வாக்காளர்களுக்கு 2 கிலோ கறி.. 5000 பணம்.. நடவடிக்கை எடுக்காத தேர்தல் ஆணையம்.. அண்ணாமலை பரபர புகார்!
பாஜக அளித்த புகாரின் மீது மாநில தேர்தல் ஆணையம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என அண்ணாமலை இந்திய தேர்தல் ஆணையத்துக்கு புகார் அளித்துள்ளார்.
சென்னை : ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுகவினர் வீடு வீடாகச் சென்று பணம் மற்றும் பொருட்களை விநியோகம் செய்து வருவதாகவும், தமிழ்நாடு பாஜக புகார் மீது மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுகவினர் வாக்காளர்களுக்கு 2 கிலோ கறியும் ரூ.5000 பணமும் கொடுப்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.
இடைத்தேர்தலில் பணம் கொடுத்து வாக்குகளை விலைக்கு வாங்கும் செயல்களில் திமுக ஈடுபடுகிறது. இடைத்தேர்தல் சுதந்திரமாகவும், ஜனநாயக முறையிலும் நடைபெறுவதை ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை கடிதம்
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு அண்ணாமலை எழுதியுள்ள கடிதத்தில், "ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினரின் திடீர் மறைவையடுத்து, இத்தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்தது. கடந்த 22 மாதங்களாக திமுக ஆட்சியில் இருந்தும் எந்த வளர்ச்சிப் பணிகளும் நடைபெறவில்லை. அதனால், இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற பணத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளது. திமுக அமைச்சர் கே.என்.நேரு மற்றும் திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோர் வாக்குக்கு பண விநியோக முறைகள், விநியோக மையம் மற்றும் பணம் விநியோகம் செய்வதற்கான காலக்கெடு குறித்து விவாதித்த ஆடியோவை 29 ஜனவரி 2023 அன்று வெளியிட்டோம்.

பண பட்டுவாடா
இந்த ஆடியோ பற்றி கருத்து தெரிவித்த தமிழ்நாடு பாஜக மூத்த தலைவர்கள், சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் நடத்துவது குறித்த எங்களின் அச்சங்களை மாநில தேர்தல் ஆணையரிடம் சமர்ப்பித்ததுடன், ஜனநாயக உணர்வைக் கொன்ற திமுகவினர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். பிப்ரவரி 11, 2023 அன்று, ஈரோடு கிழக்கு தொகுதியில் பணம் விநியோகம் செய்யப்பட்டதாகத் தகவல் கிடைத்ததும், திருப்பூர் மாவட்டம், திமுக தெற்கு ஒன்றிய பொருளாளர் சர்புதீனின் காரில் இருந்த டோக்கன்களை தேர்தல் அதிகாரிகள் மற்றும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

வாக்காளர்களுக்கு இறைச்சி
கடந்த வார இறுதியில் ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுகவினர் ஒவ்வொரு வாக்காளருக்கும் தலா 2 கிலோ இறைச்சியை லஞ்சமாக வழங்கினர். அங்குள்ள வாக்காளர்களுக்கு ரூ.1000 முதல் ரூ.5000 வரை வழங்க திமுக அமைச்சர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளரின் தேர்தல் பிரசாரத்தைப் பாதிக்கும் வகையில் வேண்டுமென்றே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

நடவடிக்கை எடுக்கவில்லை
தமிழ்நாடு பாஜக அளித்த புகாரின் மீது மாநிலத் தேர்தல் ஆணையம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. ஆளும் திமுக அரசின் அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகத்தைத் தடுக்க எந்த நடவடிக்கையும் செய்யவில்லை. ஈரோடு கிழக்கில் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் நடப்பதை உறுதி செய்வதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications