மகனுக்கும் மருமகனுக்கும் நடத்தப்படும் கட்சி திமுக.. ஊழலுக்கு எதிரான கட்சி பாஜக - அண்ணாமலை ஆக்ரோஷம்
சென்னை: பாஜக மட்டுமே ஊழலுக்கு எதிரான கட்சி என்றும் திமுக மகனுக்கும் மருமகனுக்கும் நடத்தப்படும் கட்சி எனவும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்து உள்ளார்.
தஞ்சை மாவட்டம் திருவையாறில் நடைபயணம் மேற்கொண்ட தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டு உள்ளார். அவர் குறிப்பிட்டு உள்ளதாவது, "தஞ்சை, திருவையாறு உள்ளிட்ட டெல்டா பகுதிகளில் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்தான் இந்தியா முழுவதும் உள்ள ரேஷன் கடைகளுக்குச் செல்கிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 முதல் நவம்பர் 8 ஆம் தேதி வரை, தமிழகத்தில் இருந்து மத்திய அரசு, 8,25,000 டன் நெல்லைக் கொள்முதல் செய்தது. ஆனால் இந்த ஆண்டு அதே காலகட்டத்தில், 5,25,000 டன் நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டிருக்கிறது. காவிரியில் தண்ணீர் குறைந்த காரணத்தினால், இந்த ஒரு ஆண்டு மட்டும் மூன்று லட்சம் டன் நெல் மகசூல் குறைந்திருக்கிறது.

தங்கள் நிலத்தைத் தாய்க்குச் சமமாக மதிக்கிறவர்களே டெல்டாக்காரர்கள். விவசாயம் என்றால் என்ன என்று தெரியாத, விவசாயிகள் கஷ்டம் அறியாத முதலமைச்சர் ஸ்டாலின், தன்னை டெல்டாக்காரன் என்று கூறிக் கொள்வது நகைச்சுவை. காவிரியில் நீர் திறக்காமல் டெல்டா மக்களை வஞ்சிக்கும் தங்கள் கூட்டணிக் கட்சி காங்கிரஸை இதுவரை கண்டித்திருப்பாரா? இதே நிலை தொடர்ந்தால், இன்னும் இரண்டு ஆண்டுகளில் ரேஷன் கடைகளில் நம் மக்களுக்கு அரிசி கிடைப்பதே தட்டுப்பாடாகிவிடும்.
பிரதமர் நரேந்திர மோடி அரசு, நெல்லுக்குக் குறைந்த பட்ச ஆதார விலையை 67% உயர்த்தியிருக்கிறது. யூரியா 45 கிலோ உர மூட்டையின் விலை 3,000 ரூபாய். ஆனால், மத்திய அரசு 250 ரூபாய் மானிய விலையில் வழங்குகிறது. விவசாயிகளுக்கு வருடம் 6,000 ரூபாய் நிதி, இயற்கை விவசாயத்திற்கு ஊக்க நிதி, பயிர் காப்பீடு என விவசாயம் செழிக்க பிரதமர் கொண்டு வந்துள்ள திட்டங்கள் ஏராளம்.
திமுக ஆட்சிக்கு வந்த 30 மாத காலத்தில், விவசாயம் நொடித்துப் போக ஆரம்பித்திருக்கிறது. திமுக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில்தான், மீத்தேன், நிலக்கரி என அத்தனைத் திட்டங்களையும் கொண்டு வந்து விட்டு, தற்போது எதிர்ப்பது போல நாடகமாடுகிறார்கள். ஆனால் பாஜக, உடனடியாக மத்திய அமைச்சரிடம் பேசி, நிலக்கரி எடுக்கும் திட்டத்தையே ரத்து செய்தது. விவசாயிகளுக்கு உற்ற துணையாக தமிழக பாஜக என்றும் இருக்கும்.
இந்தத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், தொகுதிக்கோ, மக்களுக்கோ, விவசாயத்துக்கோ ஒன்றுமே செய்ததில்லை. மத்திய நிதித்துறை இணையமைச்சராக இருந்தபோது கேரள மாநிலத்தில் நடந்த ஊழல் வழக்கில் லஞ்சம் வாங்கியதாகக் குற்றம்சாட்டப்பட்டவர். பாஜக மட்டுமே ஊழலுக்கு எதிரான கட்சி. திமுக மகனுக்கும் மருமகனுக்கும் நடத்தப்படும் கட்சி. இந்த ஊழல் மலிந்த, மக்கள் விரோத திமுக முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட வேண்டும்.
சோழர்களின் ஆட்சியில் சிறப்பு பெற்ற புண்ணிய பூமியான திருவையாறு சிறக்க, விவசாயம் செழிக்க, இளைஞர்கள் பெருமளவில் விவசாயத்தில் ஈடுபட, மக்கள் நலம்பெற, வரும் பாராளுமன்றத் தேர்தலில் விவசாயிகளுக்காக உழைக்கும் பிரதமர் நரேந்திர மோடி கரங்களை வலுப்படுத்த, டெல்டா பகுதியில் இருந்து மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்." என்று தெரிவித்து உள்ளார்.












Click it and Unblock the Notifications