பட்ஜெட்டில் வருமான வரி வரம்பு உயர்வு சரி! தமிழ்நாட்டுக்கான திட்டங்கள் எங்கே! அன்புமணி கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: வருமான வரி வரம்பு ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டதில் மகிழ்ச்சி, தமிழ்நாட்டிற்கான சிறப்புத்
திட்டங்கள் அறிவிக்கப்படாதது ஏமாற்றம் என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் கூறியிருப்பதாவது: நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களால் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் 2025 & 26 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் வருமான வரி விலக்கிற்கான வருவாய் வரம்பு ரூ.12 லட்சம் வரை அதிகரிக்கப்பட்டிருப்பதும், மக்களின் நலன் சார்ந்து மேலும் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பதும் மகிழ்ச்சி அளிக்கிறது. அதேநேரத்தில் தமிழ்நாட்டுக்காக சிறப்புத் திட்டம் எதுவும் அறிவிக்கப்படாதது ஏமாற்றமளிக்கிறது.

budget 2025 anbumani ramadoss 2025

2024 மற்றும் 25ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்திருக்கிறார். நாடு முழுவதும் உள்ள மக்களால் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்டு வந்த வருமான வரி விகிதங்கள் பெருமளவில் மாற்றியமைக்கப்பட்டிருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது. புதிய வருமானவரி முறையின்படி ரூ.12 லட்சம் வரையிலான வருவாய்க்கு வரி செலுத்தத் தேவையில்லை. இதன் மூலம் மாதம் ரூ.1 லட்சம் வரை வருவாய் ஈட்டும் நடுத்தர வர்க்கத்தினர், இதுவரை வரியாக செலுத்தி வந்த தொகையை கல்வி உள்ளிட்ட செலவுகளுக்காக பயன்படுத்திக் கொள்ள முடியும்.

தொழில்நுட்பக் கல்விக்கும், மருத்துவக் கல்விக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பல்வேறு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பதும் வரவேற்கத்தக்கவை ஆகும். 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு தொடங்கப்பட்ட 5 ஐஐடிகளில் கூடுதலாக 6500 மாணவர் சேர்க்கை இடங்களை ஏற்படுத்தப்படும்; ரூ.500 கோடியில் கல்விக்காக செயற்கை அறிவுத்திறன் உயர்சிறப்பு மையம் ஏற்படுத்தப்படும்;அடுத்த ஐந்தாண்டுகளில் மருத்துவப் படிப்புக்கு 75 ஆயிரம் கூடுதல் இடங்கள் உருவாக்கப்படும்; நடப்பு நிதியாண்டில் மருத்துவப் படிப்புக்கு கூடுதலாக 10 ஆயிரம் இடங்கள் உருவாக்கப்படும்; 36 வகையான உயிர்காக்கும் மருந்துகளுக்கு சுங்கவரி முற்றிலுமாக ரத்து செய்யப்படும்; அனைத்து மாவட்டங்களிலும் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கவை.

வேளாண்துறை வளர்ச்சியை கருத்தில் கொண்டும் புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் 100 மாவட்டங்களில் பயிர்களின் உற்பத்தியைப் பெருக்குவதற்கும், முதலீடுகள், தொழில்நுட்பம், திறன் மேம்பாடு ஆகியவற்றின் வாயிலாக 100 மாவட்டங்களில் வேளாண்மை சார்ந்த வேலைவாய்ப்புகளின் தன்மையையும், ஊதியத்தையும் அதிகரிக்கச் செய்வதற்கான திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் மத்திய நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கிராமப்புற மக்கள் வேலைவாய்ப்புகளைத் தேடி நகர்ப்புறங்களுக்கு இடம் பெயருவது தவிர்க்கப்படும். அந்த வகையில் இத்திட்டமும் வரவேற்கத்தக்கது.

காய்கறிகளுக்கு நியாயமான விலை கிடைக்கவும், அவற்றின் சாகுபடியை பெருக்கவும், வினியோகத்தை மேம்படுத்தவும், மதிப்புக் கூட்டவும் மாநிலங்களுடன் இணைந்து சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதும் மகிழ்ச்சியளிக்கிறது. கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீடு கடந்த ஆண்டை விட 6.65% அதிகமாக ரூ.1.28 லட்சமாகவும், மருத்துவத் துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூ.95,958 கோடியாக அதிகரிக்கப்பட்டிருப்பதும் வரவேற்கத்தக்கவை. மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் பாதுகாப்புத் துறைக்கு அடுத்தபடியாக ஊரக வளர்ச்சித் துறைக்கு மிக அதிகமாக ரூ.2.66 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதும் வரவேற்கத்தக்கதாகும். 2024&25ஆம் ஆண்டில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு ரூ.86 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டதால் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் கோடிக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பும், ஊதியமும் வழங்க முடியாத நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையை மாற்றுவதற்காக 2025&26ஆம் ஆண்டில் இத்திட்டத்திற்கான நிதியை அதிகரிக்க வேண்டும் என்று அனைத்து மாநிலங்களும் கோரிக்கை விடுத்த நிலையில், அது குறித்து நிதியமைச்சரின் உரையில் எந்த அறிவிப்பும் இடம் பெறவில்லை என்பதும் மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.

மறைமுக வரிகளைப் பொறுத்தவரை செல்பேசிகள், மின்சார வாகனங்களில் பயன்படுத்துவதற்கான லித்தியம் பேட்டரிகள் ஆகியவற்றின் மீதான வரிகள் குறைக்கப்பட்டிருப்பது சாதகமான பயன்களை வழங்கும். அதேநேரத்தில் அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் மீதான மறைமுக வரிகள் குறைக்கப்படாதது வருத்தமளிக்கிறது. பிகார் உள்ளிட்ட மாநிலங்களுக்கு பல புதிய திட்டங்கள் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எந்தத் திட்டமும் அறிவிக்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+