பிரதமருக்கு அனுப்புவீங்களா.. சு.வெங்கடேசன் கேள்வி.. இனியாவது புரிஞ்சிக்கோங்க.. அண்ணாமலை பளீர் பதில்
சென்னை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிபிஐஎம் எம்பி சு. வெங்கடேசன் செய்த ட்வீட்டிற்கு பாஜக தலைவர் அண்ணாமலை பதில் அளித்துள்ளார்.
Recommended Video
தமிழ்நாட்டில் இன்று விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா காலம் என்பதால் பண்டிகைக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் சிலை வைத்து வழிபாடு நடத்தவும், பொது இடங்களில் சிலைகளை கரைக்கவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாடுகளுக்கு இடையில் அமைதியான முறையில் தற்போது விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக தமிழ்நாடு முழுக்க போலீஸ் பாதுகாப்பு உயர்த்தப்பட்டு உள்ளது. சென்னையில் 20 ஆயிரத்திற்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள். சில இடங்களில் பொதுவில் வைக்கப்பட்ட சிலைகள் போலீசார் மூலம் அகற்றப்பட்டது.

வாழ்த்து அட்டை
இந்த நிலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிபிஐஎம் எம்பி சு. வெங்கடேசன், பாஜக தலைவர் அண்ணாமலையை டேக் செய்து ட்வீட் ஒன்றை செய்திருந்தார். அதில், பாஜக தலைவர் அண்ணாமலை விநாயகர் சதுர்த்தி வாழ்த்து அட்டையை முதல்வருக்கு அனுப்புவதற்கு பதிலாக பொருநை நதி நாகரீகம் பற்றிய முதல்வரின் அறிக்கையை பிரதமருக்கு அனுப்பிவைத்தால் சங்கத் தமிழ் மூன்றும் தந்து விநாயகப்பெருமான் அருள்பாலிக்க வாய்ப்புள்ளது என்று குறிப்பிட்டு இருந்தார்.

பொருநை நாகரிகம்
நேற்று சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாட்டின் தொல்லியல் களஞ்சியங்கள் குறித்து விரிவாக பேசினார். தமிழர் வரலாறு குறித்த அகழாய்விற்காக அண்டை மாநிலங்கள், வெளிநாடுகளுக்கு சென்று ஆய்வுகள் நடத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதோடு தாமிரபரணி ஆற்றங்கரையை மையமாக கொண்ட பொருநை நதி நாகரிகம் 3200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்றும் அறிவித்தார்.

அண்ணாமலை
இதை குறிப்பிட்டே சிபிஐஎம் எம்பி சு. வெங்கடேசன், பாஜக தலைவர் அண்ணாமலையை டேக் செய்து ட்வீட் ஒன்றை செய்திருந்தார். இதற்கு பதில் அளித்த அண்ணாமலை, இந்த செய்தியை நான் முழுமையாக வரவேற்கிறேன். அதோடு கோவில்களுக்கு எதிரான எண்ணங்கள் வருவதற்கு முன் இந்த மண் ஆன்மீக பூமியாக இருந்தது என்பதை குறைந்தபட்சம் இனியாவது நீங்களும் உங்கள் திமுக அணியும் புரிந்து கொள்ள வேண்டும். சங்க இலக்கியங்களும், நமது பல நூறு வருட கோவில்களும் இழந்த பெருமையை, புகழை மீண்டும் பெற வேண்டும் , என்று அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

கண்டனம்
முன்னதாக விநாயகர் சதுர்த்தி விழாவில் பொது ஊர்வலங்களை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு தடை விதித்ததற்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்து இருந்தார். விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தே தீரும். இந்து பண்டிகைகளுக்கு எதிராக திமுக செயல்படுகிறது. டாஸ்மாக் கடைகள் எல்லாம் இயங்குகிறது. விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு தடை விதிக்கும் அரசு, எதற்காக டாஸ்மாக் கடையை திறக்க வேண்டும்?.

கடிதம்
அங்கு மட்டும் கொரோனா பரவாதா? விநாயகர்தான் திமுகவின் ஆட்சிக்கு முடிவு கட்ட போகிறார். விநாயகர் சிலை ஊர்வலத்தில் கை வைத்தால் திமுகவின் ஆட்சி கலையும். எந்த அரசு தடுத்தாலும் விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தே தீரும். எல்லோரும் வீட்டின் முன் சிலைகள் வைக்க வேண்டும். அதோடு முதல்வர் ஸ்டாலினுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்து அட்டைகளை அனுப்ப வேண்டும் என்று அண்ணாமலை குறிப்பிட்டு இருந்தார்.












Click it and Unblock the Notifications