சீச்சீ.. இந்த பழம் புளிக்கும்.. தெறித்தோடிய தலைகள்.. அதிமுக ஒன்றிணைய போகுதா? அதென்ன விண்ணப்ப படிவம்?
சென்னை: தேர்தலே முடிந்துவிட்டது.. ஆனால், விகே சசிகலாவைதான் களத்தில் காணவில்லை என்கிறார்கள் ஆதரவாளர்கள்.. தற்போது மீண்டும் லைம்லைட்டுக்குள் வந்துள்ளாராம் சசிகலா.. இதுகுறித்த பிரத்யேகமான தகவல் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது.
அதிரடி அரசியலுக்கு பெயர் போனவர் விகே சசிகலா.. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிடம் 30 வருடம் லாபி செய்தவருக்கு எடப்பாடி & டீமை தன்வசப்படுத்த நன்றாகவே வழிதெரியும்.. ஆனாலும் மென்மை போக்கை, மிக மிக ஜாக்கிரதையாகவே கடைப்பிடித்து வருகிறார்.

சசிகலா: சிறையில் இருந்து கடந்த 2021 ஜனவரி மாதம் ரிலீஸ் ஆகி வெளியே வந்ததிலிருந்தே அதிமுகவை எடப்பாடியிடமிருந்து மீட்பார் என சசிகலாவிடம் எதிர்பார்த்தனர் அவரது ஆதரவு அதிமுகவினர். அதற்கேற்ப அவரது விடுதலையின்போது ஏக அதகளம் பண்ணினார்கள். ஆனால், வெளியே வந்தவரின் அரசியல் ரொம்பவுமே சுருங்கிப் போனது.
எடப்பாடியின் ஆக்சனை எதிர்த்து நீதிமன்றத்திற்கு போனாரே தவிர, அதிமுகவை மீட்கவோ, எடப்பாடியை வீழ்த்தவோ எந்த நேரடி அரசியலிலும் குதிக்கவில்லை சசிகலா. மாறாக பாஜகவின் கடைக்கண் பார்வைக்காக தவம் இருந்தாரே தவிர, தொண்டர்கள் விரும்பிய, எதிர்பார்த்த வேறு அரசியலை அவர் முன்னெடுக்கவில்லை.
சொத்துக்குவிப்பு: சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதால் தண்டனை காலம் முடிந்து 6 ஆண்டு காலம் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது ஒரு புறம் இருந்தாலும், 2021 தேர்தலில் அவரது ஆதரவாளர்கள் சிலரை போட்டியிட வைத்து வெற்றிபெற வைக்க சசிகலா முயற்சித்திருக்க வேண்டும் என எதிர்பார்த்தனர். ஆனால், சசிகலாவோ, நம்முடைய இலக்கு 2024 தான் என்றார்.
2024- தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதுமே, போட்டியிடுவது, பிரச்சாரம் செய்வது என அவரது ஆதரவாளர்கள் கேட்டனர். உடனே நம்முடைய இலக்கு 2026 தான் என்று சொல்லி ஆதரவாளர்களை சோர்வடைய செய்துவிட்டார் சசிகலா.
ஓபிஎஸ்: அதற்கேற்றார்போல், "ஓபிஎஸ்சும் தினகரனும் மட்டும் போதும், சசிகலா தேவையில்லை" என்று பாஜகவும் ஓரங்கட்டியதால் நொந்து போனதால், நடப்பு தேர்தல் அரசியலிலிருந்தே மொத்தமாக காணாமல் போனார் சசிகலா.. அவரே காணாமல்போன நிலையில், "சீச்சீ...இந்த பழம் புளிக்கும்" என்ற மனநிலையில் அவரது ஆதரவாளர்களும் விலகி ஓடிவிட்டனர். இப்போதெல்லாம் சசிகலா இல்லத்துக்கு ஆட்கள் வருவதும் குறைந்து போய்விட்டது.
இந்த நிலையில்தான், திடீரென்று அதிமுகவில் குழப்பத்தை விளைவிக்கும் முயற்சியில் குதித்துள்ளாராம் சசிகலா. அதாவது, கழக தொண்டர்கள் அனைவருக்கும் என சொல்லி அதிமுகவினருக்கு ஒரு விண்ணப்ப படிவம் நேற்று அனுப்பியிருக்கிறார் சசிகலா. அது பார்ப்பதற்கு உறுப்பினர் சேர்க்கை படிவம் போலவே இருக்கிறதாம்.. இந்த படிவம்தான் தற்போது அதிமுக வட்டாரத்தில் வேகமாக பரவி கொண்டிருக்கிறது. சசிகலாவின் இந்த திடீர் வியூகம் எதற்கு? என்ற கேள்விகள் அரசியல் களத்தில் விவாதிக்கப்பட்டும் வருகிறது..
புலம்பல்கள்: அதிமுகவில் எந்த பிடிப்பும் இல்லை - தினகரனும் சேர்த்துக்கொள்ளவில்லை - பாஜகவும் தன்னை புறக்கணித்து விட்டது என்கிற புலம்பல்கள் சசிகலாவிடம் நிறையவே எதிரொலித்து வந்ததாம்.
இதனையடுத்து அவருக்கு சொல்லப்பட்ட யோசனையின் அடிப்படையிலேயே, அரசியலில் நானும் இருக்கிறேன் என காட்டிக்கொள்ளவும், தொண்டர்களை ஒருங்கிணைக்கப்போகிறேன் என ஒரு தோற்றத்தை உருவாக்கவும் திட்டமிட்டே சசிகலா இந்த காரியத்தில் குதித்துள்ளார் என்கிறார்கள் அதிமுக தரப்பில்.
சறுக்கல்கள்: ஆடியோ முதல் ஆன்மீக பயணம் வரை எத்தனையோ முயற்சிகளை சசிகலா கையில் எடுத்தும் பலன்தராதநிலையில், இந்த உறுப்பினர் சேர்க்கை வியூகம் பலன்தருமா என்று தெரியவில்லை..
ஆனால், "அளவுக்கு மீறிய பொறுமைகூட" சில சமயங்களில் சறுக்கலை தந்துவிடும் என்பதால், சமயோஜிதமும், கனகச்சிதமான காய்நகர்த்தலுமே இங்கு உடனடி அரசியலுக்கு தேவையாக இருக்கின்றன என்பதையும் நாம் இங்கே சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!












Click it and Unblock the Notifications