விஸ்வரூபம் எடுக்கும் விஜய்.. தவெக உடன் கரம் கோர்க்கும் டிடிவி தினகரன், ஓபிஎஸ்? அதிரும் எடப்பாடி?
சென்னை: பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் அடுத்தடுத்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர். இவர்கள் தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணியின் இணைய போகிறார்களோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் தமிழ்நாடு வந்தபோது, அவரைச் சந்திக்க ஓ. பன்னீர்செல்வம் அனுமதி கேட்டிருந்தார். ஆனால், பிரதமரைச் சந்திக்க அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இதன் காரணமாக, பல வகையான யூகங்கள் கிளம்பின. இப்படிப்பட்ட நிலையில்தான் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக ஓ.பன்னீர்செல்வம் அணி அறிவிப்பு வெளியிட்டது.

பாஜக கூட்டணி ஓ பன்னீர்செல்வம் வெளியேற்றம்
ஒரு காலத்தில் அதிமுகவில் சசிகலா ஆட்சிக்கு வருவதற்கு எதிராக தர்மயுத்தம் செய்தவர் ஓ பன்னீர்செல்வம். அப்போதில் இருந்தே ஓ பன்னீர்செல்வம் பாஜக உடன் நெருக்கமாக இருந்ததாக செய்திகள் வந்தன. பாஜக தலைவர்களையும் அவ்வப்போது ஓ பன்னீர்செல்வம் சந்தித்து வந்தார். அதன்பின் அதிமுக உடைந்து மீண்டும் ஓ பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி கரம் கோர்க்க பாஜக முக்கியமான காரணமாக இருந்தது. ஓ பன்னீர்செல்வம் அப்போது பாஜக உடன் மேலும் நெருக்கம் ஆனார்.
ஓ பன்னீர்செல்வம் மகன் ஓ பி ரவீந்திரநாத் நாடாளுமன்றத்திலேயே பாஜகவை, மோடியை அவ்வப்போது பெரிய அளவில் புகழ்ந்தும் பேசி வந்தார். நாடாளுமன்றத்தின் பாஜகவின் மசோதாக்களுக்கும் தொடர்ந்து ஆதரவு அளித்தார். அதோடு நிற்காமல் மோடி தமிழ்நாடு வரும்போதெல்லாம் ஓ பன்னீர்செல்வம் காத்திருந்து வரவேற்றார். அதன்பின் அதிமுகவில் மீண்டும் பிளவு ஏற்பட்ட பின் எடப்பாடி பழனிசாமி - ஓ பன்னீர்செல்வம் இடையே நீண்ட சட்டச போராட்டம் நடந்தது. இருவருக்கும் இடையே மிக நீண்ட சட்ட போராட்டத்தில் ஓ பன்னீர்செல்வம் தொடர்ந்து டெல்லி ஆதரவு தனக்கு கிடைக்கும் என்று நம்பினார். டெல்லி பாஜக ஆதரவு கிடைத்தால் .. வழக்கில் வெல்ல முடியும் என்றும் ஓ பன்னீர்செல்வம் நம்பினார். ஆனால் அதிமுக தொடர்பான அனைத்து வழக்கிலும் ஓ பன்னீர்செல்வம் தோல்வியையே தழுவினார். இப்படி ஓ பன்னீர்செல்வம் தொடர்ச்சியாக பாஜகவையும், மோடியையும் நம்பியே இருந்தார்.
கூட்டணி முறிவு
இப்படிப்பட்ட நிலையில்தான் அதே பாஜகவுடன் ஓ பன்னீர்செல்வம் கூட்டணியை முறித்துள்ளார். இதற்கு இடையே பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். டிடிவி தினகரன் வெளியிட்ட அறிவிப்பில், இனியும் காத்திருப்பது சரி அல்ல. சிலரின் துரோகத்தால் தான் கட்சி ஆரம்பித்தோம். துரோகம் செய்தவர்கள் திருந்துவார்கள் என்று எதிர்பார்த்தோம், ஆனால் திருந்தவில்லை . அம்மாவின் தொண்டர்கள் ஒன்றிணைவார்கள் என்று எதிர்பார்த்தோம், ஆனால் அதற்கு சாத்தியம் இல்லை என்று தெரிந்துவிட்டது.
இனியும் காத்திருப்பது சரி அல்ல, எங்களின் வழியில் செல்கிறோம். ஆணவம், அகங்காரம் பிடித்து சவுண்ட் பார்ட்டி போல் செயல்படுகிறார் (இபிஎஸ்). டிசம்பரில் யாருடன் கூட்டணி என்று சொல்கிறோம். திருந்துவார்கள் அல்லது திருத்துவார்கள் என எண்ணினோம், அதற்கு வாய்ப்பில்லை, நாங்கள் எங்கள் வழியில் செல்கிறோம்
அமித் ஷாவின் பிளான் தோல்வி அடைந்துவிட்டது. என்டிஏ கூட்டணி தொடர்பாக அமித் ஷா போட்டிருந்த பிளான் தோல்வியில் முடிந்துவிட்டது, என்று அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் அறிவித்து உள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் விஜய் - டிடிவி தினகரன் கூட்டணி
இப்படிப்பட்ட நிலையில் 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம், ஓ. பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆகியவை கூட்டணி அமைக்க அதிக வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது. இந்த கூட்டணி உருவானால் தென் தமிழகத்தில் அதிமுக கூட்டணிக்கு இது மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும்.
கடந்த லோக்சபா தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் 18% வாக்குகள் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரின் பங்களிப்பால் கிடைத்தது. இந்த இரு தலைவர்களும் அதிமுகவை எதிர்த்து தமிழக வெற்றிக் கழகம் உடன் இணைந்தால் முக்குலத்தோர் வாக்குகளை தமிழக வெற்றி கழகத்திற்கு மாற்ற முடியும். நடிகர் விஜய் சரியான தொகுதியை தேர்ந்தெடுத்தால் தென் தமிழகத்தில் வெற்றி கூட பெற முடியும். இது அதிமுகவிற்கு பெரிய சவுக்கடியாக மாறும் என்பதால் எடப்பாடி பழனிசாமியின் முடிவு எப்படி இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications