ராஜ்யசபா தேர்தல்.. அன்புமணிக்கு எதிர்பாராத அதிர்ச்சி.. ராமதாஸ் தரப்பினரும் வேட்பு மனு தாக்கல்
சென்னை: அன்புமணிக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக ராஜ்யசபா தேர்தலில் ராமதாஸ் தரப்பிலும் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராமதாஸ் தரப்பு பாமக சார்பில் அவரது உதவியாளர் ப. சுவாமிநாதன் என்பவர் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளார். ஏற்கனவே அதிமுக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் காலியாக உள்ள 6 ராஜ்யசபா எம்பி பதவிகளுக்கான தேர்தல் வருகிற 16 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 26 ஆம் தேதி தொடங்கியது. வேட்பு மனுதாக்கல் செய்ய இன்று கடைசி நாள் ஆகும்.

ராஜ்யசபா தேர்தல்
தி.மு.க. சார்பில் 4 எம்.பி.க்களையும், அ.தி.மு.க. சார்பில் 2 எம்.பி.க்களையும் போட்டியின்றி தேர்ந்தெடுக்க முடியும். அந்த வகையில் தி.மு.க. வில் திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடமும், தே.மு.தி.க.வுக்கு ஒரு இடமும் ஒதுக்கப்பட்டது.
இதில் காங்கிரஸ் வேட்பாளராக அகில இந்திய செயலாளர் கிறிஸ்டோபர் திலக் அறிவிக்கப்பட்டார். தேமுதிக வேட்பாளராக கட்சியின் பொருளாளர் எல் கே சுதீஷ் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, அதிமுகவில் ஒரு இடத்தில் தம்பிதுரையும் பாமகவுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அன்புமணியும் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
ராமதாஸ் தரப்பும் வேட்புமனு தாக்கல்
ராஜ்யபா தேர்தலில் 34 எம் எல்.ஏக்கள் வாக்களித்தால் ஒரு எம்.பி.யை தேர்ந்தெடுக்க முடியும். இதனால் அனைவரும் போட்டியின்றி தேர்வாக வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், திடீர் திருப்பமாக ராமதாஸ் தரப்பில் இருந்து வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ராமதாஸ் உதவியாளராக இருக்க கூடிய சுவாமிநாதன் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார்.
பாமகவிற்கு மொத்தம் 5 எம்.எல்.ஏக்கள் உள்ள நிலையில், அன்புமணிக்கு ஆதரவாக சிவக்குமார், சதாசிவம், வெங்கடேசன் ஆகிய 3 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். ஜிகே மணி, அருள் ஆகியோர் ராமதாஸ் கோஷ்டியில் உள்ளனர். ராமதாஸ்க்கு 2 எம்.எல்.ஏக்கள் ஆதரவு உள்ள நிலையில், அவரது தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
10 எம்.எல்.ஏக்கள் முன்மொழிய வேண்டும்
இந்த வேட்பு மனுக்கள் மீது நாளை காலை 11 மணிக்கு பரிசீலனை நடைபெறுகிறது. ராஜ்யசபா தேர்தலுக்கு போட்டியிடும் வேட்பாளரை 10 எம்.எல்.ஏக்க்ள் முன்மொழிய வேண்டும் என்பது விதியாகும். ஆனால், ராமதாஸ் ஆதரவாளர் ப. சுவாமிநாதனுக்கு அதற்கான வாய்ப்பு இல்லை என்றே சொல்லப்படுகிறது.
இதனால், அவரது வேட்பு மனு நிராகரிக்கப்படும் வாய்ப்பே அதிகம் என்று சொல்லப்படுகிறது. எனினும், கடைசி நேர பரபரப்பாக அன்புமணிக்கு ராமதாஸ் தரப்பு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications