நித்தியானந்தாவுக்கு டஃப் கொடுக்கும் அன்னபூரணி அரசு.. அமர்களப்படும் வீடியோக்கள்.. அடேங்கப்பா!
சென்னை: நித்தியானந்தா ஆசிரமத்தில் பக்தர்கள் குண்டலினி செய்து பறப்பதை போல செய்வார்கள். நித்தி பேசும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வைரலாக்குவார்கள். அவருக்கே டஃப் கொடுப்பது போல் அமைந்துள்ளது அன்னபூரணி அரசு அம்மாவின் வீடியோக்கள். மேலும் தன்னை மகேஸ்வரன், பரமேஸ்வரன் என நித்தியானந்தா கூறி வந்த நிலையில் தான் சக்தியின் அவதாரம் என அன்னபூரணி அரசு அம்மா கூறி வருகிறார்.
Recommended Video
தான் ஆதிபராசக்தியின் அவதாரம் என கூறிக் கொண்டு கண்ணீர் விடும் பக்தர்களுக்கு ஆசி வழங்கும் அன்னபூரணி குறித்த பேச்சு தற்போது எழுந்துள்ளது. தன்னை சக்தியின் அவதாரமாக சொல்லிக் கொள்ளும் இவர் ஆதிபராசக்தி அரசு அம்மா என்ற பேஸ்புக் பக்கத்தை தொடங்கியுள்ளார்.
அதில் ஆயிரக்கணக்கான பேர் பாலோயர்களாக இருக்கிறார்கள். இந்த பேஸ்புக் பக்கத்தில் அவரது ஏராளமான வீடியோக்கள் உள்ளன. அதில் அருள்வாக்கு அம்மா என கூறிக் கொள்ளும் அன்னபூரணிக்கு பூஜைகள் செய்கிறார்கள்.

அன்னபூரணி
அவர் நடந்து வரும் பாதையில் மலர்களை தூவுகிறார்கள். நடக்கும் போது அன்னபூரணி தனக்கு அருள் வந்தவர் போல் நடக்கிறார். இதற்கேற்ப ஏற்கெனவே நடைமுறையில் உள்ள அம்மன் பாடல்களின் மெட்டில் அன்னபூரணிக்கு ஏற்ற வரிகளை அமைத்து ஒலிக்கும் பாடல்கள் பக்தி பரவசத்தை தூண்டுகின்றன.

பேஸ்புக் பக்கம்
பேஸ்புக்கின் பக்கத்தில் அன்னபூரணி படத்திற்கு அருகே மனமுருகி தன்னை நாடி வரும் குழந்தைகளுக்கு அருள் புரியும் பராசக்தி அம்மா என கூறப்பட்டுள்ளது. அதில்
அம்மா சக்தியம்மா எங்கள் குலம் செழிக்க வாருமம்மா
போற்றி பணிந்து அழைத்தோமம்மா
எங்கள் குரலை கேட்டு வாருமம்மா
நீ மருவத்தூர் தேவியம்மா
எங்கள் பங்காரு சக்தி அம்மா (2)
செந்நிற ஆடையில் எந்நாளும் சிரிப்பவளே...
ஆனந்தம் பொங்கிடவே வந்திடம்மா
சந்த தமிழ் பாட என்றும் உனை நாட
மாவிளக்கை ஏற்றிடுவோம் உமையவளே பார்வதியே பராசக்தியே
இமையவளே ஈஸ்வரியே ஆதிசக்தியே

வெள்ளி தகடு
இப்படியாக இந்த பாடல் ஒலிக்கிறது. வெள்ளி தகடு பொருத்தப்பட்ட சிம்மாசனத்தில் அன்னபூரணி உட்கார்ந்து கொண்டு தன் காலில் விழும் பெரியவர்கள், ஆண்கள், குழந்தைகள் என ஆசி வழங்குகிறார். அவ்வப்போது தன் உடலை சிலிர்த்து கொள்கிறார். மஞ்சள் நிற ஆடை அணிநது கொண்டு கழுத்தில் மாலை அணிந்துள்ளார். அன்னபூரணி அம்மாவே போற்றி.. அன்னபூரணி அரசு அம்மாவே போற்றி என அழுகுரல்களுக்கு மத்தியில் பின்னணியில் பாடல் இசை முழங்க அன்னபூரணி அருள்வந்தவர் போல் நிற்கிறார்.

நித்திக்கு டஃப்
இப்படியாக குறுகிய காலத்திலேயே இத்தனை பக்தர்களை கொண்டுள்ள அன்னபூரணி அரசு நித்தியானந்தாவுக்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு உள்ளார். நித்தியானந்தாவின் பிடரி ஆசிரமத்தில் குண்டலினி யாகம் செய்து பறப்பது போன்ற வீடியோக்கள் சமூகவலைதளங்களை வைரலாக்கின. அது போல் நித்தியானந்தாவின் டிரேட் மார்க் சிரிப்பும், ஆங்கில் பேச்சும் இளைஞர்களிடையே பிரபலமானது.

நித்தியின் ஆசிரமம்
திருவண்ணாமலையைச் சேர்ந்த நித்தியானந்தா, சிறியதொரு ஆசிரமத்தைத் தொடங்கி பின்னர் வெளிமாநிலங்களிலும் அதன் கிளைகளை தொடங்கும் அளவுக்கு உயர்ந்தார். பாலியல் விவகாரங்களில் நித்தியானந்தா ஈடுபட்டதாக குற்றச்சாட்டின் பேரில் அவரை போலீஸார் தேடினர். அப்போது அவர் தலைமறைவாகினார். தற்போது கைலாசா என்ற ஒரு நாட்டை உருவாக்கி அதன் "அதிபராக" இருப்பதாக கூறிக் கொள்கிறார். மேலும் தனது நாட்டிற்கு யார் வேண்டுமானாலும் வந்து தொழில் தொடங்கலாம் என கூறியுள்ள நித்தி, பாஸ்போர்ட், கொடி, கரன்சி ஆகியவற்றையும் ரிலீஸ் செய்துள்ளார். இவரும் தான் பரமேஸ்வரனின் அவதாரம் என அவ்வப்போது கூறிக் கொள்வார். இப்படி நித்திக்கு டஃப் கொடுக்கும் அளவுக்கு தனது முக பாவனையிலும் செயல்பாடுகளிலும் அன்னபூரணி அம்மா பிரபலமடைகிறார் என்கிறார்கள் நெட்டிசன்கள்.












Click it and Unblock the Notifications