கோவை ஷாக்! அண்ணாமலை - வானதி மோதலில் அந்த 1 மணி நேரத்தில் நடந்தது என்ன? வெளியே வராத திருப்பம்
சென்னை: "கோவை வடக்கு தேர்தல் சூடுபிடித்துள்ளது.. அண்ணாமலை - வானதி சீனிவாசன் மோதல் தற்போது வெளிப்படையாக மாறியுள்ளது.. கோயம்புத்தூர் வடக்கு தொகுதி வேட்பாளர் அறிவிப்பிற்கு பிறகு, அண்ணாமலை மற்றும் வானதி சீனிவாசன் ஆதரவாளர்களிடையே நிலவி வரும் பனிப்போர் சமூக வலைதளங்களில் பகிரங்க மோதலாக உருவெடுத்துள்ளது. நேற்றைய தினமும் கோவையில் வேட்பாளர் பிரசாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது? உண்மையிலேயே கோவை தொகுதியில் என்ன நடந்து கொண்டிருக்கிறது?
கோவை வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் அண்ணாமலை பங்கேற்பார் என வானதி சீனிவாசன் கடந்த வாரம் உறுதியளித்திருந்த நிலையில், அன்றைய தினம் கோவையிலேயே இருந்தும் அண்ணாமலை அக்கூட்டத்தைப் புறக்கணித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அனைத்துக் கட்சியினரும் திரண்டிருந்த அந்த நிகழ்வில், அண்ணாமலையின் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்து ஏமாற்றமடைந்த அவரது ஆதரவாளர்கள், தற்போது வானதி சீனிவாசனுக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
கோயம்புத்தூர் வடக்கு தொகுதி
இந்நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பலத்தைக் காட்டும் வகையில், நேற்று முன்தினம் ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் கோவைக்கு வருகை தந்து வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக வீதி வீதியாகப் பிரசாரம் மேற்கொண்டார்.
அமைச்சரின் வருகையால் உற்சாகமடைந்த கட்சி நிர்வாகிகள், பெரும் திரளான தொண்டர்களுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து நேற்று காலையும் வானதி சீனிவாசன் தனது ஆதரவாளர்களுடன் தீவிர நடைபயண பிரசாரத்தைத் தொடர்ந்தார். அப்போது அவருக்குத் திடீரெனக் கடுமையான கால் வலி மற்றும் கணுக்காலில் வீக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. வலியால் அவதிப்பட்ட அவர், உடனடியாக அவிநாசி சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார்.
வானதி சீனிவாசன் பிரச்சாரம்
அவரை பரிசோதித்த மருத்துவர்கள், தொடர் நடைபயணத்தின் காரணமாகவே இந்த தசைப்பிடிப்பு மற்றும் வீக்கம் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளனர். மேலும், சில நாட்கள் முழுமையான ஓய்வு அவசியம் என்றும், அதுவரை பிரசாரங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்களாம்..
இது குறித்து விளக்கமளித்த அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள், "கடந்த இரண்டு நாட்களாக ஓய்வின்றித் தொடர்ந்து நடந்தே பிரசாரம் செய்ததால் ஏற்பட்ட உடல்நலக் குறைவு தான் இது. மற்றபடி பெரிய பாதிப்புகள் எதுவுமில்லை. நாளை ஒரு நாள் ஓய்வு எடுத்தாலே அவர் பழைய நிலைக்குத் திரும்பிவிடுவார். டிஸ்சார்ஜ் ஆனவுடன் மீண்டும் இரட்டிப்பு வேகத்தில் களப்பணியைத் தொடங்குவார்" என்று நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.
அண்ணாமலை வரலையே
இருந்தாலும், இந்த மருத்துவமனை அனுமதிக்கு பின்னால் ஒரு தற்செயலான அரசியல் தொடர்பு இருப்பதாகக் கோவை அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். சரியாக நேற்றைய தினம்தான், அண்ணாமலை, வானதி சீனிவாசனுக்கு ஆதரவாகக் கோவை வடக்குத் தொகுதியில் பிரச்சாரம் செய்யவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்ததாம்..
ஏற்கனவே இந்தத் தொகுதியில் போட்டியிட அண்ணாமலை விரும்பியதாகவும், ஆனால் வானதி சீனிவாசனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டதால் 2 தரப்புக்கும் இடையே ஒரு கருத்து வேறுபாடு நிலவி வருவதாகவும் செய்திகள் கொதித்து அடங்கின.
பரபரக்கும் கோவை வடக்கு தொகுதி
இத்தகைய சூழலில், அண்ணாமலையுடன் இணைந்து ஒரே மேடையில் பிரசாரம் செய்வதைத் தவிர்க்கவே, உடல்நலக் குறைவைக் காரணமாகக் காட்டி வானதி சீனிவாசன் பின்வாங்கியிருக்கலாமோ என்ற சந்தேகத்தையும் அரசியல் விமர்சகர்கள் எழுப்புகிறார்கள்..
வேட்பாளர் அறிமுகக் கூட்டத்திற்கு அண்ணாமலை வராததற்குப் பதிலடியாக இது இருக்குமோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது. கடந்த சில நாட்களாகத் தனது தொகுதியில் அனல் பறக்கும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்த அவர், தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எது எப்படியிருப்பினும், வேட்பாளரின் இந்தத் திடீர் உடல்நலக் குறைவு கோவை வடக்குத் தொகுதி தேர்தல் களத்தில் ஒரு சிறிய தொய்வை ஏற்படுத்தியுள்ளதை மறுக்க முடியாது.












Click it and Unblock the Notifications