ஆதரவாளர்களுக்கு சீட்.. அண்ணாமலை வைத்த டிமாண்ட்.. பாஜக வேட்பாளர் பட்டியல் தாமதமாவதன் பின்னணி!
சென்னை: தமிழக பாஜக நிர்வாகி அண்ணாமலை தனது ஆதரவாளர்களான எஸ்ஜி சூர்யா, அமர்பிரசாத் ரெட்டி உள்ளிட்டோருக்கு சீட் கொடுக்க வேண்டும் என்று டிமாண்ட் வைத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதேபோல் கோவை மாவட்டத்தில் உள்ள தொகுதிகளை தவிர்த்து வேறு எங்கும் போட்டியிட மாட்டேன் என்றும் அண்ணாமலை கூறிவிட்டதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 19 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தமிழக பாஜக தரப்பில் இதுவரை வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படவில்லை. அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி மயிலாப்பூர், தளி, மொடக்குறிச்சி, உதகை, அவிநாசி, திருப்பூர் தெற்கு, கோவை வடக்கு, கந்தர்வகோட்டை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் புதுக்கோட்டை, திருப்பத்தூர், மதுரை தெற்கு, சாத்தூர், திருச்செந்தூர், வாசுதேவநல்லூர், ராதாபுரம், நாகர்கோவில், விளவங்கோடு, ஆவடி, திருவண்ணாமலை, தஞ்சாவூர், திருவாரூர், அறந்தாங்கி, ராசிபுரம், ராமநாதபுரம், பத்மநாபபுரம், மானாமதுரை, குளச்சல் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. கொங்கு மண்டலத்தில் பலமாக இருக்கும் பாஜகவுக்கு 5 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
கோவையில் அதிக தொகுதியை பாஜக எதிர்பார்த்த சூழலில், கோவை வடக்கு தொகுதி மட்டுமே அளிக்கப்பட்டது. இதனால் அண்ணாமலை சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. ஏனென்றால் கோவை தவிர்த்து திருப்பூர் மற்றும் கரூர் மாவட்ட தொகுதிகளில் மட்டுமே அண்ணாமலை போட்டியிட முடியும்.
ஆனால் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் நடைபெற்ற பாஜக மையக் குழு கூட்டத்தில் அண்ணாமலை கோவை நாடாளுமன்றத் தொகுதிகளை தவிர்த்து வேறு எங்கும் போட்டியிட விருப்பமில்லை என்று கூறிவிட்டார். அதேபோல் 20 நாட்களில் ஒரு தொகுதியில் பணியாற்றி யாராலும் வெல்ல முடியாது என்பதையும் அண்ணாமலை கூறி இருக்கிறார்.
ஆனால் டெல்லி தலைமை அண்ணாமலை கட்டாயம் போட்டியிட வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறது. இதனால் கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட அண்ணாமலை முன் வந்துள்ளார். இதற்கு பாஜக தலைமை என்ன சொல்கிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேபோல் அண்ணாமலை தனது ஆதரவாளர்களுக்கு கட்டாயம் சீட் கொடுக்க வேண்டும் என்றும் டிமாண்ட் வைத்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலிலேயே தென்சென்னை தொகுதியில் போட்டியிட எஸ்ஜி சூர்யா விரும்பினார். ஆனால் கடைசி நேரத்தில் தமிழிசைக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதனால் மயிலாப்பூர் தொகுதியை எஸ்ஜி சூர்யாவுக்கும், தளி தொகுதியை அமர்பிரசாத் ரெட்டிக்கும் ஒதுக்க வேண்டும் என்று அண்ணாமலை டிமாண்ட் வைத்ததாக தகவல் கிடைத்துள்ளது.












Click it and Unblock the Notifications