Vijay: பிரசாந்த் கிஷோர் நிலைமையை பாருங்க! பாஜகவை எதிர்த்தீங்கன்னா! விஜய்க்கு அண்ணாமலை எச்சரிக்கை
சென்னை: தவெக தலைவர் விஜய் பாஜகவை எதிர்ப்பதை மட்டுமே வேலையாக வைத்திருந்தால் பீகாரில் பிரசாந்த் கிஷோருக்கு ஏற்பட்ட நிலைதான் அவருக்கு ஏற்படும் என அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார்.

243 தொகுதிகளுக்கு பீகார் சட்டசபை தேர்தல் இரு கட்டங்களாக நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி, மகா கூட்டணி, பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் மற்றும் மாநில கட்சிகள் போட்டியிட்டன.
நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம், பாஜக, பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி உள்ளிட்டவை கூட்டணி அமைத்து போட்டியிட்டன. பாஜகவும், ஜேடியூ (ஐக்கிய ஜனதா தளம்) ஆகிய கட்சிகள் தலா 101 இடங்களில் போட்டியிட்டன.
அது போல் மகா கூட்டணியில் லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி), காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. காங்கிரஸ் கட்சி 61 இடங்களிலும், ஆர்ஜேடி கட்சி 143 இடங்களிலும் போட்டியிட்டது. இந்த தேர்தலில் ஆட்சியை பிடிக்க 122 இடங்கள் தேவைப்படுகிறது.
இந்த நிலையில் இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த வெள்ளிக்கிழமை நடந்தது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணி 202 இடங்களில் வென்று பீகாரில் வரலாற்றுச் சாதனை படைத்தது. அதாவது இரட்டை சென்சுரி அடித்துள்ளது.
காங்கிரஸ் + ஆர்ஜேடி கூட்டணி படுதோல்வி அடைந்தது. அது போல் தேர்தலுக்கு வியூகங்களை வகுக்கும் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட்டை இழந்தது.
பாஜகவை தொடர்ந்து விமர்சனம் செய்து வந்த பி.கே. மிக மோசமான வகையில் தோல்வி அடைந்துள்ளார். தமிழக வெற்றிக் கழகம் தொடங்கிய விஜய்யும் பிரசாந்த் கிஷோரை ஆலோசகராக வைத்திருந்தார். வரும் 2026 தமிழக சட்டசபை தேர்தலுக்கு அவரது அமைப்பை வைத்து வியூகங்களை வகுக்கும் பணிகளை ஒப்படைக்கலாமா என இருந்தார்.
ஆனால் அவரது கட்சியே படுதோல்வி அடைந்த நிலையில் பாஜகவை எதிர்த்தால் விஜய்க்கும் இதே நிலைதான் என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, "அரசியலில் எதிர்ப்பதை மட்டுமே பார்ப்பதில்லை என விஜய்க்கு அறிவுரை சொல்ல விரும்புகிறேன்.
விஜய்யும் தவெகவும் பாஜகவை எதிர்ப்பதையே வேலையாக வைத்துள்ளனர். எஸ்ஐஆர் பணிகளை தேர்தல் ஆணையம்தான் நடத்துகிறது. ஆனால் இதை பாஜகவுடன் தொடர்புப்படுத்தி விஜய் விமர்சித்து வருகிறார். பாஜக எதை செய்தாலும் எதிர்க்கிறார்கள். வெறும் எதிர்ப்பு அரசியலை மட்டும் கொண்டிருந்தால் மக்கள் ஓட்டு போட மாட்டார்கள்.
நீங்கள் வெற்றி பெற்றால் தொகுதிக்கு என்ன செய்வீர்கள், என்னென்ன திட்டங்கள் வைத்திருக்கிறீர்கள் என்பதைதான் மக்கள் எதிர்பார்ப்பார்கள். பாஜகவை எதிர்ப்பதையே வேலையாக வைத்திருந்தால் தோல்விதான் கிடைக்கும். விஜய்யும் எதிர்க்கும் மனநிலையில்தான் இருக்கிறார். அதை மக்கள் விரும்ப மாட்டார்கள்.
பிரசாந்த் கிஷோர் ஜன் சுராஜ் என்ற புதிய கட்சியை தொடங்கி 3.55 சதவீத வாக்குகளை பெற்றார். 238 தொகுதிகளிலும் தோல்வி அடைந்தார். பிரசாந்த் கிஷோர் நல்லவராக இருந்தாலும் சரி கெட்டவராக இருந்தாலும் சரி, ஆட்சி மாற்றம் தேவையில்லை என்றால் மற்ற கட்சிகளுக்கு ஓட்டு போட மாட்டார்கள் என்பதுதான் உண்மை. எனவே கட்சியை ஆரம்பித்துவிட்டேன் என்பதற்காகவே பாஜகவை எதிர்த்தால் அது சரியான நடைமுறையாக இருக்காது. எந்த தவறையும் செய்யாத பாஜகவை, தவெக உள்ளிட்ட கட்சிகள் எதிர்க்கிறார்கள்.












Click it and Unblock the Notifications