ஓடி ஒளிஞ்சது யாருங்க? பிரதமர் மோடியைப் பார்த்து ஸ்டாலின் கத்துக்கணும்.. திமுக மீது பாய்ந்த அண்ணாமலை!
சென்னை: திமுக யாரையும் கண்டு பயப்படாது என்று கூறுகின்றனர், ஆனால் எமர்ஜென்சியின் போது ஓடி ஓளிந்தனர். பயமின்றி ஆட்சி புரிய பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் கற்றுக்கொள்ள வேண்டும் என்று தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை சைதாப்பேட்டையில் பாஜக சாா்பில் நேற்று இரவு பாஜக அரசின் 9 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தப் பொதுக்கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மாநில துணைத் தலைவா்கள் கரு.நாகராஜன், வி.பி.துரைசாமி, மாநிலச் செயலாளர் கராத்தே தியாகராஜன், முன்னாள் எம்.பி மைத்ரேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்தப் பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை பேசுகையில், "2014-ஆம் ஆண்டுக்கு முன்பு பொருளாதார வளா்ச்சியில் 13-ஆவது இடத்தில் இருந்த இந்தியா, பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் ஐந்தாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. 2027ஆம் ஆண்டுக்குள் அமெரிக்கா, சீனாவுக்குப் பின் மூன்றாவது இடத்துக்கு இந்தியா முன்னேறும்.
புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் மக்களாட்சியின் சாட்சியான செங்கோலை நிறுவியதன் மூலம் தமிழர்களின் கலாசாரத்துக்கு பெருமை கிடைத்துள்ளது. உலகம் முழுவதும் தமிழ் கலாசாரத்தை கொண்டு செல்ல பிரதமர் முயற்சி செய்து வருகிறார்.
முதல்வர் ஸ்டாலின் திமுகவின் மூன்றாம் தர பேச்சாளா் போல பேசி வருகிறார். பாஜகவினருக்கு மிரட்டல் விடுத்துள்ளார். எமர்ஜென்சி அமல்படுத்தியபோது அன்றைய பிரதமர் இந்திரா காந்தியைக் கண்டு அஞ்சியது திமுகவினர்தான். கச்சத்தீவை இலங்கைக்கு அன்றைய காங்கிரஸ் அரசு தாரைவாா்த்தபோதும், மீன்பிடி வலைகளை உலர்த்தும் உரிமையை இலங்கைக்கு விட்டுக்கொடுத்தபோதும் இந்திரா காந்திக்கு அஞ்சி திமுக எதிர்ப்புக் குரல் கொடுக்கவில்லை.
தி.மு.க யாரையும் கண்டு பயப்படாது என்று கூறுகின்றனர். ஆனால் எமர்ஜென்சியின் போது ஓடி ஓளிந்தனர். பயம் இல்லாமல் ஆட்சி புரிய பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் கற்றுக்கொள்ள வேண்டும்.
அமைச்சரை அரசு மருத்துவமனை வேண்டாம் என்று தனியார் மருத்துவமனைக்கு மாற்றுகின்றனர். தனியார் மருத்துவமனையில் தான் உயர்தர சிகிச்சை கிடைக்கும் எனில் ஏழைகளையும் அங்கு அனுப்புங்கள். தவறு செய்யும்போது யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவர். சமூக வலைதளத்தில் உண்மையை பதிவிட்ட எஸ்.ஜி.சூர்யாவை கைது செய்துள்ளனர்.
இன்னும் 9 மாதங்களில் திமுகவினரை தோ்தலில் எதிர்கொள்ள பாஜகவினர் தயார் நிலையில் இருக்க வேண்டும். இன்று 4 எம்.எல்.ஏக்கள்தான். அவை நாளை 150 ஆக அதிகரிக்கும். உழைப்புதான் எங்கள் நம்பிக்கை" எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications