சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு அதிக நிதி ஒதுக்கப்படுவது ஏன்? அண்ணாமலை கொடுத்த விளக்கம்!
சென்னை: தமிழ் மொழி வளர்ச்சிக்கு குறைவாக மத்திய அரசு நிதி வழங்குவதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் விமர்சனத்திற்கு, அண்ணாமலை விளக்கம் கொடுத்துள்ளார். மாவட்டந்தோறும் தமிழ்ப் பல்கலைக்கழகங்களை திறந்தால், தாராளமான மத்திய அரசு நிதி வரும் என்று கூறிய அண்ணாமலை, தங்களுக்கு தெரியாத மொழியை அரசியல்வாதிகள் செத்த மொழி என்று விமர்சிக்கும் நிலை வந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் கோவை வந்த பிரதமர் நரேந்திர மோடி, சிறுவயதிலேயே தமிழ் கற்றுக் கொண்டிருந்தால் மகிழ்ச்சி அடைந்திருப்பேன் என்று பேசி இருந்தார். இதையடுத்து நேற்று சென்னையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் ஒன்றில் கலந்து கொண்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தமிழ் படிக்க ஆர்வமாக பிரதமர் மோடி, தமிழ் படிக்கும் குழந்தைகள் மத்தியில் இந்தி, சமஸ்கிருதத்தை திணிப்பது நியாயமா?

மும்மொழி கல்வியை ஏற்றுக் கொண்டால் தான் நிதி உதவி தருவோம் என்று கூறியது எந்த வகையில் நியாயம்? கடந்த 10 ஆண்டுகளில் தமிழ் வளர்ச்சிக்காக மத்திய அரசு ஒதுக்கீடு செய்த நிதி வெறும் ரூ.150 கோடி மட்டும்தான். ஆனால் சமஸ்கிருத வளர்ச்சிக்காக மத்திய அரசு ஒதுக்கீடு செய்த நிதி ரூ.2,400 கோடி. இதுதான் மோடியின் தமிழ்ப் பாச நாடகம் என்று விமர்சித்தார்.
இதுதொடர்பாக தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, நமது நாட்டில் யாரும், எந்த மொழிக்கும் கூடுதல் நிதி ஒதுக்கவில்லை என்பதை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் புரிந்து கொள்ள வேண்டும். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்த போது, இந்தியாவில் இருந்த சமஸ்கிருதப் பல்கலைக்கழகங்கள் எண்ணிக்கையை பாருங்கள்.
அதேபோல் தமிழ்ப் பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கையையும் பாருங்கள். தமிழ்ப் பல்கலைக்கழகங்களை விடவும் சமஸ்கிருதப் பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. அதனால் சமஸ்கிருதப் பல்கலைக்கழகங்கள் அந்த மொழியை ஊக்குவிக்க அதிக நிதியை பெறுகின்றன. இதன் காரணமாகவே நம் நாட்டில் தமிழ் பல்கலைக்கழகங்களை நிறுவதற்கான திட்டத்தை முன் வைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளோம்.
தமிழக அரசை யார் தடுக்கிறார்கள்? அனைத்து மாவட்டங்களிலும் தமிழ்ப் பல்கலைக்கழகங்களை திறங்கள்.. தாராளமான பணம் வரும். சமஸ்கிருத மொழியை செத்த மொழி என்று சொல்லக் கூடாது. அந்தந்த மொழியை பேசுபவர்களுக்கு அவர்களின் மொழி பெரியது. தெரியாத மொழியை செத்த மொழி என்று சொல்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
கடந்த 5 ஆண்டுகளில் திமுக என்ன செய்தது என்பதை தமிழ்நாட்டு மக்களிடம் சொல்லுங்கள்.. திமுகவினரால் வளர்ச்சி பற்றி பேச முடியாது. நல்லாட்சி பற்றிப் பேச முடியாது. அதனால் அடுத்த 6 மாதங்களுக்கு மொழி, வடக்கு, தெற்கு, ஆர்யன், திராவிடன் என்று பேசுவார்கள். இதுவரை முதல்வர் ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தங்களின் ஆட்சியில் செய்த சாதனைகளை சொல்லவில்லை என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications