டிவியை உடைத்த பாமக.. அன்புமணி ராமதாஸ் மீது பாய்ந்த வழக்கு! படாரென பேசிய டிடிவி தினகரன்! என்னவாம்?
சென்னை: சென்னையில் நேற்று மின் கட்டண உயர்வுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட பாமகவினர் தமிழக அரசு வழங்கிய விலையில்லா டி.வி, மின்விசிறியை உடைத்ததால் அன்புமணி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வழக்கை திரும்பப் பெற வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் மின்கட்டணத்தை உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக சார்பில் சென்னை எழும்பூரில் பாமக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, பாமக நிர்வாகிகள் தமிழக அரசு வழங்கிய விலையில்லா வண்ணத் தொலைக்காட்சி பெட்டி, விலையில்லா மின்விசிறி போன்றவற்றை தூக்கிப் போட்டு உடைத்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து தமிழக அரசு சார்பில் பொதுமக்களுக்கு வழங்கிய விலையில்லா டிவி, மின்விசிறியை பாமக ஆர்ப்பாட்டத்தின் போது உடைத்ததாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் மீது சென்னை எழும்பூர் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதற்கு பாமகவினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்ட அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ்,"திமுக அரசின் தூண்டுதலில் சென்னைக் காவல்துறை கட்டவிழ்த்து விட்டுள்ள இந்த அடக்குமுறையும், பொய்வழக்கு பதிவும் கடுமையாக கண்டிக்கத்தக்கவை.
எழும்பூர் இராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகில் போராட்டம் நடத்துவதற்காக காலை முதலே தொண்டர்கள் கூடிய நிலையில், அவர்களை காவல்துறையினர் தடுக்கவில்லை. போராட்டத்தில் பங்கேற்க வந்த என்னிடமோ, பிற தலைவர்களிடமோ போராட்டத்திற்கு அனுமதி இல்லை என்று கூறவில்லை. மாறாக, போராட்டத்திற்கு பாதுகாப்பு அளித்தனர். இத்தகைய சூழலில் போராட்டம் முடிவடைந்த பிறகு அனுமதியின்றி போராடியதாக வழக்குப் பதிவு செய்திருப்பது மிகவும் நகைச்சுவையாக இருக்கிறது.
மின் கட்டண உயர்வைக் கண்டித்து நடத்தப்பட்ட போராட்டத்தின் போது தமிழ்நாடு மின்சார வாரியத்தில் நடைபெறும் ஊழல்கள் குறித்து ஆதாரங்களுடன் நான் பேசினேன். தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்டு, இன்னும் செயல்படுத்தப்படாத மின் திட்டங்கள் குறித்து ஆதாரங்களுடன் விளக்கினேன். அவை மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தான் பா.ம.க.வினர் மீது பொய்வழக்குப் பதிவு செய்ய திமுக அரசு தூண்டியுள்ளது. சென்னை மாநகரக் காவல்துறையும் அதை அப்படியே செயல்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. 2021-22ஆம் ஆண்டில் 1558 படுகொலைகள், 2022-23ஆம் ஆண்டில் 1596 படுகொலைகள் மற்றும் 18 கூலிப்படை கொலைகள் நடந்துள்ளன. இவற்றை தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே ஒப்புக் கொண்டிருக்கிறார். 2023-24 ஆம் ஆண்டில் 1600-க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்திருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இப்படியாக கடந்த 3 ஆண்டு கால திமுக ஆட்சியில் ஏறக்குறைய 5 ஆயிரம் படுகொலைகள் நிகழ்ந்திருக்கும் நிலையில் அவற்றைத் தடுக்க தமிழக அரசாலும், காவல்துறையாலும் முடியவில்லை. கள்ளக்குறிச்சியில் நடந்தது போன்ற கள்ளச்சாராய சாவுகளை தடுக்க முடியவில்லை. கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த முடியவில்லை. சந்துக் கடைகள் எனப்படும் சட்ட விரோத மதுக்கடைகள் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை. மாறாக, மக்களை பாதிக்கும் மின்கட்டண உயர்வைக் கண்டித்து போராட்டம் நடத்தினால் அதை தாங்கிக் கொள்ள முடியாமல் வழக்குப் பதிவு செய்கிறது திமுக அரசு.
பா.ம.க. நெருப்பாற்றில் நீந்தி வந்த கட்சி. அடக்குமுறைகளை சந்தித்து வளர்ந்த கட்சி. இத்தகைய பொய் வழக்குகள் மூலம் எங்களைக் கட்டுப்படுத்தி விட முடியாது. மின்கட்டண உயர்வைக் கண்டித்தும், திமுக அரசின் மக்கள் விரோத செயல்பாடுகளை எதிர்த்தும் அறவழியில் பாட்டாளி மக்கள் கட்சியின் போராட்டம் தொடரும். சென்னையில் போராட்டம் நடத்தியதற்காக காவல்துறை தொடர்ந்துள்ள பொய் வழக்கை சட்டப்படி எதிர்கொள்வோம்." என கூறியிருந்தார்.
இந்நிலையில் மின் கட்டண உயர்வை கண்டித்து போராட்டம் நடத்திய பாட்டாளி மக்கள் கட்சியினர் மீது வழக்குப்பதிவு - திமுக அரசின் ஜனநாயக விரோதப் போக்கு கடும் கண்டத்திற்குரியது என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கண்டம் தெரிவித்துள்ளர். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்றாண்டுகளில் மூன்றாவது முறையாக உயர்த்தப்பட்டுள்ள மின்கட்டண உயர்வைக் கண்டித்து சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே அறவழியில் போராட்டம் நடத்திய பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் திரு.அன்புமணி ராமதாஸ் அவர்கள் உட்பட அக்கட்சியினர் பலர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் நாள்தோறும் அரங்கேறும் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை களையவோ, பள்ளி, கல்லூரி மாணவர்களின் எதிர்காலத்தை சிதைக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவோ எந்தவித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசு, ஜனநாயக முறையில் போராட்டம் நடத்திய பாட்டாளி மக்கள் கட்சித்தலைவர் திரு.அன்புமணி ராமதாஸ் அவர்கள் உட்பட பலர் மீது வழக்குப்பதிவு செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
எனவே, பாட்டாளி மக்கள் கட்சித்தலைவர் மருத்துவர் திரு.அன்புமணி ராமதாஸ் உட்பட அக்கட்சியினர் பலர் மீது பதியப்பட்டுள்ள வழக்கை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என காவல்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்" என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications