நான் பெருசா மதிக்குற சொத்தே.. மேடையில் ராமதாஸுக்கு தனி சேர்.. நிர்வாகிகளுக்கு அன்புமணியின் வார்னிங்!
சென்னை: ராமதாஸ் தரப்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து திட்டமிட்டபடி இன்று அன்புமணி ராமதாஸ் தலைமையில் பாமக பொதுக்குழு நடைபெற்றது. அதே நேரத்தில் மாநாட்டு வரவேற்பு பேனரில் ராமதாஸின் படம் இடம் பெற்றுள்ளதோடு, மேடையில் அவருக்கென தனி நாற்காலி போடப்பட்டுள்ளது. மேலும் ராமதாஸ் குறித்து யாரும் விமர்சித்து பேசக்கூடாது என அன்புமணி ராமதாஸ் நிர்வாகிகளை அறிவுறுத்தி உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
பாட்டாளி மக்கள் கட்சியில் தந்தை ராமதாஸ் மகன் அன்புமணி இடையேயான மோதல் உச்சத்தை தொட்டு இருக்கிறது. கடந்த சில வாரங்களாகவே அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தார் ராமதாஸ். ஆனால் அதற்கு பதில் எதுவும் அன்புமணி அளிக்கவில்லை.
இந்த நிலையில் அன்புமணியை கட்சியை விட்டு நீக்குவதாக அறிவித்த ராமதாஸ், அவர் தரப்பு ஆதரவாளர்களான பொருளாளர் திலகபாமா, பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், வழக்கறிஞர் பாலு ஆகியோரை பதவி இறக்கம் செய்தார். மேலும் புதிய நிர்வாகிகளும் நியமனம் செய்யப்பட்டனர்.

பாமக அன்புமணி
அது மட்டும் இல்லாமல் 150-க்கும் மேற்பட்ட மாவட்ட தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் மாற்றம் செய்யப்பட்டனர். ஆனால் கட்சியின் பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட நான்தான் தலைவர், எனக்குத்தான் நிர்வாகிகளை நீக்கும் நியமிக்கும் அதிகாரம் இருக்கிறது எனக் கூறிய அன்புமணி தேர்தல் ஆணையம் வரை சென்று முறையிட்டிருந்தார். இது ஒரு புறம் இருக்க தமிழகம் முழுவதும் மாவட்ட ரீதியான ஒருங்கிணைந்த பொதுக்குழு கூட்டங்களை நடத்திய அன்புமணி, 100 நாள் சுற்றுப்பயணத்தையும் தொடங்கி இருக்கிறார்.
பாமக பொதுக்குழு கூட்டம்
இந்த நிலையில் தேர்தல் ஆணையத்தில் அங்கீகாரம் பெறும் வகையில் இன்று மாமல்லபுரத்தில் பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அன்புமணி அறிவித்தார். அதற்கான அனுமதி கேட்டு காவல்துறையிலும் மனு அளிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. இந்த நிலையில் கட்சியின் நிறுவனர் நான் தான் எனது அனுமதி இல்லாமல் பொதுக்குழு கூட்டத்தை நடத்தக் கூடாது, பொதுக்குழு கூட்டத்தை நடத்தினால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என நீதிமன்றத்தில் ராமதாஸ் தரப்பு வழக்கு தொடர்ந்தது.
நீதிமன்றம் உத்தரவு
ராமதாஸ் அன்புமணியிடையே தனித்தனியாக விசாரணை நடத்திய நீதிபதி, அன்புமணியின் பொதுக்குழுவுக்கு தடை இல்லை என ராமதாஸின் மனுவை தள்ளுபடி செய்தார். இதை அடுத்து திட்டமிட்டபடி பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் இன்று மாமல்லபுரத்தில் தொடங்கியது. தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.அன்புமணி ராமதாஸ் தலைமையில், வடிவேல் ராவணன் முன்னிலையில் இந்த பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
பொதுக்குழு
இதில் பொருளாளர் திலகபாமா, வழக்கறிஞர் பாலு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் உள்ளிட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மேலும் பொதுக்குழுவுக்கு வருகை தந்தவர்களுக்கு தனித் தனியாக அடையாள அட்டை வழங்கப்பட்டு அவர்கள் கையெழுத்திட்டு பொதுக்குழு நடக்கும் அரங்கத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். மேலும் பொதுக்குழுவுக்கு வந்தவர்களின் வருகை பதிவு சரிபார்க்கப்பட்டு சிசிடிவி கேமராவில் பதிவு செய்யப்பட்டது.
ராமதாஸுக்கு இருக்கை
இதில் ஆச்சரியப்படத்தக்க வகையில் ராமதாஸுக்கு பொதுக்குழுவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. ஆனால் அவர் பொதுக்குழுவில் கலந்து கொள்ளவில்லை. அதே நேரத்தில் மாநாட்டின் அனைத்து பேனர்களிலும் ராமதாஸின் படம் இடம்பெற்று இருந்தது. மேடையிலும் வழக்கம் போல் ராமதாஸுக்கு மேடையின் நடுவே இருக்கை அமைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் பொதுக் குழுவில் கலந்து கொள்பவர்கள் எக்காரணத்தை கொண்டும் ராமதாஸ் குறித்து விமர்சித்து பேசக்கூடாது, கட்சியின் வளர்ச்சி, அடுத்த கட்ட நடவடிக்கைகள் மட்டுமே பேச வேண்டும் என அன்புமணி தரப்பில் அறிவுறுத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications