வங்கிகளில் கடன் வாங்க போறீங்களா.. கிராமப்புற சுய உதவிக்குழுவில் உள்ளவர்களுக்கு குட்நியூஸ்.
சென்னை: பிணையம் எதுவும் இன்றி ரூ.75 ஆயிரம் முதல் ரூ.10 லட்சம் வரை, வேளாண் சார்ந்த மற்றும் உணவு பதப்படுத்தும் தொழில்கள், பண்ணை சாரா தொழில்கள், உற்பத்தி, சேவை மற்றும் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு கடன் உத்தரவாதத் திட்டத்தின் கீழ் கிராமப்புற சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு கடன் வழங்கப்படுகிறது. இந்த கடன்களை எப்படி மானியத்துடன் பெறுவது என்பது குறித்து தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
சுயஉதவி குழுவினருக்கு கடன் உதவிகள் தமிழகத்தில் வழங்கப்படுகின்றன. கிராமப்புற மற்றும் நகர்புற பெண்கள் மேம்பாடு அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த உதவிகளை வங்கிகள் மூலம் அரசு மானியத்துடன் வழங்குகிறது. ஒரே பகுதியை சேர்ந்த 18 முதல் 60 வயதுக்குட்பட்ட பெண்கள் ஒன்று சேர்ந்து, தங்களுடைய முன்னேற்றத்திற்காக தாங்களாகவே முன்வந்து ஒரு குழுவை ஏற்படுத்தி சுயஉதவிக் குழுவாக பதிவு செய்யலாம் இந்த மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு அதன் சேமிப்பு தொகையிலிருந்தும், அரசு துறை சார்பிலும் சேமிப்பின் அடிப்படையிலும்ட வங்கி கடன்கள் வழங்கப்படுகிறது.

ஒரு மகளிர் குழுவில் 12 முதல் 20 பேர் உறுப்பினராக சேரலாம் என்பதுடன். உறுப்பினராக சேர்ந்த பின்னர் ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை சேமித்து, அதற்கான வட்டியையும் பெற முடியும்.. அதுமட்டுமல்லாமல், அவசர நேரத்தில் பணம் தேவைப்பட்டாலும், சேமித்த பணத்தில் இருந்து மிக குறைந்த வட்டியில் கடன் வாங்கி கொள்ள முடியும்.
மகளிர் குழுவிற்கு வங்கிகள் அதிகபட்சமாக ரூ.20 லட்சம் வரை கடன் தருவதாக கூறப்படுகிறது. இதன் மூலம் குழுவில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரும் ரூ.1 லட்சம் லோன் பெற முடியும். அதேபோல் மகளிர் சுய உதவிக் குழுவில் உறுப்பினராக இருப்பவர்களுக்கு தமிழக அரசு பலவிதமான குழுக்கடன்களையும் மிக குறைந்த வட்டியில் கடன் வழங்குகிறது.
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், "தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கமானது, சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்புத் திட்டத்தின் கீழ் கடன் வழங்கி, குழு உறுப்பினர்களின் வாழ்வாதாரம் மேம்பட வாய்ப்புகள் ஏற்படுத்தி வருகிறது. பிணையம் எதுவும் இன்றி ரூ.75 ஆயிரம் முதல் ரூ.10 லட்சம் வரை, வேளாண் சார்ந்த மற்றும் உணவு பதப்படுத்தும் தொழில்கள், பண்ணை சாரா தொழில்கள், உற்பத்தி, சேவை மற்றும் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு கடன் உத்தரவாதத் திட்டத்தின் கீழ் கடன் வழங்கப்படுகிறது.
வங்கிகள் வழங்கிய கடன் தொகையை தவணை தவறாமல் உரிய காலத்திற்குள் திருப்பிச் செலுத்தும் பெண் தொழில் முனைவோருக்கு 1.5 லட்சம் ரூபாய் வரை நிலுவையில் உள்ள கடன்களுக்கான வட்டியில், 2 சதவீதம் மானியமாக வழங்கப்படுகிறது. பண்ணை சாராத தொழில்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்காக வங்கிகள் பிரத்யேகமாக கடன் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் இணைந்திருக்கும் சுய உதவிக்குழுவில் உள்ள அனைத்து தகுதியான உறுப்பினர்களும், இத்திட்டத்தின் கீழ் கடன் பெற, அவர்கள் வசிக்கும் பகுதியிலுள்ள ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு, சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர்கள் அல்லது கணக்கு வைத்திருக்கும் வங்கிக் கிளையை அணுகி விண்ணப்பிக்கலாம்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications