Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதிகாரிகள் சுற்றிச் சுழன்று பணியாற்றினார்கள்.. திமுக அரசோ போட்டோஷூட் நடத்தியது.. அண்ணாமலை பாய்ச்சல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மிக்ஜாம் புயலின் கோரத்தாண்டவத்தால் சென்னை மாநகரம் ஸ்தம்பித்துப் போனது, உணவு பண்டங்களுக்காக உயிர்ப் போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது, ஆனால் மக்களைக் காப்பாற்ற ஆட்சியாளர்கள் நடவடிக்கைகளை எடுக்கவில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், "மிக்ஜாம் புயலின் கோரத்தாண்டவத்தால் சென்னை மாநகரம் ஸ்தம்பித்துப் போனது. நீண்ட அதன் தெருக்களெல்லாம் நீர்நிலைகளானது. தமிழ்மக்கள் குடியிருப்புகள் எல்லாம், தண்ணீர்க் குளங்களாக மாறிப் போனது. உயிருக்கும், உடைமைக்கும், உணவிற்கும் உத்தரவாதம் இல்லாமல் தமிழக மக்கள் தவித்துப் போனார்கள். மாநில அரசு செய்வதறியாது திகைத்து நிற்கும் போது, நிவாரணப் பணிகளைப் திட்டமிட, மத்திய அரசு 24 மணி நேரத்தில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களை பார்வையிட அனுப்பி வைத்த வேகம் இதுவரை தமிழகம் காணாதது.

Annamalai slams dmk government on chennai flood relief works

தமிழக அரசுக்கு பெருமழை பெய்யப்போகிறது என்ற தகவல் வந்திருந்தும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படாமல், ஏதும் புரியாது, செய்வது அறியாது, செயலிழந்து போனது. 2015 பெருவெள்ளம், 2016 வர்தா புயல் ஆகியவற்றின் தாக்கங்களை அனுபவித்த பிறகும் அதிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்ளாமல் மிக்ஜாம் புயலிலும், தடுமாறிப் போனது தமிழக அரசு. மழைநீர் சூழ்ந்து, மின்சாரம் துண்டிக்கப்பட்டு, செல்போன் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு சென்னை ஒட்டுமொத்தமாக நீரில் மூழ்கியது, மேல்நிலை நீர்த்தொட்டிக்கு நீர் ஏற்ற முடியாமல் அடுக்குமாடி குடியிருப்பவர்கள் அவதிக்குள்ளாக, மழை நீரை மிஞ்சியது மக்களின் கண்ணீர்.

நிலையான செயல் திட்டங்கள் ஏதுமில்லாத தமிழக அரசு நிர்வாகத்தின் மோசமான செயல்பாடுகள், இயல்பு வாழ்க்கை, வியாபாரம், தொழில், பள்ளி, கல்லூரி, அலுவலக செயல்முறையை முடக்கி போடும் வண்ணம் அமைந்திருந்தது. தகவல் தொழில்நுட்பம் பாதிக்கப்பட்டது. செல்போன்கள் இணைப்பு துண்டிக்கப்பட்டது, WiFi இணைப்பு கிடைக்கவில்லை, தரவுகள், தகவல் தொழில்நுட்பம், நிதி மேலாண்மை, மனித வளம், ஆகிய உயர் தொழில்நுட்ப பன்னாட்டு நிறுவனங்கள் இயங்கும் ஜிசிசி எனப்படும் குளோபல் கேப்பபிலிட்டி சென்டராக செயல்படும் சென்னை மாநகரம் எத்தனை பாதுகாப்புடன் இருந்திருக்க வேண்டும்.

தமிழக அரசு எத்தனை விழிப்புடன் வருமுன் காத்திருக்க வேண்டும். இப்படி மழை நீர் வடிகாலுக்கான திட்டங்களைக் கூட சரியாகச் செய்யத்தவிக்கும் அரசை நம்பி எப்படி GCC - Global Capability Centre நிறுவனங்கள், GCC - Greater Chennai Corporation- ல் தங்கள் நிறுவனங்களை அமைக்க முன்வரும்? 25-06-2015 அன்று நகர்ப்புற பகுதிகளை மறு சீரமைப்பு செய்வதற்காக உருவாக்கப்பட்ட திட்டமான அடல் மிஷின் (AMRUT) திட்டத்தின் கீழே மழைநீர் வடிகால் மற்றும் வெள்ளநீர் வடிகால் பராமரிப்பிற்காக அரசின் சார்பில் தமிழக அரசுக்கு ரூபாய் 4,397 கோடிகள் வழங்கப்பட்டிருந்தது. மத்திய அரசு வழங்கிய இந்த நிதியை முறையாக மாநில அரசு செலவிட்டிருந்தால் தற்போது மக்களுக்கு ஏற்பட்ட துன்பங்களுக்குத் தீர்வுகள் காணப்பட்டிருக்கலாம்.

ஆனால் மக்கள் கவருக்கு ஐம்பது ரூபாய் விலையில் ஆவின் பாலுக்கு ஆலாய்ப் பறக்க வேண்டி இருந்தது. ஒரு தண்ணீர் கேனுக்கு 75 முதல் 100 ரூபாய் விலையில் குடிநீருக்காக குட்டிக்கரணம் அடிக்க வேண்டியிருந்தது. உணவு பண்டங்களுக்காக உயிர்ப் போராட்டம் நடத்த வேண்டி இருந்தது. 426 சதுர கிலோமீட்டர் பரப்பில் இருக்கும் சென்னையின் மக்கள் தொகை 78 லட்சமாக 12 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தது. ஆனால் இன்று தோராயமாக ஒரு கோடியே 20 லட்சம் மக்கள் சென்னையில் வசிக்கிறார்கள். இவர்களுக்கு உழைப்பதற்காக 200 வார்டு மெம்பர்கள், 16 சட்டமன்ற உறுப்பினர்கள், 3 பாராளுமன்ற உறுப்பினர்கள், ஏராளமான மாநில அமைச்சர்கள், மற்றும் முதலமைச்சர் என்று ஆட்சியாளர்கள் இத்தனை பேர் இருந்தும், மக்களைக் காப்பாற்ற ஆட்சியாளர்கள் நடவடிக்கைகளை எடுக்கவில்லை.

முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இங்கொன்றும் அங்கொன்றுமாக ஒரு குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று புகைப்படம் எடுக்கும் போட்டோ சூட் நடந்து விட்டு கலைந்து சென்றார்களே தவிர மக்களின் துன்பங்களை கேட்கும் பொறுமை கூட ஆட்சியாளர்களுக்கு இல்லை என்பதே கசப்பான உண்மை. சென்னையின் பல பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட மாநில நிர்வாகிகளுடன் பொதுமக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினோம்.

உள்ளத்தில் வேதனையுடன், வெள்ளத்தின் பாதிப்பில் இருக்கும் மக்களை தண்ணீரில் இறங்கி நடந்து சென்று சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு அறிந்து அவர்கள் உடனிருந்து உணர்வுகளை புரிந்து கொண்டு செயல்படும் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாலுக்கும் மருந்துக்கும் உணவிற்கும் மக்கள் பரிதவித்து நின்றபோது அரசாங்கமும் செய்வது இயலாது திகைத்து நின்றது. ஆனால் வடியாத நீரிலும் அரசு அதிகாரிகள் நன்றாகப் பணியாற்றினார்கள்.

கொட்டும் மழையில் பொங்கி வரும் நீரில் ஏரியின் மதகுகளை சரி செய்த பொதுப்பணித்துறை அதிகாரிகளும், சாய்ந்து போன மரங்களை அப்புறப்படுத்தி பாதுகாப்பையும் போக்குவரத்தையும் உறுதி செய்த பணியாளர்களும், தேங்கியிருக்கும் கழிவுநீரில் மூழ்கி அடைப்பெடுத்து மழை நீரோட்டத்தை சீர் செய்ய முயன்ற மாநகராட்சி ஊழியர்களும், மழை நீர் ஊடாக மின் இணைப்பை சீர் செய்ய உழைத்த மின்வாரிய ஊழியர்களும், சாலைகளில் வெள்ளம் சூழ்ந்து இருந்தாலும் மாநகரப் போக்குவரத்தை இயக்கிய போக்குவரத்து ஊழியர்களும், வெள்ளத்தில், சிக்கிய மக்களை காப்பாற்ற துணிச்சலுடன் போராடிய சி.ஆர்.பி.எஃப் தீயணைப்புத் துறை வீரர்களும், தண்ணீர் உணவு பால் போன்ற பொருட்களை கொடுப்பதற்காக பணியாற்றிய அரசு ஊழியர்களும் மனிதருள் மாணிக்கங்களாக போற்றத்தக்கவர்கள்.

நிவாரணப் பணிகளையும், மழைநீர் வடிகால் பாதுகாப்பு பணிகளையும் மேற்கொள்ள மத்தியஅரசு நிதி வழங்க வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை விடுத்த 24 மணி நேரத்தில், பாரதப் பிரதமரின் ஆணைக்கிணங்க மத்தியப் பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு.ராஜநாத் சிங் அவர்கள் இங்கே வெள்ளப் பகுதிகளை பார்வையிட்டு, தமிழ்நாடு மாநில முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

மத்திய அரசு விரைந்து செயல் பட்டு, இயற்கை பேரிடருக்காக முன்னர் வழங்கிய ரூ450 கோடியும் தற்போது அவசர உதவியாக இரண்டாம் தவணை ரூ.450 கோடியும், ஆக மொத்தம் ரூ900/- கோடி மாநில பேரிடர் நிவாரண நிதியின் (SDRF) கீழ் வழங்கப்பட்டுள்ளது. இது தவிர முதன்முறையாக சென்னைக்கு National Disaster Mitigation Fund (NDMF) என்ற புதிய திட்டத்தின் கீழ் ரூ. 561.29 கோடியும் வழங்கப்படுகிறது.

மத்திய அரசு பார்வையிட்ட அன்றே விரைவாகச் செயல்பட்டு மக்கள் பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டும், என்ற அக்கறையுடன் மத்திய அரசு நிவாரணத்தொகையை உடனடியாக வழங்கியுள்ளது. மக்கள் துயரங்களை உடனடியாகக் களைய வேண்டும் என்பதில் மத்திய அரசு காட்டும் அவசரத்தையும், அக்கறையையும் உணர்ந்து தமிழக அரசு, போர்க்கால நடவடிக்கைகளை இனியாவது எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+