அடுத்து 5 பெண் ஓதுவார்கள் ரெடி!.. அர்ச்சகர் பயிற்சிக்குக் குவியும் விண்ணப்பங்கள்!
சென்னை: அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தின் மூலம் இப்போதுதான் மூன்று பெண் ஓதுவார்களுக்குப் பணிநியமன ஆணை வழங்கப்பட்டது. இது குறித்து முதல்வர் ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்தில், "கரு சுமக்கும் பெண்களும் இனிக் கருவறைக்குள் என்று பெருமையாகப் பேசி இருந்தார்.
இப்போது அடுத்தகட்டமாக ஐந்து பெண் ஓதுவார்கள் உட்பட மொத்தம் 15 ஓதுவார்களுக்குப் புதிதாகப் பணிநியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெண் ஓதுவார்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் இந்த ஆண்டு அர்ச்சகர் பயிற்சி பெற அதிகமான பேர் விண்ணப்பித்திருப்பதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கூறியிருக்கிறார்.
இது பற்றி அவர், "இதுவரை 10 பெண் ஓதுவார்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கு முன்னதாக 5 பேருக்கு பணியாணை வழங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே 1 பெண் ஓதுவார்தான் இருந்தார். தற்போது எங்களது ஆட்சியில் 9 பெண் ஓதுவார்களை நியமித்திருக்கிறோம். மொத்தமாக இந்த ஆட்சியில் 34 ஓதுவார்கள் பணிநியமனம் பெற்றுள்ளனர்.

180 இடங்கள் காலியாக இருந்தன. அதில் 107 இடங்களை இதுவரை நிரப்பி இருக்கிறோம். மீதம் உள்ள 76 பணியிடங்கள் விரைவில் நிரப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
பயிற்சிப் பள்ளிகள் மூலம் படித்து முடித்த இவர்கள் இன்னும் கூடுதலாக அனுபவ ரீதியாகப் பயிற்சியைப் பெற வேண்டும் என்பதற்காக, திருக்கோயில்களில் உதவி அர்ச்சகர்களாக ஓர் ஆண்டுவரை ஊக்கத்தொகையுடன் பணியில் அமர்த்த உள்ளோம்.

அதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன. மாதத்திற்கு 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை ஊக்கத்தொகை வழங்க முடிவு செய்துள்ளோம். கிட்டத்தட்ட பணிசெய்ய 160 பேர் இதன்மூலம் நியமனம் பெற உள்ளனர்.
மேலும் இந்த ஆண்டு 11 பெண்கள் அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் சேர்ந்துள்ளனர் என்ற மகிழ்ச்சியான தகவலையும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இந்த ஆண்டு 117 அர்ச்சகர்களாகப் பயிற்சி பெறுவதற்கு விண்ணப்பித்துள்ளனர்" என்று கூறியுள்ளார்.
அது சரி, புதியதாக ஓதுவாராக நியமிக்கப்பட்டுள்ள பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?

"அடியேன் பெயர் தாரணி. அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 4 ஆண்டுகள் தேவார பயிற்சி பெற்றேன். அதனால் இப்போது ஓதுவார் பணி கிடைத்திருக்கிறது. எனக்குச் சின்ன வயதிலிருந்து திருமுறைகள் பாடுவதுதான் முழு விருப்பமாக இருந்தது. அதைக் கொண்டுதான் முறையாகப் படிக்கச் சென்றேன்.
ஆசிரியர்கள் அளித்த ஊக்கத்தால் 4 ஆண்டுகள் முழுமையாகப் படித்து முடித்தேன். முதலமைச்சர் ஸ்டாலினின் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தின் மூலம் அதற்கான பலனையும் பெற்றுள்ளோம். இது மிகப் பெரிய விஷயம்.

பெண்கள், ஆண்கள் என்ற பாகுபாடு எல்லாம் சமய பணியைப் பொறுத்தவரை நமது சைவ சமயத்தில் இல்லை. அதுதான் உண்மை. காரைக்கால் அம்மையார்தான் முதன்முதலாகத் தேவாரம் பாடிய அமையார்.
அந்தப் பழைய நிலையை ஆன்மிகத்தில் மீண்டும் மீட்டுக் கொண்டுவந்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின் ஐயா. அதற்காக அவருக்கு மிகப் பெரிய நன்றி.
எனக்கு வில்லிவாக்கத்திலுள்ள அகத்தீஸ்வரர் கோயில் உள்ள பெருமானுக்குத் தேவாரம் திருவாசகம் பாட வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதற்காக என் இறைவனுக்கு நன்றி" என்கிறார்

அடுத்து பார்கவி, "நான் பாடி திருவல்லீஸ்வரர் கோயிலுக்கு ஓதுவாராகப் பணி நியமனம் பெற்றிருக்கிறேன். நான் திருவாவடுதுறை ஆதினம் மூலமாக 4 வருடப் பயிற்சி பெற்றேன்.
இத்தனை ஆண்டுகளாக ஆண்கள் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த துறையில், ஒரு பெண் ஓதுவாரை நியமித்து எங்களையும் எங்கள் சமுகத்தையும் இந்த ஆட்சி பெருமைப்படுத்தி இருக்கிறது.
அதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் ஐயாவுக்கும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவுக்கும் என் மனமார்ந்த நன்றிஎன்கிறார்

கடந்த ஒரு ஆண்டுக்கு முன்னதாக சுகஞ்சனா என்பவர்தான் முதல் பெண் ஓதுவாராக அரசு சார்பில் நியமிக்கப்பட்டார். அந்த விதை இன்று வளர்ந்து ஆல் போல் தழைத்து வளர்ந்துள்ளது.
'பாடும் பணியே பணியாய் அருள்வாய் என்றார் அருணகிரிநாதர், அந்தப் பணியில் இத்தனை ஆண்டுகள் பெண்களின் பங்களிப்பு இல்லை. அதை நிறைவேற்ற திமுக என்ற ஒரு கட்சிதான் தமிழ்நாட்டிற்குத் தேவைப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications