ஆந்திராவில் லாரி மீது வேன் மோதி விபத்து - தமிழகத்தைச் சேர்ந்த 7 பேர் உடல் நசுங்கி பலி
ஆந்திராவில் லாரி மீது வேன் மோதிய விபத்தில் சென்னை பெரம்பூரை சேர்ந்த 7 பேர் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பியபோது இந்த பயங்கர விபத்து நிகழ்ந்துள்ளது.
சென்னை: ஆன்மீக பயணமாக ஆந்திரா சென்ற போது நிகழ்ந்த விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 7 பேர் உள்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர். டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியதில் விபத்து நேரிட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. சாலை விபத்தில் ஒரே பகுதியைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரம்பூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பெரம்பூர் அகரம் பகுதியில் இருந்து 15 பேர் ஆந்திர மாநிலத்தில் உள்ள கோவில்களுக்கு சுற்றுலா சென்றனர். சென்னையில் இருந்து ரயில் மூலமாக நெல்லூருக்கு சென்ற அனைவரும் அங்கு வாடகை வேனை எடுத்துக்கொண்டு பல இடங்களை சுற்றி பார்த்தனர்.
சனிக்கிழமை மாலை கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் மல்லிகார்ஜூன சாமி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தனர்.
முக்கிய சுற்றுலாத்தலங்கள் அனைத்தையும் பார்த்து முடித்ததும் மீண்டும் ரயில் மூலம் சென்னை திரும்ப முடிவு செய்தனர். நள்ளிரவு நேரமானதால் ஸ்ரீசைலத்தில் இருந்து நெல்லூர் ரயில் நிலையம் நோக்கி வேனில் புறப்பட்டனர்.

லாரி மீது மோதிய வேன்
ஞாயிறன்று அதிகாலை 3.30 மணியளவில் சென்னை-மும்பை தேசிய நெடுஞ்சாலையில் வேன் வேகமாக வந்து கொண்டிருந்தது. நெல்லூர் அருகே உள்ள புஜ்ஜிரெட்டிபாளையம் பகுதியில் உள்ள தாமரமடுகு என்ற இடத்தில் சென்றபோது வேன் திடீரென நிலை தடுமாறியது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வேன் தாறுமாறாக ஓடியது. டிரைவர் வேனை கட்டுப்படுத்த முயன்றார். ஆனால் அவரால் முடியவில்லை. மின்னல் வேகத்தில் சென்ற வேன் அங்குள்ள பெட்ரோல் பங்க் அருகே சாலையோரம் நின்றுகொண்டிருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது.

தூக்கி வீசப்பட்ட மக்கள்
கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த கோர விபத்தால் வேனில் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் வேனில் இருந்து கீழே தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் வேனை ஓட்டிச்சென்ற டிரைவர் உள்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தில் சிக்கியவர்களை அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து மீட்டனர்.

5 பெண்கள் உள்பட 8 பேர் உயிரிழப்பு
உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 8 பேரை நீண்டநேர போராட்டத்திற்கு பின்னர் வேனில் இருந்து வெளியே கொண்டு வந்தனர். பின்னர் அனைவரையும் நெல்லூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே ஒருவர் உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது. இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களில் 5 பேர் பெண்கள் ஆவர்.

மீட்ட காவலர்கள்
விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் புஜ்ஜிரெட்டிபாளையம் போலீசார் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். உயிரிழந்தவர்களின் உடல்களை வரிசையாக போலீசார் அடுக்கி வைத்து அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டனர். இதில் உயிரிழந்தவர்கள் யார் யார் என்ற விவரம் தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் பத்மினி, ரேவதி, தேவி, சுஜாதா, ஆஷா, நந்தகுமார்,ஜெகதீசன், குருநாதரெட்டி ஆகியோர் உயிரிழந்தனர்.

ஒரே பகுதியைச் சேர்ந்தவர்கள்
உயிரிழந்தவர்களில் நந்தகுமார், பத்மினி ஆகியோர் கணவன்-மனைவி ஆவர். இவர்கள் பெரவள்ளூர் ஜி.கே.எம் காலனி முதல் தெருவை சேர்ந்தவர்கள். நந்தகுமார் ஓய்வுபெற்ற ஐ.சி.எப். ஊழியர். மேலும் பலியான ஜெகதீசன் ஏ.சி.மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தவர். இவரும் பெரவள்ளூர் காமராஜ் தெருவில் வசித்து வந்தார். உயிரிழந்த ரேவதி பெரவள்ளூர் தான்தோன்றி அம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர். தேவி திரு.வி.க. நகரையும், சுஜாதா பெரம்பூர் வாசுதேவன் தெருவை சேர்ந்தவர்கள்.

உறவினர்கள் விரைந்தனர்
விபத்தில் உயிரிழந்த வேன் டிரைவர் ஆந்திராவை சேர்ந்தவர். விபத்தில் காயம் அடைந்த 2 பெண் குழந்தைகள் உள்பட 7 பேர் நெல்லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விபத்து பற்றி அகரத்தில் உள்ள உறவினர்களுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் நெல்லூருக்கு விரைந்தனர்.

ஆன்மீக சுற்றுலா சோகமானது
இந்த விபத்தில் அனைவரையும் சுற்றுலாவுக்கு அழைத்து சென்ற ரேவதியும் உயிரிழந்து விட்டார். உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதபரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் நேற்று மாலை ஒப்படைக்கப்பட்டது. ஆன்மீக சுற்றுலா சென்றவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரம்பூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications