Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாயிண்டை பிடித்த அன்புமணி.. +2 ரிசல்டை பார்த்தீங்களா? வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: +2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி இருக்கும் நிலையில் தேர்ச்சி விகிதத்தில் கடைசி 15 இடங்களில் 13 வட மாவட்டங்கள் இருப்பதாகவும், இப்பகுதிகளில் கல்வி மேம்பாட்டுக்கு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்துமாறும் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி இருக்கிறார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அண்மைக் காலங்களில் இல்லாத அளவுக்கு 94.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். வென்ற மாணவ, மாணவியருக்கும், 600க்கு 600 மதிப்பெண் பெற்ற திண்டுக்கல் மாணவி நந்தினிக்கும் எனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் அடுத்த மாதம் நடைபெறவுள்ள துணைத்தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கும் எனது வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.

12-ஆம் வகுப்புத்தேர்வு முடிவுகளில் வருத்தமளிக்கும் இரு கூறுகள், அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் மிகக் குறைவாக இருப்பதும், வழக்கம் போல தேர்ச்சி விகிதங்களில் வட மாவட்டங்கள் கடைசி இடங்களை பிடித்திருப்பதும் தான். அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 89.90 விழுக்காடு மட்டுமே. அரசு பள்ளிகளில் போதிய அளவில் கட்டமைப்பு வசதிகள் இல்லாததும், முதன்மை பாடங்களை நடத்தக் கூட ஆசிரியர்கள் இல்லாததும் தான் அரசு பள்ளிகளில் தேர்ச்சி குறைவுக்கு காரணமாகும்.

 Anbumani mentioned 12 th exam results and demand Vanniyar reservation

வழக்கம் போலவே மாவட்ட வாரியான தேர்ச்சி விகிதத்தில் வட மாவட்டங்கள் தான் கடைசி இடங்களை பிடித்திருக்கின்றன. கடைசி 10 இடங்களை பிடித்துள்ள இராணிப்பேட்டை, வேலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய இரு மாவட்டங்களைத் தவிர மீதமுள்ள எட்டு மாவட்டங்கள் வட மாவட்டங்கள் ஆகும். கடைசி 11 முதல் 15 வரையிலான இடங்களைப் பிடித்த திருவள்ளூர், கடலூர், திருவாரூர், செங்கல்பட்டு, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் திருவாரூரைத் தவிர மீதமுள்ள 4 மாவட்டங்களும் வட மாவட்டங்கள் என்பது வேதனைக்குரிய உண்மை ஆகும்.

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் தமிழ்நாட்டில் கடைசி 15 இடங்களைப் பிடித்த மாவட்டங்களில் மொத்தம் 12 மாவட்டங்கள் வட தமிழ்நாட்டைச் சேர்ந்தவை ஆகும். கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக இதே நிலை தான் காணப்படுகிறது. ஒருமுறை கூட வட மாவட்டங்கள் முதல் 10 இடங்களுக்குள் வந்தது இல்லை. அதேபோல், ஒருமுறை கூட கடைசி 10 இடங்களில் தென் மாவட்டங்கள் வந்தது கிடையாது. இந்த நிலையை மாற்றுவதற்கு தமிழகத்தை ஆட்சி செய்த அரசுகள் எந்த முயற்சியும் செய்யவில்லை.

தேர்ச்சி விகிதத்தில் வட மாவட்டங்கள் கடைசி இடங்களைப் பிடிப்பதற்கான காரணங்கள் குறித்து மிகப்பெரிய அளவில் ஆராய்ச்சிகள் செய்யத் தேவையில்லை. முதலாவது காரணம், அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறையும், கட்டமைப்பு வசதிகள் இல்லாததும் தான். வட மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், கணினி அறிவியல் போன்ற முதன்மைப் பாடங்களை நடத்துவதற்குக் கூட ஆசிரியர்கள் இல்லை.

அதே நேரத்தில் தென் மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில் இந்தப் பாடங்களை நடத்துவதற்கு இரண்டு ஆசிரியர்களும், சில பள்ளிகளில் மூன்று ஆசிரியர்களும் உள்ளன. வட மாவடங்களில் உள்ள பள்ளிகளில் புதிதாக பணி அமர்த்தப்படும் ஆசிரியர்களில் பெரும்பான்மையானோர் அடுத்த சில மாவட்டங்களில் செய்ய வேண்டியதை செய்து தென் மாவட்டங்களிலுள்ள தங்களின் சொந்த ஊர்களுக்கு இட மாற்றம் பெற்று சென்று விடுகின்றனர்.

வட மாவட்டங்களின் தேர்ச்சி விகிதம் குறைந்ததற்கு இன்னொரு காரணம் அங்குள்ள மக்களின் சமூக, பொருளாதாரக் காரணிகள் தான். வட மாவட்டங்களில் பெரும்பான்மையாக வாழும் மக்கள் வன்னியரும், பட்டியல் சமூகத்தினரும் தான். அவர்களில் வறுமையில் வாடும், குடிசை வீடுகளில் வாழும் வன்னியர்களால் அதிக கட்டணம் செலுத்தி தனியார் பள்ளிகளில் சேர முடியாது. அரசு பள்ளிகளில் தான் சேர்ந்து பயில முடியும். ஆனால், அங்கு போதிய கட்டமைப்புகளோ, ஆசிரியர்களோ இல்லை. மிக மிக பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்கள் காலையில் எழுந்தவுடன் வாழ்வாதாரத்திற்கான சில பணிகளை செய்து விட்டு தான் பள்ளிகளுக்கு செல்ல முடியும்; அவர்களால் தனிப்பயிற்சி வகுப்புகளில் சேர முடியாது.

வாழ்வாதாரப்பணிகள் காரணமாக அவர்களால் அதிக நேரம் படிக்கவும் முடியாது. அதனால் தான் அவர்களும் தேர்வில் தோல்வியடைந்து, மாவட்ட தேர்ச்சி விகிதம் குறைவதற்கும் காரணமாகின்றனர். வன்னியர்களுக்கு கல்வி மற்றும் சமூக நிலை மிக மோசமாக இருக்கிறது என்பதற்கு இதை விட வலிமையான சான்றுகள் தேவையில்லை. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதற்கு இதைவிட வலிமையான காரணிகள் தேவையில்லை.

கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் வன்னியர்கள் அதிகம் வாழும் வட மாவட்டங்களின் கல்வி, சமூக வேலைவாய்ப்புச் சூழல் இப்படியே தொடருவதை தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது. கல்வி மற்றும் வேலைவாய்ப்புச் சூழலை மேம்படுத்த வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.50% இட ஒதுக்கீடு வழங்கவும், தேர்ச்சி விகிதத்தை மேம்படுத்துவதற்காக சிறப்புத் திட்டங்களையும் செயல்படுத்த தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்." என்று வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+