சரசரவென உயரும் தங்கம் விலை.. என்ன காரணம்! இது மேலும் அதிகரிக்குமா? உடைத்து பேசிய ஆனந்த் சீனிவாசன்
சென்னை: மத்திய பட்ஜெட்டிற்கு பிறகு சரசரவெனச் சரிந்த தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது. இதற்கிடையே தங்கம் விலை அதிகரிக்க என்ன காரணம் என்பதை விளக்கிய பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன், வரும் காலத்தில் தங்கம் விலை எப்படி இருக்கும் என்பதையும் விரிவாக விளக்கி இருக்கிறார்.
மத்திய பட்ஜெட்டில் தங்கத்திற்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்டது. அதன் பிறகு சில நாட்களில் தங்கம் விலை பெரியளவில் குறைந்தது. இதனால் மக்கள் ஆர்வமாகத் தங்கம் வாங்கினர்.

அதேநேரம் கடந்த சில நாட்களாகத் தங்கம் விலை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. 22 கேரட் தங்கம் ஒரு கிராம் கடந்த ஜூலை 31ம் தேதி ரூ.35 அதிகரித்து, ஆக். 1ம் தேதி 10 ரூபாயும் நேற்று ஆக. 2ம் தேதி ரூ.30ம் அதிகரித்தது.
தங்கம் விலை உயர்வு: இப்படி தங்கம் விலை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், மக்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள். இது வெறும் தற்காலிக உயர்வா இல்லை இனி தொடர்ந்து உயருமா என்பதே மக்களின் சந்தேகம். இதனால் இப்போதே தங்கத்தை வாங்க வேண்டுமா.. இல்லை கொஞ்சக் காலம் காத்திருக்கலாமா என்ற குழப்பத்தில் இருக்கிறார்கள்.
இதற்கிடையே இதற்கான பதிலைப் பிரபல பொருளாதார ஆலோசகர் ஆனந்த் சீனிவாசன் அளித்துள்ளார். தங்கம் விலை இப்போது மீண்டும் அதிகரிக்க என்ன காரணம் என்பதை விளக்கியுள்ள அவர், வரும் காலத்தில் தங்கம் விலை அதிகரிக்குமா இல்லை தொடர்ந்து குறையுமா என்பதையும் விளக்கமாக எடுத்துச் சொல்லி இருக்கிறார்.
ஆனந்த் சீனிவாசன்: இது தொடர்பாக அவர் தனது யூடியூப் சேனலில், "தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சமீபத்தில் அமெரிக்க மத்திய வங்கியின் கூட்டம் நடைபெற்றது. அதில் அவர்கள் வட்டியை உயர்த்தவும் இல்லை.. குறைக்கவும் இல்லை.. அதே நிலையில் வட்டி தொடரும் என அறிவித்துள்ளனர். மேலும், மார்க்கெட் தாங்கள் நினைத்த திசையில் தான் செல்வதாகவும் விரைவில் விலைவாசியும் தாங்கள் எதிர்பார்த்த அளவுக்குக் குறையும் என்றும் அவர்கள் கூறியிருந்தனர்.
இப்போது எங்கள் கவலை விலைவாசி இல்லை.. வேலைவாய்ப்பு எப்படி இருக்கப் போகிறது என்பதையே கண்காணிக்க இருக்கிறோம். அதைக் கருத்தில் கொண்டு செப். மாதம் வட்டி விகிதத்தைக் குறைக்கப் போவதாக அமெரிக்க மத்திய வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுவே முக்கியமான மேட்டர்.
அதிகரிக்க இதுவே காரணம்: அமெரிக்காவில் செப். 2ஆவது வாரம் அடுத்த மீட்டிங் நடைபெற இருக்கிறது. அதுவரை இதே டிரெண்ட் இருந்தால் அந்த கூட்டத்தில் 0.25% வட்டியைக் குறைப்பார்கள். அதுவரை இதே டிரெண்ட் தான் இருக்கும் என நான் நினைக்கிறேன். இதனால் முதல் வட்டி குறைப்பு செப். மாதம் வருவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
அடுத்து நவ. மாதம் நடக்கும் கூட்டத்தில் வட்டியை அப்படியே வைத்திருப்பார்கள். குறைக்கவும் கூட வாய்ப்பு இருக்கிறது. கடந்த 2 நாட்களாகத் தங்கம் விலை அதிகரிக்க முக்கிய காரணமே இதுதான். அங்கு வட்டி விகிதம் குறைக்கத் தொடங்கினால் நிச்சயம் தங்கம் விலை அதிகரிக்கும்.
வரும் காலத்தில் என்ன நடக்கும்: அதிலும் டிரம்ப் அதிபர் தேர்தலில் வென்றால் தங்கமும் அதிகரிக்கும். க்ரிப்டோகரன்சியும் அதிகரிக்கும். ஆனால், க்ரிப்டோகரன்சி எப்போதுமே பிரச்சினை தான். எனவே, அதில் அதீத எச்சரிக்கை தேவை. ஏற்கனவே பல பேர் போட்ட பணத்தைக் கூட எடுக்க முடியாமல் சிரமப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால், டிரம்ப் வெல்வாரா இல்லையா வரும் நாட்களிலேயே தெரியும்" என்றார்.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீடு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு, உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications