என்ன வார்த்தை அது? எடப்பாடி பழனிசாமிக்கு எவ்வளவு சாதி ஆதிக்க வெறி? பாய்ந்து வந்த அண்ணாமலை!
சென்னை: ரகசிய உறவு இருப்பதாக எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். பாஜக என்ன தீண்டத்தகாத கட்சியா? இல்லை யாரும் கண்ணில் பார்க்கக்கூடாத கட்சியா? தீண்டாமை என்பது போல எதிர்க்கட்சி தலைவர் பேசுகிறார் என்றால் அவருக்குள் எவ்வளவு சாதி ஆதிக்க வெறி இருக்கும்? என எடப்பாடி பழனிச்சாமிக்கு கடுமையாக பதிலடி கொடுத்துள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை தமிழக அரசு சார்பிலும், திமுக சார்பிலும் கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, ஆகஸ்ட் 18 ஆம் தேதி கருணாநிதி உருவம் பொறித்த ரூ100 நாணயம் வெளியிடப்பட்டது. மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர், ராஜநாத் சிங் விழாவில் கலந்துகொண்டு நாணயத்தை வெளிட்டார். மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலர் இந்த விழாவில் பங்கேற்றிருந்தனர்.

இந்த விழா குறித்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, கருணாநிதி நினைவு நாணய வெளியீட்டு விழாவில் மத்திய அமைச்சர் மற்றும் பாஜகவினர் கலந்து கொண்டிருப்பது திமுக பாஜக இடையே உள்ள ரகசிய உறவை வெளிப்படுத்தி உள்ளது. இந்த விழாவிற்கு ராகுல்காந்தி ஏன் அழைக்கப்படவில்லை என்று கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி கொடுத்துள்ளார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “தமிழகத்தை ஆளும் திமுக அரசு சார்பில் கருணாநிதி நூற்றாண்டு நாணயம் வெளியிட வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில், மத்திய அரசு அதற்கான அனுமதியை வழங்கியது. திமுகவும் - பாஜகவும் ஒரே மேடையில் இருந்ததை அதிமுக பொதுச் செயலாளர் அரசியல் கலந்து பேசுவது வேதனையாக உள்ளது. பாஜக ஆட்சியில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்றெல்லாம் பார்க்கவில்லை.
எதிரும், புதிருமாக இருந்தாலும் ஒரு அரசியல் தலைவரை மதிப்பது அரசியல் நாகரிகம். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது என மத்திய அரசு முடிவு செய்த பிறகு, மாநில பாஜக முழு ஒத்துழைப்பை கொடுப்பது கடமை. இதில், நாங்கள் அரசியல் கலக்கவில்லை. எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு விஷயத்தை உணர்த்த விரும்புகிறேன். எதிரும், புதிருமாக இருந்தாலும் அரசியல் நாகரிகம் வேண்டும்.
திமுக ஆட்சிக்கு வந்த மூன்று ஆண்டுகளில் எடப்பாடி பழனிசாமி மீது தொடரப்பட்ட வழக்கை விட என் மீது ஐந்து மடங்கு வழக்கு தொடரப்பட்டுள்ளது. கிணற்றுத் தவளை போல எடப்பாடி பழனிசாமி பேசிக்கொண்டு உள்ளார். எடப்பாடி பழனிசாமி அவர்களுடைய அரசியல் புரிதல் இப்படித்தான் உள்ளது.
ஆளுநருக்கும், முதலமைச்சருக்கும் சமரசம் செய்வது எனது வேலை கிடையாது. கடந்த 1980 ஆம் ஆண்டிலிருந்து அரசியல் சூழ்நிலை தற்போது தமிழகத்தில் இல்லை. மக்களுக்கு எங்கள் மீது நம்பிக்கை வரவேண்டும். எடப்பாடி பழனிசாமியிடம் அரசியல் நாகரீகத்தை எதிர்பார்க்கிறேன்.
ரகசிய உறவு இருப்பதாக எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். என்ன வார்த்தை அது? பாஜக என்ன தீண்டத்தகாத கட்சியா? இல்லை யாரும் கண்ணில் பார்க்கக்கூடாத கட்சியா? தீண்டாமை என்பது போல எதிர்க்கட்சி தலைவர் பேசுகிறார் என்றால் அவருக்குள் எவ்வளவு சாதி ஆதிக்க வெறி இருக்கும்?
எடப்பாடி பழனிசாமி மனதில் எவ்வளவு அழுக்கு உள்ளது. எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சித் தலைவராக இருக்க தகுதியானவரா? முதலமைச்சராக இருந்த ஒருவர் இவ்வாறு பேச முடியுமா?” என கடுமையாக விமர்சித்துள்ளார் அண்ணாமலை.












Click it and Unblock the Notifications