இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம்.. முக்கிய சாட்சியான சென்னை வழக்கறிஞர் திடீர் தற்கொலை
சென்னை: இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் பெற முயன்ற வழக்கில் முக்கிய சாட்சியான வழக்கறிஞர் கோபிநாத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக இரு அணிகளாக பிரிந்தது. ஆர் கே நகர் இடைத்தேர்தலின் போது இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என ஓபிஎஸ் மனு தாக்கல் செய்தார்.
இதையடுத்து இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. இந்த நிலையில் இரட்டை இலை சின்னத்தை பெற பெங்களூரைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் இடைத்தரகராக செயல்பட்டதாக தெரிகிறது.

தேர்தல் ஆணைய அதிகாரிகள்
தனக்கு தேர்தல் ஆணைய அதிகாரிகளை நன்கு தெரியும் என்றும் டிடிவி தினகரனிடம் சுகேஷ் உதார்விட்டதாக தெரிகிறது. இதையடுத்து சுகேஷ், டிடிவி தினகரனை அணுகி ரூ 50 கோடியை லஞ்சமாக கொடுத்தால் இரட்டை இலை சின்னத்தை பெற்று தருவதாக தெரிவித்தாராம். இதற்காக தினகரன் முன்பணமாக ரூ 2 கோடி கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது.

இரட்டை இலை சின்னம்
இந்த நிலையில் இரட்டை இலை சின்னம் பெற்றுத் தருவதாக கூறிய விவகாரத்தில் பண மோசடி தொடர்பான வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் உள்ளார். இந்த வழக்கை சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் இந்த வழக்கின் முக்கிய சாட்சியான கோபிநாத் என்பவர் நாளை ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பியிருந்தது. தினகரன் ரூ 2 கோடியை சுகேஷிடம் கொடுத்த போது கோபிநாத் உடனிருந்ததாக தெரிகிறது.

முக்கிய சாட்சி தற்கொலை
இரட்டை இலைக்கு லஞ்சம் பெற முயன்ற வழக்கில் கோபிநாத்தின் சீனியர் வழக்கறிஞர் ராமாபுரத்தை சேர்ந்த மோகன்ராஜ் என்பவரை அமலாக்கத் துறை குற்றவாளியாக சேர்த்துள்ளது. அவரது வீட்டிலும் கோபிநாத்தின் வீட்டிலும் அமலாக்கத் துறை 2017ஆம் ஆண்டு சோதனை நடத்தியிருந்தது.

முக்கிய சாட்சி தற்கொலை ஏன்
இந்த நிலையில் இந்த வழக்கின் முக்கிய சாட்சியான கோபிநாத் என்பவர் நாளை டெல்லியில் ஆஜராக அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியிருந்தது. இதனால் நேற்று முதலே கோபிநாத் மனவேதனையில் இருந்ததாக தெரிகிறது. நேற்றிரவு தூங்க செல்வதாக கூறி வீட்டின் எதிரே உள்ள குடிசைக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் இன்று காலை 6.30 மணிக்கு கோபிநாத்தின் தங்கை சென்று பார்த்த போது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்திருந்தது தெரியவந்தது. இவரது உடலை மீட்ட திருவேற்காடு காவல் துறையினர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications