அந்த 3 பேர்.. உண்மையை மறைக்க முயற்சி நடக்குற மாதிரி தெரியுதே.. என்கவுண்டர் பற்றி அண்ணாமலை சந்தேகம்!
சென்னை: ஆம்ஸ்ட்ராங் படுகொலையில், திமுகவினர் மூன்று பேர் சம்பந்தப்பட்டிருப்பதால், ஏதோ ஒரு உண்மையை மறைக்க முயற்சிகள் நடப்பது போலத் தெரிகிறது என என்கவுண்டர் பற்றி சந்தேகம் கிளப்பி உள்ளார் அண்ணாமலை.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த 5 ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 11 பேரையும் காவலில் எடுத்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ரவுடி திருவேங்கடம் என்பவரும் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று காலை 5.30 மணியளவில், கொலையாளிகள் ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்த சென்னை மாதவரம் ஏரிக்கரை பகுதிக்கு விசாரணைக்காக போலீசார் திருவேங்கடத்தை அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது போலீசாரிடம் இருந்து ரவுடி திருவேங்கடம் தப்ப முயற்சித்துள்ளார்.
ரௌடி திருவேங்கடம் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களால் போலீசாரை தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து தற்காப்புக்காக போலீசார் திருவேங்கடத்தை என்கவுண்டரில் சுட்டுக் கொன்றுள்ளனர். சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி திருவேங்கடம் மீது 3 கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன.
ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ரவுடி திருவேங்கடம் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவேங்கடம் தான், ஆம்ஸ்ட்ராங்கை கொல்வதற்கு முன்பு ஆட்டோ டிரைவர் போல வேவு பார்த்தவர் என்றும், ஆம்ஸ்ட்ராங்கை பின்னால் இருந்து வெட்டியதும் அவர் தான் என்றும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த என்கவுண்டர் தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, "பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் கொலை வழக்கில் சரணடைந்த திருவேங்கடம் என்பவரை, இன்று தமிழக காவல்துறையினர் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். திருவேங்கடம், தப்பி ஓடும்போது சுட்டுக் கொன்றதாகத் தெரிவித்துள்ளனர்.
கொலை செய்ததாகச் சரணடைந்த ஒருவர் தப்பியோட முயற்சித்தார் என்பது பெருத்த சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது. ஆம்ஸ்ட்ராங் அவர்கள் படுகொலையில், திமுகவினர் மூன்று பேர் சம்பந்தப்பட்டிருப்பதனால், ஏதோ ஒரு உண்மையை மறைக்க முயற்சிகள் நடப்பது போலத் தெரிகிறது. ஆம்ஸ்ட்ராங் அவர்கள் கொலை வழக்கு, சரியான திசையில் செல்கிறதா என்ற கேள்வியும் எழுகிறது.
இந்த திருவேங்கடம் என்பவர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதை, காவல்துறை உயர் அதிகாரிகள் முறையாக விசாரிக்க வேண்டும் என்றும், ஆம்ஸ்ட்ராங் அவர்கள் படுகொலை தொடர்பான விசாரணை, நியாயமாகவும், துரிதமாகவும் நடக்க வேண்டும் என்றும், திமுக அரசை வலியுறுத்துகிறேன்." எனத் தெரிவித்துள்ளார் அண்ணாமலை.












Click it and Unblock the Notifications