2026-ல் பாமக ஆட்சி! நமது அரசு தான் வேண்டும் என மக்களே கேட்கத் தொடங்கிவிட்டனர்! அன்புமணி உற்சாகம்!
சென்னை: 2026-ம் ஆண்டு தமிழகத்தில் அமையப்போவது பாமக ஆட்சித் தான் என அன்புமணி ராமதாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Recommended Video
பாமகவிடம் நல்ல திட்டங்களும், கொள்கைகளும் இருப்பதால் பாமக ஆட்சி தான் வேண்டும் என மக்களே இப்போது கேட்கத் தொடங்கிவிட்டதாக அவர் கூறியிருக்கிறார்.
விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைந்த பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அவர் இதனைக் கூறினார்.

அன்புமணி ராமதாஸ் பேச்சு
மேலும், தமிழகத்தில் அரசியல் சூழல் மாறத் தொடங்கிவிட்டதாகவும் மக்களின் மன நிலையும் மாற்றம் காணத் தொடங்கிவிட்டதாகவும் கூறியிருக்கிறார். பாமகவினர் ஒற்றுமையாக களப்பணியாற்றினால் 2026-ம் ஆண்டு நமது ஆட்சி அமைவதை யாராலும் தடுக்க முடியாது என பேசியிருக்கிறார். பாமகவுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்துத் தான் பார்ப்போமே என மக்கள் சிந்திக்கத் தொடங்கிவிட்டதாக அன்புமணி ராமதாஸ் கூறியிருக்கிறார்.

இளைஞர்கள் பலம்
ஒரு மாதத்தில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கிராமங்களிலும் பாமக கொடி பறக்க வேண்டும் என்று நிர்வாகிகளிடம் கேட்டுக்கொண்ட அன்புமணி ராமதாஸ், எந்தக் கட்சியிலும் பாமகவுக்கு இணையாக இளைஞர்கள் கிடையாது எனவும் சவால் விடுத்தார். பாமகவின் பலமே இளைஞர் பலம் தான் எனக் கூறி பெருமிதம் தெரிவித்தார். அடித்தட்டு மக்களை கைதூக்கி முன்னுக்கு கொண்டு வர வேண்டும் என்பதற்காக 40 ஆண்டுகாலத்திற்கும் மேலாக ராமதாஸ் உழைத்து வருவதாக தெரிவித்தார்.

35 வயதில் மத்திய அமைச்சர்
எல்லா தகுதிகளும், திறமைகளும், தொலைநோக்குத் திட்டங்களும் இருந்தும் பாமக இன்னும் ஆட்சிக்கு வர முடியவில்லையே என்ற வருத்தம் தனக்கு இருப்பதாகவும் தனக்கு பதவி ஆசை துளியும் இல்லை என்றும் 35 வயதில் மத்திய அமைச்சர் பதவி தேடி வந்தது எனவும் அன்புமணி குறிப்பிட்டார். பில்கேட்ஸ் முதல் உலகத் தலைவர்கள் வரை எல்லோரையும் தாம் பார்த்துவிட்டேன் என்றும் இனி தமிழகம் முன்னேற வேண்டும் என்ற ஒற்றை இலக்கு மட்டுமே தனக்கு உள்ளதாகவும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

சாராய கடைகள்
தமிழகத்தில் சாராய கடைகளால் பெண்கள் நிம்மதியாக வாழ முடியாத நிலை உள்ளதாகவும் மதுவிலக்குக்கு எதிரான பாமகவின் போராட்டம் ஒரு நாளும் ஓயாது எனவும் அவர் உறுதியளித்தார். மாணவர்கள் சீரழிவதை பார்க்கும் போது தனது நாடி நரம்புகள் எல்லாம் துடிப்பதாகவும் என்ன செய்யப்போகிறோம் என்ற கேள்வி தனக்குள் எழுவதாகவும் வேதனை தெரிவித்த அவர் பாமக கையில் அதிகாரத்தை வழங்க மக்கள் முன்வர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.












Click it and Unblock the Notifications