அண்ணா பல்கலை. மாணவி பலாத்கார வழக்கு- கைதான ஞானசேகரன் மருத்துவமனையில் திடீர் அனுமதி!
சென்னை: அண்ணா பல்கலைக் கழக மாணவி பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் ஞானசேகரனை சிறப்பு புலனாய்வுக் குழுவினர் 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்த நிலையில் திடீரென வலிப்பு ஏற்பட்டதால் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக் கழக மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் ஞானசேகரன் என்ற குற்றவாளி உடனடியாக கைது செய்யப்பட்டார்.

இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் அமைச்சர்கள் உள்ளிட்டோருடன் நெருக்கமாக இருக்கும் படங்கள் வெளியாகி பெரும் சர்ச்சை வெடித்தது. மேலும் ஞானசேகரன் போனில், சார் என குறிப்பிட்டதாகவும் இதனால் யார் அந்த சார் என்ற சர்ச்சையும் வெடித்தது. தமிழக சட்டசபையிலும் இந்த விவகாரம் எழுப்பப்பட்டது. அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், ஞானசேகரன் திமுக அனுதாபிதான்; திமுக உறுப்பினர் இல்லை; அவரை எப்படி கட்சியில் இருந்து நீக்க முடியும்? என கேட்டிருந்தார்.
இதனிடையே நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வுக் குழு, ஞானசேகரனை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வந்தது. இந்த நிலையில் இன்று திடீரென ஞானசேகரனுக்கு வலிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ஞானசேகரன் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications