அண்ணாவின் 115வது பிறந்தநாள்.. கடமை கண்ணியம் கட்டுப்பாடு.. அதுவே அண்ணாவின் உயிர்மூச்சு
சென்னை: கடமை-கண்ணியம்-கட்டுப்பாடு என்ற அண்ணாவின் முழக்கம் தமிழகத்தில் புகழ் பெற்ற ஒன்றாகும் இதனை தன் வாழ்நாளில் கடைசி வரை கடைபிடித்தார் அண்ணா. அண்ணாவின் 115வது பிறந்தநாள் கொண்டாடப்படும் இந்த நேரத்தில் அவரைப்பற்றி இன்றைய இளம் தலைமுறையினர் அறிந்து கொள்வோம்.
தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத பெயர் அண்ணா என்று அழைக்கப்படும் சி.என்.அண்ணாதுரை. அண்ணா என்று ஒருவர் இல்லை என்றால் திமுகவும் இல்லை அதிமுகவும் இல்லை. தமிழக அரசியல் வரலாற்றை புரட்டிப்போட்ட அண்ணாதுரை 1909 செப்டம்பர் 15ஆம் தேதி காஞ்சிபுரத்தில் பிறந்தார். தமிழ்மொழி மீது மிகுந்த பற்றுடைய இவர் ஒரு சிறந்த எழுத்தாளர் மிகச் சிறந்த பேச்சாளர். பேச்சை கேட்கவே குவிந்த மக்கள் மெய் மறந்து ரசித்து கேட்பார்கள். நாவல், கட்டுரை, நாடகம் என பலவற்றை எழுதியுள்ளார். இவரது நாடகங்கள் இன்று வரை பலராலும் வாசிக்கப்படுகிறது.

காஞ்சிபுரம் பச்சையப்பன் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்த அண்ணா சென்னை பச்சையப்பன் கல்லூரியில் இன்டர்மீடியேட் படிப்பை முடித்தார். மிக சாதாரண குடும்பத்தில் பிறந்து சராசரி மாணவரைப் போலவே பள்ளிப்படிப்பை முடித்த அண்ணாவுக்கு, இந்த பச்சையப்பன் கல்லூரி வாழ்க்கையே திருப்புமுனையை ஏற்படுத்தியது. கல்லூரியில் தவறாமல் வகுப்புகளுக்குச் செல்கிற அண்ணா, தீவிரமான படிப்பாளி. நீண்ட நேரத்தை நூலகங்களில் செலவிடுகிறவர். கல்லூரிக் காலத்திலேயே தமிழ், ஆங்கிலப் பேச்சுப் போட்டிகளில் பங்கேற்றவர்.
சி.என்.ஏ. என்ற மூன்று எழுத்தால் அறிமுகமான அண்ணாதுரை தமிழ்நாட்டு அரசியலில் உருவான முதல் தளபதி. பெரியாரின் சீடராக வலம் வந்த போது அப்படிதான் அழைக்கப்பட்டார். அதன் பிறகு எல்லோருக்கும் அவர் அண்ணாதான். பெரியாரின் தளபதியாக இருந்த அண்ணா ஒரு கட்டத்தில் பெரியாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் அவரை விட்டு பிரிந்தார்.
பெரியாரை விட்டுப் பிரிந்து திராவிட முனேற்ற கழகம் என்ற தனி கட்சி கண்டார் அண்ணா. இருந்த போதிலும் பெரியாரை என் வாழ்க்கையில் நான் கண்டதும் கொண்டதும் ஒரே தலைவர் என்று மகுடம் சூட்டி தலைவர் நாற்காலியை அவருக்காக ஒதுக்கி வைத்தார்.
அண்ணா தொடர்ந்து மணிக்கணக்கில் பொது கூட்டங்களில் பேசக்கூடியவர்.அதுவும் அடுக்கு மொழியில் பேசுவதில் அவரை மிஞ்ச தமிழகத்தில் ஆள் கிடையாது. அண்ணா ஒரு கூட்டத்தில் வெறும் ஐந்து வினாடிகள் மட்டுமே பேசிய சம்பவமும் உண்டு. அது தேர்தல் நேரம். அவர் பேசியது "மாதமோ சித்திரை, மணியோ பத்தரை, உங்களை தழுவுவதோ நித்திரை, உதயசூரியனுக்கு இடுவீர் முத்திரை"......என்பதே அந்தப் பேச்சு.
திராவிட முன்னேற்ற கழகம் தேர்தலில் வெற்றி பெற்ற உடன் தமிழ்நாட்டின் முதல்வராக பதவியேற்றார் அண்ணா. இந்திய அரசியல் தளத்தில் மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாச்சி என்ற கருத்தை முன்வைத்தார் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஒரு நிலப்பரப்புக்கு அதன் முகவரியாக விளங்கும் 'தமிழ்நாடு' என்ற பெயரை சூட்டியவர் அண்ணா.
தமிழக அரசியலில் பிரதான ஆளுமையாக திகழ்ந்த இவர், முதல்வராக இருந்த போது கடந்த 1969 பிப்ரவரி 3ஆம் தேதி காலமானார். அண்ணாவின் மறைவு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். அண்ணா மறைந்தாலும் அவரது புகழ் மறையவில்லை.. அவர் சொன்ன கருத்துக்களும் தமிழகத்தையும் தமிழக மக்களையும் விட்டு மறையவில்லை.












Click it and Unblock the Notifications