சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 250 ஏரி, குளங்களை காணவில்லை! அன்புமணி ராமதாஸ் பகீர் தகவல்!
சென்னை: தமிழ்நாட்டில் திராவிட ஆட்சிகள் வந்த பிறகு சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இருந்த 250 ஏரி, குளங்களை காணவில்லை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார். இப்போது ஏற்பட்டுள்ள இந்த வெள்ளத்துக்கு அது தான் முக்கியக் காரணம் என தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.
சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பொருட்கள் வழங்கிய அவர், அதன் பிறகு செய்தியாளர்களிடம் இதனைக் கூறினார். இன்று சென்னையை சுற்றியுள்ள 19 ஏரிகளின் பரப்பளவு 1980ஆம் ஆண்டு 1300 ஹெக்டேர் என்ற அளவில் இருந்ததாகவும் இன்று 500 ஹெக்டேர் பரப்பளவு தான் உள்ளது என்றும் மீதமுள்ள 800 ஹெக்டேர் எங்கே எனவும் வினவினார்.

ஆக்கிரமிப்புகளை வேடிக்கை பார்ப்பது தான் திராவிட மாடலா என்று கேள்வி எழுப்பிய அன்புமணி ராமதாஸ், நீர்வழிப்பாதையை ஆக்கிரமித்தால் தண்ணீர் வேறு எங்கு போகும் என வினவினார். லஞ்சம், ஊழல், என காசு வாங்கிக்கொண்டு அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு அதிகாரிகள் அனுமதி கொடுக்கிறார்கள் என மிகுந்த மனவேதனையுடன் தெரிவித்த அன்புமணி இனி வரும் காலங்களில் இப்படியே கொடுத்தால் வெள்ளப்பாதிப்பு இன்னும் அதிகரிக்கும் என அரசை அலர்ட் செய்தார்.
அப்பார்ட்மெண்ட் விற்கிறேன், ஃபிளாட் விற்கிறேன், 10 லட்சம் கட்டினால் போதும் என ஆளாளுக்கு விளம்பரங்கள் செய்து சென்னையை நாசப்படுத்திவிட்டார்கள் என கோபம் கொப்பளிக்க தெரிவித்தார். சென்னை வெள்ளம் என்பது திடீரென்று நடக்கவில்லை என்று கடந்த 20, 30 ஆண்டுகளாக லஞ்சம், ஊழலால் காசு வாங்கிக்கொண்டு கணக்கு வழக்கின்றி அனுமதி கொடுத்து சென்னையையே நாசமாக்கிவிட்டார்கள் என அன்புமணி அதிகாரிகள் மீது பாய்ந்தார்.
சி.எம்.டி.ஏ. என்று ஒன்று எதற்கு இருக்கிறது என கேள்வி எழுப்பிய அன்புமணி ராமதாஸ், எதையும் திட்டமிடாமல் தொலைநோக்கு பார்வையில் சிந்திக்காமல் செயல்படுவதை இத்தோடு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications