணி அமைப்பார்? பாஜக தலைவர் அண்ணாமலை 25 எம்பிக்களை தமிழகத்திலிருந்து பெறுவோம் என கூறி வருகிறார்.

39 லோக்சபா தொகுதி
அப்படியென்றால் பாஜக தமிழகத்தில் உள்ள 39 லோக்சபா தொகுதிகளிலும் போட்டியிட்டால்தான் அது நடக்கும். அப்படியெனில் எடப்பாடி மெகா கூட்டணியின் தலைவர் மட்டும்தானே, தேர்தலில் நிற்கமாட்டாரா என்பது தெரியவில்லை. அதிமுக விவகாரம் கோர்ட்டில் உள்ளது. அங்குதான் அதிமுக யாருக்கு சொந்தம என்பது தெரியும். எனவே உண்மை தெரியாமல் எடப்பாடி பழனிசாமி பேசக் கூடாது.

எடப்பாடி பழனிசாமி
அது போல் அமமுக வேறு எந்த கட்சியுடனும் இணையும் என சொல்லக் கூடாது. அதற்கு வாய்ப்பு என்பது இல்லை. எடப்பாடி போல் தொண்டர்களை அடகு வைத்து நாங்கள் கட்சி நடத்தவில்லை. இயக்கத்தில் உள்ள அடிமட்ட தொண்டர்களின் விருப்பத்திற்காக கட்சி நடத்தி வருகிறோம். யாருக்கோ பயந்து எடப்பாடி மாதிரி கட்சி நடத்தவில்லை.

ஒரு சதவீதம்
எடப்பாடியை எந்த காலத்திலும் ஒரு கட்சித் தலைவராக நாங்கள் கருதவில்லை. அதற்கான தகுதியும் அவருக்கு இல்லை. அவருடன் கூட்டணிக்கு ஒரு சதவீதம்கூட வாய்ப்பு இல்லை என கூறியதாக கேள்வி எழுப்பினீர்கள். அவருடன் கூட்டணி என்பது காலரை சதவீதம் கூட இல்லை. கூட்டணிக்குத் தலைமை தாங்கும் அளவுக்கு எடப்பாடி பெரிய ஆள் இல்லை. அவரை போல் பதவி வேண்டும் என்றால் காலில் விழவோ பதவி இல்லை என்றால் காலை வாரிவிடவோ எங்களுக்கு தெரியாது. பதவிக்காக காலில் விழும் வம்சத்தில் வந்தவர்கள் நாங்கள் இல்லை.

துரோகம்
எடப்பாடி முதல்வராக இருந்த போது அவர்தான் என்னைத் தேடி என் வீட்டுக்கு வந்தார். அவரைத் தேடி நான் போனதில்லை. எடப்பாடி பழனிசாமி மாதிரி எதையும் எதிர்பார்த்து யாரையும் சார்ந்து இருக்க மாட்டேன். துரோகம் செய்தால் எத்தகைய பதவியும் கிடைக்கிறது என்று சொன்னால் அதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். எனவே அமமுக வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நல்ல கூட்டணி அமைக்கும். இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications