விசில் அடித்த தொண்டர்கள்! மைக்கை பிடித்து அன்புமணி டென்ஷன்! பாமக மேடையில் நடந்தது என்ன?
சென்னை: பாமக மாணவர் சங்கம் சார்பில் நடந்த பொதுக் குழு கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் உள்ளே நுழைந்ததும் நிர்வாகிகள் விசில் அடித்த போது டென்ஷனான அன்புமணி, விசிலை குறைத்துக் கொண்டு கைகளை தட்டுமாறு தெரிவித்தார்.
சென்னை பல்லாவரம் ரேடியல் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாமக மாணவர் சங்கம் சார்பில் பொதுக் குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டம் பாமக தலைவர் அன்புமணி தலைமையில் நடந்தது.

காலை 10 மணிக்கு கூட்டம் நடைபெறும் என சொல்லப்பட்ட நிலையில் மதியம் 12 மணிக்கு மேல் அன்புமணி பொதுக் குழு கூட்டம் நடந்த இடத்திற்கு வருகை தந்தார்.
அவர் விழா மேடைக்கு ஏறினார். அப்போது அங்கிருந்த மாணவர் சங்கத்தினர் காது கிழியும் அளவுக்கு விசில் அடித்தனர். இதனால் கடுப்பான அன்புமணி, மைக்கை வாங்கி, "விசிலை குறைத்துக் கொள்ளுங்கள் கைகளை தட்டுங்கள்" என எச்சரித்தார்.
ஆனாலும் தொடர்ந்து சில இளைஞர்கள் விசில் அடித்தவண்ணம் இருந்தனர். இதைத் தொடர்ந்து இந்த கூட்டத்தில் 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அன்புமணி பாமக தற்போது அதிமுக- பாஜக கூட்டணியில் அங்கம் வகித்து வருகிறது. தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டதை அடுத்து தமிழகத்தில் பல கட்சியினர் விசிலுக்கு தடை விதித்து வருகிறார்கள்.
சிவகங்கை மாவட்டத்தில் ஒரு வார்டில் குப்பைகளை சேகரிப்பதற்காக விசில் அடித்து குடியிருப்புவாசிகளுக்கு சமிக்ஞை கொடுக்க தூய்மை பணியாளர் விசில் அடித்தார். அப்போது அங்கு வந்த திமுக கவுன்சிலர் அந்த விசிலை வாங்கி குப்பையில் வீசிவிட்டு, ஒலிப்பெருக்கியை கொடுத்தார். அதில் ஏற்கெனவே குரல் பதிவு செய்யப்பட்டிருந்தது.
இது போல் விசில் அடிப்பது தேவையில்லாமல் தவெகவுக்கு விளம்பரத்தை தேடி கொடுக்கும் என்பதால்தான் விசில் அடிக்க வேண்டாம் என்கிறார்கள். "விசில் = தவெக" என்ற எண்ணம் தான் காரணம். தமிழக அரசியலில் விசில் இப்போது 'சின்னம் போர்' ஆக மாறியிருக்கிறது - யாரும் விசில் அடித்தால், அது தவறுதலாக தவெகவுக்கு சாதகமாக மாறிவிடும் என்ற அச்சம் எழுந்துள்ளதாகவே சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications