சனாதன சர்ச்சை.. சேகர்பாபு பதவி விலக கோரிக்கை! வள்ளுவர் கோட்டத்தில் சாலையில் அமர்ந்து அண்ணாமலை தர்ணா
சென்னை: சென்னை வள்ளுவர் கோட்டத்தில் சாலையில் அமர்ந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
செப்டம்பர் 3 ஆம் தேதி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட சனாதன ஒழிப்பு மாநாட்டில் திமுக இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், இந்த மாநாட்டின் தலைப்பில் சனாதன எதிர்ப்பு மாநாடு என போடாமல் ஒழிப்பு மாநாடு என போட்டுள்ளீர்கள்.

எனக்கு இந்த தலைப்பே மிகவும் பிடித்துவிட்டது. சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு, கொரோனா, மலேரியா ஆகியவற்றை நாம் எதிர்க்கக் கூடாது, ஒழித்துக் கட்ட வேண்டும் என உதயநிதி பேசியிருந்தார்.
இதற்கு பாஜகவினர், இந்து அமைப்பினர் கடும் கண்டனத்தை தெரிவித்தனர். இந்த நிலையில் கூட்டத்தில் அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டதற்கு பாஜக கண்டனம் தெரிவித்திருந்தது. இதுகுறித்து அண்ணாமலை கூறியிருப்பதாவது: இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராகப் பதவி வகிக்கும் தார்மிக உரிமையை சேகர்பாபு இழந்து விட்டார். இன்னும் ஒரு வார காலத்தில், அதாவது செப்டம்பர் 10 ஆம் தேதிக்குள், தனது இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பொறுப்பிலிருந்து சேகர்பாபு பதவி விலக வேண்டும்.
இந்து மதத்தை அழிக்க நினைப்பவர்களுடன் துணை போகிறவருக்கு, இந்து சமய அறநிலையத் துறையில் என்ன வேலை? செப்டம்பர் 10-ஆம் தேதிக்குள், சேகர்பாபு அமைச்சர் பொறுப்பிலிருந்து விலகவில்லை என்றால், செப்டம்பர் 11ஆம் தேதி, சென்னையில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை தலைமை அலுவலகம் உள்ளிட்ட தமிழ்நாடு முழுவதும் உள்ள அலுவலகங்கள் முற்றுகையிடப்படும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார்.
அதன்படி சேகர்பாபு தனது பதவியிலிருந்து விலகாததால் அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவினர் சென்னையில் நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து அறநிலையத் துறை அலுவலகத்தை முற்றுகையிட சென்றனர். ஆனால் அவர்களை போலீஸார் வள்ளுவர் கோட்டம் அருகே தடுத்து நிறுத்தினர். இதையடுத்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் தலைவர் பொன் ராதாகிருஷ்ணன், மகளிரணித் தலைவி வானதி சீனிவாசன், நாராயணன் திருப்பதி உள்ளிட்டோர் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
அப்போது அண்ணாமலை பேசுகையில் சனாதன தர்மத்திற்கும் திமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. திமுக ஏன் பட்டியலின முதல்வரை பதவியில் அமர வைக்கவில்லை என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். சுமார் 2 மணி நேரமாக பாஜகவினர் போராட்டம் நடத்தி வந்த நிலையில் அண்ணாமலை உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் சுமார் முக்கால் மணி நேரத்திற்கு மேல் போராடி வருகிறார்கள். காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். சுமார் 2000 பேருக்கு மேல் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு இணையான எண்ணிக்கையில் போலீஸாரும் குவிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications