பிளான் பண்ணியே வேட்பு மனுவில் தவறு செய்துள்ளார் அண்ணாமலை.. பெரிய திட்டம்.. விளாசும் காங்கிரஸ்!
சென்னை: "இந்திய வரலாற்றில் ஏதாவது ஒரு மாநிலத்தின் தலைவர் அண்ணாமலையைப் போல வேட்பு மனுவை தாக்கல் செய்திருக்கிறாரா? இதுதான் கிரிமினல் வேலை" என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, "ஜனநாயகத்துக்கு உட்பட்ட அரசியல் கட்சிகளை முடக்கும் வேலையை பாஜக செய்து வருகிறது. அதனுடைய உச்சபட்சமாக காங்கிரஸ் கணக்குகளில் உள்ள பணத்தை திருடினால் காங்கிரஸ் பேரியக்கம் நகராது, எங்கும் செல்ல முடியாது என்ற கணக்குப் போட்டு, வங்கிக் கணக்குகளை முடக்கும் செயலை செய்து இருக்கிறார்கள்.

இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சி மக்களை சந்தித்துக் கொண்டிருக்கிறது. தற்போது வருமான வரித்துறை அபராதத்தை விதித்திருக்கிறது. இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். எதற்காக இதை எல்லாம் தேர்தல் நேரத்தில் செய்கிறார்கள் என்று நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இது ஒரு பாசிச ஆட்சி என பாஜவினரே நிரூபித்து வருகிறார்கள். இவை முழுக்க முழுக்க சர்வாதிகாரம்.
கள்ள பணம், கருப்பு பணம், தீவிரவாத பணம் என எல்லாவற்றையும் தேர்தல் பத்திரம் மூலம் திருடும் பாஜக, காங்கிரஸ் கட்சியின் பணத்தை திருடுகிறது. இது எந்த விதத்தில் நியாயம்? பாஜக இந்த தேர்தலில் மிகப் பெரிய தோல்வியைச் சந்திக்கப் போகிறது. எங்கள் தலைவர் சொன்னதைப்போல பாஜகவை மட்டும் வீழ்த்தினால் போதாது. ஆர்எஸ்எஸ் இயக்கத்தையும் ஒழிக்க வேண்டும்." என்றார்.
மேலும் பேசிய செல்வப்பெருந்தகை, "இந்திய வரலாற்றில் எந்தவொரு தலைவரும் செய்யாத ஏமாற்று வேலையைச் செய்துள்ளார் அண்ணாமலை. இதுதான் மக்களை ஏமாற்றும் கிரிமினல் வேலை என்பது. இதை பாஜகவால் மட்டுமே செய்ய முடியும். அண்ணாமலை என்ன படித்திருக்கிறார்? எழுத்தறிவில்லாத, படிப்பறிவு இல்லாத பாமரன் கூட வேட்புமனுவை சரியான முறையில் பதிவு செய்கிறார். இவருக்கு எந்த ஸ்டாம்ப் பேப்பரில் அஃபிடவிட் தாக்கல் செய்ய வேண்டும் என்பது கூட தெரியாதா?
களத்தில் குழப்பத்தை ஏற்படுத்தவும், கலவரத்தை ஏற்படுத்தவும் அண்ணாமலை இது மாதிரியான வேலைகளை செய்து இருக்கிறார். அண்ணாமலை இப்படி பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ததே இந்த வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்பதற்காகத்தான். பின்னர், தமிழக ஆட்சியாளர்கள் வேட்பு மனுவை தள்ளுபடி செய்து விட்டதாக இதனை இந்தியா முழுவதும் கொண்டு செல்ல அண்ணாமலை திட்டம் போட்டுள்ளார்.
இந்த நாட்டையே ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்டு கொண்டு இருக்கிறீர்கள். ஒரு வேட்பு மனுவை கூட சரியான முறையில் உங்களால் தாக்கல் செய்ய முடியவில்லை என்றால் மக்களுக்கு நீங்கள் என்ன நல்லது செய்ய முடியும்?" என கடுமையாக விமர்சித்துளார்.












Click it and Unblock the Notifications