இதை வச்சு குதிரைபேரம் நடத்த திட்டமா? முதல்வர் ஸ்டாலினுக்கு சில கேள்விகள்! அண்ணாமலை வெளியிட்ட வீடியோ!
சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழக முதல்வருக்கு சில கேள்விகள் எனக் குறிப்பிட்டு வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், தான் ஒரு டெல்டாக்காரன் என மார்தட்டிக் கொண்டிருக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏன் காவிரி விவகாரத்தில் வாய் திறக்கவில்லை எனக் கேள்வி எழுப்பியுள்ளார் அண்ணாமலை.
காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு இல்லை என கர்நாடக துணை முதலமைச்சரும், நீர்வளத்துறை அமைச்சருமான டி.கே.சிவக்குமார் தெரிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதால் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்கமுடியாது என அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், காவிரியில் ஜூலை மாதத்திற்கான நீரை திறந்துவிட கர்நாடகா அரசுக்கு அறிவுறுத்தக் கோரி தமிழ்நாடு அரசு காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளது. மேலும், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இதுதொடர்பாக இன்று டெல்லிக்கு செல்கிறார்.
இந்நிலையில், அண்ணாமலை வெளியிட்டுள்ள வீடியோவில், "தமிழ்நாட்டுக்கு காவிரி தண்ணீரை திறந்து விட முடியாது என கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். இதனால் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாக இருப்பது தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள்தான். டெல்டாக்காரன் என பாவித்துக் கொண்டிருக்கும் தமிழக முதல்வர் ஏன் இதுவரை கர்நாடக துணை முதல்வரின் கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கவில்லை?
கூட்டணியாயிற்றே என்ற பாசமா? இதை வைத்து நாடாளுமன்ற இருக்கைகளுக்கு குதிரை பேரம் பேசலாம் என்ற நோக்கமா? மக்கள் எப்படிப் போனால் எனக்கு என்ன என்ற அலட்சியமா? இல்லை தான் ஒரு முதல்வர் என்பதையே மறந்து விட்டாரா? டெல்டாக்காரன் என பெருமையாக சொல்லிவிட்டு டெல்டா மக்களுக்கான உரிமை பறிபோகும்போது வாய் மூடி இருப்பது நியாயம் தானா?" என சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளார்.

முன்னதாக, தமிழ்நாடு, கர்நாடகா இடையிலான நதி நீர் பிரச்சினையில் திமுக அரசியல் செய்து வருகிறது. காவிரி பிரச்சினையில் கர்நாடக பாஜக எந்த அரசியலும் செய்யவில்லை. தற்போது காவிரியில் இருந்து இந்த ஆண்டு தமிழகத்துக்கு தண்ணீர் தர முடியாது எனவும் கூறியுள்ளனர். இதனால் தமிழ்நாடு பெரும் பாதிப்பை சந்திக்கும்.
எதிர்க்கட்சிகள் கூட்டத்துக்கு சென்றால், தன்னை அகில இந்திய அளவிலான தலைவராக ஏற்றுக்கொள்வார்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கருதுகிறார். ஆனால், காவிரிப் பிரச்சனையில் கர்நாடக முதல்வர், துணை முதல்வரைக் கண்டிக்கவோ, காங்கிரஸ் கட்சியைக் கண்டிக்கவோ முதல்வர் ஸ்டாலினுக்கு மனமில்லை என அண்ணாமலை விமர்சித்தார்.












Click it and Unblock the Notifications